தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, December 30, 2009

அஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை





விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் பதிவாகியுள்ளது. அவரைப்பற்றி ஆய்வு செய்துள்ள கடலூர் ஆசிரியை விஜயலட்சுமி இக்குறிப்புகளை சட்டமன்ற அலுவலகத்தில் பெற்றுள்ளார். அவர் அக்குறிப்புகளை அஞ்சலையம்மாளின் மகன் திரு ஜெயவீரன் அவர்களிடம் கொடுத்திருந்தார் நான் திரு. ஜெயவீரன் அவர்களிடமிருந்து பெற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பட வடிவில் வெளியிடுகிறேன். இதற்கு உதவியவர் அஞ்சலையம்மாளின் மகன் வழிப் பெயரன் திரு. அருணகிரி இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றிகூற கடமைப் பட்டுள்ளேன்.

Saturday, December 26, 2009

பூங்காக்களில் புத்தகம்


பூங்காக்களில் புத்தகம் என்ற திட்டத்தை நூலகத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி விருத்தாசலம் பெரியார் நகர் பூங்காவில் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் விருத்தாசலம் கிளை நூலகரோடு ஊழியர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி 26-12-2009 இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் சபாநாயகம், பதிப்பாளர் மருதம் ராஜேந்திரன், கவிஞர் பட்டி செங்குட்டுவன், நானும் சில பள்ளி மாணவர்களோடு பொதுமக்களும் கலந்து கொணடனர். அ.க.பெருமாள் எழுதி மருதம் பதிப்பகம் வெளியிட்டுள்ள படிக்கக்கேட்ட கதைகள் நூலை எழுத்தாளர் சபாநாயகம் வழங்க நூலகர் பெற்றுக்கொண்டார்.எனது நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன நிகழ்ச்சி சரியாக ஏற்பாடு செய்யப்படாமையால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் வெறும் சடங்காக மட்டுமே நிகழ்ந்தது.
நிகழ்வு

Tuesday, December 22, 2009

புதுவையில் ஒளி ஓவியப் பயிலரங்கு






புதுவை ஒளிப்படக்கலைஞர்கள் இணைந்து இளம்
ஒளி ஓவியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு
ஒன்றினை எக்சிகியூடிவ் இன் விடுதியில் ஏற்பாடு
செய்திருந்தனர். ஒளிப்படக் கலைஞர்கள்
முருகன், சரவணன், ராஜேஷ், சுரேஷ் ஆகியோர் மிகச்சிறப்பாக
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். புகழ் பெற்ற ஒளிப்படக்கலைஞர்
நெய்வேலி ஜான்பாஸ்கோ டிஜிடல் கேமிராவில் தெரிந்துகொள்ள வேண்டிய
அடிப்படை நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார்
ஒளி ஓவியர் மோகன் படத்தை ஒளியால் மெருகூட்டுவதற்கான
நுட்பங்களைப் பயிற்றுவித்தார். ஒளிப்படக்கலையில் 40 ஆண்டு
அனுபவமுடைய மூத்த கலைஞர் ஆசிரியர் விவேகானந்தன்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஒளிப்படக் கலைஞர்கள்
25 பேர் கலந்துகொண்டனர். நானும் பார்வையாளனாகக் கலந்துகொண்டு
படம் பிடிப்பதற்கான சில நுட்பங்களைக் கற்று வந்தேன்.
ஈடுபாட்டு உணர்வோடு அனவரும் பங்கேற்று பயிலரங்கை வெற்றியடையச்
செய்தனர். புதுச்சேரி ஒளி ஓவிர்கள் மன்றம் என்ற பெயரில் தொடர்ந்து இயங்குவது
என முடிவெடுக்கப் பட்டது. ஒளிப்படப்போட்டிகள் நடத்துவது என்றும் முடிவுசெய்துள்ளனர்.
அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்.

Saturday, December 19, 2009

புதிய வலைப்பதிவு

என் புதிய வலைப்பதிவைக்காண இங்கே சொடுக்குக

Monday, December 14, 2009

பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒத்திவைப்பு

திசம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகமும் திராவிட பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தவிருந்த பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கு சனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் காரணமாக இக்கருத்தரங்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இத் தகவலைக் கருத்தரங்க அமைப்புச்செயலர் முனைவர் கிருட்டிணாரெட்டி அவர்களிடம் அலைபேசியில் தொடர்புவொண்டு இன்று காலை உறுதி செய்தேன்.

Sunday, December 13, 2009

அவர்களும் இவர்களும் படத்தொடக்கவிழா








அவர்களும் இவர்களும் படத்தொடக்கவிழா விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் இன்று காலை நடைபெற்றது.தயாரிப்பு: கேப்டன் சி.காமராஜ், புத்தூர் க.திருமாறன்.இயக்கம்: வீரபாண்டியன்.ஒளிப்பதிவு: செங்குட்டுவன்நாயகர்கள் : விமல் நடராஜன், சதீஷ்.நாயகி : ஐஸ்வர்யாவிழாவில் இயக்குநர்கள் சுந்தரன், ஸெல்வன், விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் வ.க.முருகன், கவிஞர் ஆறு. இளங்கோவன், ஆதித்யாசெல்வம், தங்க வெங்கடேசன், உத்த.இராமச்சந்திரன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன்.நேற்றே நண்பர் திருமாறன் அழைத்திருந்தார்.படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.

Sunday, December 6, 2009

ஊற்றுக்கண்கள்

சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடி வரும் ஊற்று நீரை

கால்நடைகளின் உறும நேர உயிர்த்தண்ணீர் அது!
பீக் கருவை அடம்பினுள்ளிருக்கும்
அதன் ஆதி தேடி தாகம் தணிப்பர் ஆடு மேய்க்கும் சிறுவர்
அதைச் சேகரித்தே கல்லறுத்து
காளவாய் அமைத்தாராம் கள்ளிப்பாடியில் ஒருவர்

ஆற்றுக்குள்ளிறங்கும் எவரும்
அதில் கால் நனைத்தே கடந்து போக வேண்டும்

கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச்செல்வதற்கு அமைத்த
சாலைச் செம்மண் குருடாக்கித் தொலைத்தது
ஆற்றோர ஊற்றுக் கண்களை.

Tuesday, December 1, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம் 2010, மேத் திங்கள் 15,16(காரி,ஞாயிறு)கிழமைகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.பேராசிரியர் சபாபதி மோகன் அவர்கள்(துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) புரவலராக இருந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளார்.
பல்கலைக்கழகம்,கல்லூரிகள்,நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பேராளர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கலாம்.
பதிவுக்கட்டணம்
பேராளர் பதிவுக்கட்டணம் உருவா 500-00
உடன் வரும் விருந்தினர் கட்டணம் உருவா 150-00
கட்டணங்களை
ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION,MADURAI-625 020என்னும் முகவரியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.
கட்டுரை 5 பக்க அளவில் இருத்தல் வேண்டும்.
இலக்கியவியல்,இலக்கணவியல்,சமயவியல்,பண்பாட்டியல்/வரலாற்றியல் இக்கால இலக்கியம்,பல்துறை இயல் என்ற பிரிவுகளில் அமைத்தல் நலம்.
கட்டுரை,கட்டணம் இரண்டையும் சேர்த்து விடுத்து வைக்க நிறைவுநாள் 31.12.2009
பேராளர்களுள் நூலாசிரியர்கள் இருப்பின் அவர்கள் 2009 சனவரி-திசம்பர் காலத்தில் நூல் எழுதியிருப்பின் நூலாசிரியர் வாழ்க்கைக்குறிப்பு,
நூற்படி 2,பதிவுக்கட்டணம் 25 ஆகியவற்றைச் செயலர் முகவரிக்கு 31.01.2010 நாளுக்குள் அனுப்பவேண்டும்.நூலாசிரியர்கள் விழா அரங்கில் சிறப்புச் செய்யப்பெறுவர்.
தொடர்பு முகவரி:முனைவர் மு.மணிவேல்செயலர்,
.ப.த.மன்றம்,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625 0௨0
நன்றி: http://muelangovan.blogspot.com/

Sunday, November 29, 2009

மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு ஏற்ப செயல் ஆராய்ச்சி என்றொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன் கீழ் இவ்வாண்டு நான் மேற்கொண்ட செயல் ஆய்வினை இங்கு வெளியிடுகிறேன்.தலைப்பு...

மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்





முன்னுரை
தேர்வுகள் என்பவை மாணவர்களை மட்டும் மதிப்பிடுபவை அல்ல. அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் திறனையும் சேர்த்து தான் மதிப்பிடுகின்றன. ஓர் ஆசிரியர் எத்தகைய திறமை வாய்ந்தவராக இருப்பினும் அவரால் உருவாக்கப்படும் மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சியடைகின்றனர் என்பதைப் பொறுத்துதான் அவரது கற்பித்தல் பணி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஒரு கல்வியாண்டில் நடைபெறும் அனைத்துத் தேர்வு முடிவுகளும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்பிப்பதாகவே அமைந்து விடுகின்றன.
(2009 -10) நடப்புக் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கான விடைத்தாளில் எளிதாகப் பெற வேண்டிய மதிப்பெண்ணைக் கூட மாணவர்கள் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, அவற்றை நடைமுறைப் படுத்தி, முடிவுகளை எடுத்துக் கூறுவதாக இச்செயலாய்வு அமைந்திருக்கிறது.
ஆய்வுக்களம்
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு `அ’ பிரிவு மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் போது சமூகவியல் பாடத்தில் வரைபடத்திற்கு உரிய பத்து மதிப்பெண்களை முழுமையாக ஒருவர் கூட பெறவில்லை. அதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக மாணவர்களிடம் உரையாடிய போது அவர்கள் பலவாறு தெரிவித்தனர். அவை தொகுக்கப்பட்டதோடு, அவர்கள் வரைபட வினாக்களில் செய்த தவறுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக வினாத்தாளில் வரைபடம் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்களைக் காண்போம்.
வினாத்தாளில் இடம் பெற்ற வரைபட வினாக்கள்
விருத்தாசலம் கல்விமாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ள (2009-10ஆம் கல்வியாண்டு) காலாண்டுத் தேர்வுக்கான ஆறாம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் 54ஆவது வினாவில் உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவையாவன: பசுபிக் பெருங்கடல். ஆசியா, ஆப்ரிக்கா, வடஅமெரிக்கா, இந்தியா இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள்.
55ஆவது வினாவில் இந்தியப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அவையாவன: வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல், கொற்கை, வஞ்சி, இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள் ஆக மொத்தம் மாணவர்களின் வரைபடத்திறனுக்கு 10 மதிப்பெண்கள். ஆனால் யாரும் 10க்கு 10 மதிப்பெண் பெறவில்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் சில தவறுகளைச் செய்திருந்தனர்.
வரைபட வினாக்களில் மாணவர்கள் செய்த தவறுகள்
உலகப்படத்தில் ஒரு சில மாணவர்கள் கண்டங்களின் பெயர்களைக் கடல் பகுதியிலும், கடல்களின் பெயர்களைக் கண்டப்பகுதியிலும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாணவர் இந்தியப் படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை உலகப்படத்திலும், உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை இந்தியப் படத்திலும் குறித்திருந்தார்.
பெரும்பாலான மாணவர்கள் கண்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றி குறித்திருந்தனர்.
மாணவர்களின் தவறுகளுக்கான காரணங்கள்
வரைபடத்தில் போதிய பயிற்சியளிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் ஏன் இத்தகைய தவறுகளைச் செய்தனர் என்பது ஆராயப்பட்டது. தொடர் பயிற்சியும், வலுவூட்டலும் இன்மையால் இத்தகைய தவறுகளை மாணவர்கள் செய்திருக்கலாம் எனக் கருதியதோடு மாணவர்களிடம் கலந்துரையாடி தவறுகளுக்கான காரணங்கள் தொகுக்கப்பட்டன.
சமூக அறிவியல் வகுப்பின் போது மட்டுமே வரைபடத்தைப் பார்க்கும்வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது என்பது கண்டறியப்பட்டது.
கண்டங்களின் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது. படத்தைப் பார்க்கும் போது கண்டங்களின் அமைவிடம் குழப்பம் விளைவிப்பதாக நான்கு மாணவர்கள் குறிப்பிட்டனர்.
கண்டங்கள் எவை? கடல்கள் எவை? என்பதில் குழப்பம் ஏற்படுவதாக இரண்டு மாணவர்கள் கூறினர்.
இந்திய வரைபடத்தில் அரபிக்கடல் எது, வங்காள விரிகுடா எது என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாக மூன்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.
மாணவர்கள் விடைகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வரைபடங்களுக்குக் கொடுப்பதில்லை என்பது அவர்களின் கூற்றிலிருந்து உணர முடிந்தது.
வரைபடத்தின் அவசியத்தை மாணவர்கள் உணரவில்லை என்பதும் தெரியவில்லை.
வரைபட வினாக்களில் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
மேற்கண்ட தவறுகளைக் குறைப்பதற்கு முன்பு மாணவர்களிடம் வரைபடம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வரைபடங்களின் அவசியம் குறித்து எடுத்துக் கூறலாம். நம் அன்றாட வாழ்வில் வரைபடங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை எடுத்துக் கூறலாம்.
உலக உருண்டை, வரைப்படங்கள், நிலப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு முக்கிய நாடுகள், கண்டங்கள், கடல்கள், முக்கிய நகரங்கள் ஆகியவற்றின் அமைவிடங்களைக் காண்பித்து மாணவர்களை ஒவ்வொருவராகத் தனித்தனியே அழைத்து குறிப்பிட்ட பகுதியைக்காண்பிக்கும் படி கேட்கலாம். படிப்படியாக இது போன்ற பயிற்சிகளைசகமாணவர்களின் உதவியோடு குழுவாக மேற்கொள்ளச்செய்யலாம்.
வகுப்பறைச் சுவரில் வரைபடங்களை மாட்டி வைத்து மாணவர்களின்பார்வையில் படும்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும்மறதியைத் தவிர்க்கலாம். வரைபடத்திற்கென தனிப் பயிற்சி ஏடுகளை மாணவர்களுக்கு வழங்கி செயல் முறைப் பயிற்சியளிக்கலாம்.வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
முதலில் மாணவர்களுக்கு வரைபடத்தின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரைபடங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பன பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.
வரைபடத்தின் அவசியம்
வரைபடத் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதன் மூலம் பாடக் கருத்துகளைக் கண்முன் காட்சிப் படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் பற்றியும், நாட்டின், மாநிலத்தின் எல்லைகள், தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், முக்கிய சாலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வரைபடங்கள் அவசியம் என்பது மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
வரைபடத்தின் பயன்கள்
இன்று வரைபடம் பல துறைகளிலும் பயன்படுகிறது. குறிப்பாக இராணுவத்துறையில் வரைபடத்தின் உதவியோடு தான் இடங்களை அடையாளம் காண்கின்றனர். சுற்றுலா செல்பவர்கள் புதிய இடங்களை வரைபடத்தின் உதவியோடு தெரிந்து கொள்கின்றனர். நேரில் செல்லாத பல உலக நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு இயற்கை அமைப்புகள் பற்றியும் வரைபடத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். என்பன போன்ற வரைபடத்தின் பயன்களை வலியுறுத்தும் கருத்துகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.வழங்கப்பட்ட பயிற்சிகள் மாணவர்களின் வரைபடத்திறனை மேம்படுத்தும் பொருட்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கட்டகத்திலுள்ள (வரைபடத்திறன் தெரிந்து கொள்வோமா?) அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
* கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள் ஆகியவற்றின் வடிவங்களை உற்று நோக்கி எவை ஒத்தவை என்று கண்டறிந்து பெயர்களை எழுதுதல்.
* திசைகளறியும் பயிற்சியாக பல்வேறு திசைகளை நோக்கி அம்புக்குறிகள் வரைந்து, அம்புக் குறிகள் காட்டும் திசையைக் கூறச்செய்தல்.
* அட்சக்கோடுகள், தீர்க்கக் கோடுகளைக் கொண்டு நாடுகளின் அமைவிடங்களைக் கூறும் முறையைக் கற்பித்தல்மேற்கண்ட பயிற்சிகள் மூலம் மாணவர்கள் வரைபடங்களில் திசைகள், அளவுகள், நாடுகளின் அமைவிடங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.
மேலும் வரைபடங்கள், நிலப்படங்கள், உலக உருண்டை ஆகியவற்றைக் கொண்டு தொடர் பயிற்சியளிக்கப்பட்டது. ஒரு வாரகாலப் பயிற்சிக்குப் பிறகு மாணவர்களின் வரைபடத்திறன் சோதிக்கப்பட்டது.
அத்தேர்வில் போதிய முன்னேற்றம் காணப்பட்டது. காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் வரைபட வினாக்களில் பெற்ற மதிப்பெண்களைத் தொடர் வலுவூட்டல் பயிற்சிக்குப்பிறகு பெற்ற மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது உணரப்பட்டது.தொடர் நடவடிக்கை
மாணவர்களுக்கு அவர்களின் குழுத் தலைவர்கள் மூலம் தொடர் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. இதுபோல் பிற வகுப்புகளிலும் வரைபடத் திறன் குறைந்த மாணவர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி வழங்குமாறு தொடர்புடைய ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறபோது வரைபடங்களைப் பயன்படுத்திட வேண்டுமாய் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தந்த வகுப்பறையில் உலக, இந்திய வரைபடங்களை மாணவர்களின் பார்வையில் படுமாறு மாட்டி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவுரை
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இச்செயலாய்வு முடிவு அமைந்துள்ளது. மாணவப் பருவம் விளையாட்டுப் பருவம் எதையும் உடனுக்குடன் மறந்து விடுவது அவர்களின் இயல்பு எனவே தொடர்பயிற்சியின் மூலம் வலுவூட்டி அவர்களின் மனத்திலிறுத்தினால் கற்றல் செயல்பாடு வெற்றி அடையும் என்பதை இச்செயலாய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.
போதிய வலுவூட்டலின்மையால் தேர்வில் எளிதாகப் பெறவேண்டிய பத்து மதிப்பெண்களை மாணவர்கள் இழக்க நேரிடுகிறது என்பதால் இச்செயலாய்வு முடிவு (உயர்தொடக்க வகுப்புகளுக்குக் கற்பிக்கும்) அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டு அதன் விளைவாக அவர்களும் மாணவர்களுக்கு வரைபடத் திறனை வலுவூட்டிவருகின்றனர்.

Saturday, November 28, 2009

நிகழ்வுகள்

நான் கடந்த சில ஆண்டுகளில் பங்கேற்ற நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே பதிவுசெய்கிறேன்.





09-11-2009 அன்று விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில்.
01-08-2008 அன்று பட்டிமன்ற நடுவர் நவஜோதி அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்.


01-04-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற விழாவில் கவிஞர் லலித்குமாருக்கு இனம் காத்த இளம் தமிழர் விருது வழங்கியபோது.


2004 சனவரி 02-07 வரை புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கதைத் திருவிழாவில் பங்கேற்றபோது



26-02-2009 அன்று கவிஞர் அறிவுமதி அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்.




15-01-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில்





14-01-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு எழுச்சி விழாவில் ஆழி இலக்கிய இதழை வெளியிட்டபோது.






14-12-2008 இல் சென்னையில் லீ ராயல் மெரிடியன் விடுதியில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்றபோது எடுத்த படம்.






நிகழ்வுகள்


16-10-2008 அன்று முனைவர் நன்னன் அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்

Friday, November 27, 2009

இலக்கிய மன்றத் தொடக்க விழா











விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கியமன்றத் தொடக்க விழா 27-11-2009 அன்று மாலை நடைபெற்றது. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி இலக்கிய மன்னத்தைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டுவதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உருவா 10 இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.




மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை தமிழாசிரியர் கலையரசி ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்த்தினார் தேசியமாணவர்படை,நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு வரவேற்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். கல்விக்குழு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பிரகாசம் வரவேற்க உதவி தலைமை ஆசிரியர்கள் குமுதம், வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கென்னடி,மாப்பிள்ளை மொய்தீன், நீதிராஜன்,கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலக்கியமன்ற செயலராகிய நான் நன்றி கூற விழா நிறைவுற்றது.

Saturday, November 7, 2009

பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்




திசம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகமும் திராவிட பல்கலைக்கழகமும் இணைந்து பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கினை நடத்த உள்ளன. ஆந்திர மாநிலம் குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் நடைபெறும்
இக்கருத்தரங்கின் மையப் பொருள்கள்:
1.மரபுவழி அறிவு முறை
2.சடங்கு நிகழ்த்து மரபுகள்
3.நாட்டுப்புறவியல் பயன்பாடு
நாட்டுப்புறவியல் சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கலாம்.கட்டுரை அனுப்பக் கடைசிநாள்:10-12-2009பதிவு செய்திடக் கடைசி நாள் :30-11-2009பதிவுக்கட்டணம் : ரூ.500.(வாழ்நாள் உறுப்பினர்களுக்கு ரூ.300.மாணவப் பேராளர்களுக்கு ரூ.400.)
பதிவுக்கட்டணம் அனுப்ப வேண்டிய முகவரி:Dr.P.Doctor Nazeemdeen,Treasurer,FOSSILS,Senior Fellow,Beschie Chair for Tamil studies,Sri Krishnadevaraya Silpavani, Dravidan University,Kuppam-517 425.(DD drawn on any Nationalised Bank payable at Kuppam in favour of Treasurer,FOSSILS.)
கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி:Dr.B.Krishna Reddy,Organising seceretary of InterNational Folklore conference, Department of Folklore and Traibal Studies, Dravidan University, Srinivasavanam,Kuppam-517 425,e.mail: battenakr56@yahoo.co.in
Cell: 91 9441080736.
கருத்தரங்கில் ஒளிப்பட,காணொளி கண்காட்சிகளும் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புபவர்கள் முன்னரே தகவல் தருதல் நல்லது.இணையத்தில் பதிவு செய்ய: fossils09@gmail.com

Thursday, November 5, 2009

உலகம் சுற்றும் தமிழ்

அயலகத்தமிழறிஞர்கள்
மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம்இடைக்கட்டுஉள்கோட்டைகங்கைகொண்டசோழபுரம்- 612 901.பக்கம்:200விலை: ரூ.200


அறிவியல் துறை அறிஞர்களின் பணி வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அளவுக்கு மொழியறிஞர்களின் பணி அறிமுகப்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாகத் தமிழ் அறிஞர்கள் அம் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் பொது வாசகர்களுக்கும் மாணவர் உலகுக்கும் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை.இக்குறையைப் போக்கியிருக்கிறார் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் 'அயலகத்தமிழறிஞர்கள்' என்னும் நூலின் வாயிலாக. உலகத்தமிழறிஞர்களை உலகத்தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல். தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் இருபத்தைந்து வாரங்கள் தொடராக வெளி வந்து வாசகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளோடு மேலும் ஐந்து கட்டுரைகள் சேர்க்கப்பட்டு முப்பது தமிழறிஞர்கள், அவர்தம் பணிகள் பற்றிய அரிய செய்திகளை தமக்குள்ள உலாகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி சேகரித்து நூலாக்கியுள்ள இளங்கோவனின் முயற்சி பாராட்டப்படவேண்டியது. இத்தொடரை வெளியிடுவதற்குப் பெரிதும் துணைநின்ற களஞ்சியம் பொறுப்பாசிரியர் யாணனின் பங்கு வெளியுலகம் அறியாதது. நம் தமிழ்மொழி உலகெங்கும் பரவுவதற்கு பல்வேறு நாடுகளிலுள்ள அயல் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் எவ்வாறெல்லாம் பங்களித்திருக்கின்றனர் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவதாக அமைந்திருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு. வெறும் தகவல்களாகமட்டும் வரண்டுவிடாமல் படிப்போர் மனத்தில் தமிழுணர்வு ஏற்படும்படி சுவையான பல கூடுதல் தகவல்களையும் அளித்து வாசிப்புத் தன்மையுள்ள நூலாக்கியிருப்பது நூலாசிரியரின் தனித்திறன். உலகக் கல்விப் புலங்களோடு ஒப்பிடுகையில் துறை சார்ந்த செய்திகளை ஆவணப்படுத்துகின்ற வழக்கம் தமிழ்நாட்டுக் கல்விப்புலங்களில் குறைவாகவே உள்ளது.நம் கல்வி நிறுவனங்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் ஆற்ற வேண்டிய பல பணிகளை தனிநபர்கள் பலர் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றனர்.அந்த வரிசையில் நண்பர் இளங்கோவனின் இப்பணியும் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. தன்னால் இயன்ற வரை தகவல்களைப் பல்வேறு சிரமங்களுக்கிடையிலே தொகுத்தளித்ததோடு நடுநிலையாகவும் செய்திகளை அளித்திருப்பதாக்கூறுகிறார்.நூலாசிரியரின் விமர்சனப்பார்வையைத் தவிர்த்திருக்கிறார். இது இன்றுள்ள இலக்கிய அரசியலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்கிற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம். எப்படியிருப்பினும் இளங்கோவனின் இம்முயற்சித் தமிழ் உலகம் போற்றி வரவேற்கத்தகுந்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற விருக்கின்ற இன்றைய சூழலில் இந்த நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.இளங்கோவனின் முயற்சி ஒரு தொடக்கம்தான் இதனைத் தொடர்ந்து இந்தூலில் விடுபட்டுள்ள அறிஞர்களை, அவர்தம் பணிகளை நூலாக்க முயற்சி மேற்கொள்ளலாம். தமிழ் மொழி , தமிழறிஞர்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்குக் கையேடாக இந்நூல் திகழும். ஆய்வு மாணவர்களுக்கும் பயன்தரத் தக்க நூலாக இது அமையும்.வடிவமைப்பும் அச்சமைப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன.பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூலிது. நன்றி: அம்ருதா நவம்பர்-2009
http://mankavuchi.blogspot.com/

Saturday, October 31, 2009

கவிஞர் கீதாஞ்சலியின் படைப்புலகம்


'எச்சரிக்கைகள் ஏமாறும்'-கதை மூலம் 90 களில் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி பிரியதர்சினி. அதனைத்தொடர்ந்து அவர் எழுதிய கதைகள் மறந்து போன குரல்கள் என்னும் தொகுப்பாக 2000 இல் வெளியானது.இந்நூலுக்கு சேலம் நாகப்பன் ராசம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டது. தொகுப்புக்கு வந்த விமர்சனங்கள் இவரது எழுத்தை செழுமையாக்க உதவின. கவிதைகளின் மீது தன் கவனத்தைத் திருப்பிய கீதாஞ்சலி மாற்று, உயிரெழுத்து, புதிய பார்வை போன்ற இதழ்களில் கவிதை எழுதி தன் படைப்புகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டார். 2008 இல் 'அவனைப்போல் கவிதை ' நூல் வெளியானது. அந்நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது. இவரது இலக்கியப் பயணத்தில் நல்லதொரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் கவிஞர் பிரம்மராஜன். அவர் நிகழ்த்திய 'பெண் எழுத்தாளர் இலக்கிய சந்திப்பு 2000'- கருத்தரங்கு பல புதிய படைப்பாளிகளை அறிமுப்படுத்தியது. கீதாஞ்சலியின் கவிதைகள் அவர் சூழலில் வாழும் அசலான மனிதர்களை அவர்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டவை. "நான் அறிந்த சமூகத்தில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் கண நேரம் வந்து போன நிகழ்வுகளின் பாதிப்பால்தான் இத்தகைய கதைகளை எழுதினேன்" என்று கூறும் கீதாஞ்சலியின் படைப்புகளில் நுட்பமான அழகியல் இழையோடுவதை நாம் உணரலாம். கீதாஞ்சலியின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக வார்த்தைச் சிக்கனம் காரணமாய் விளையும் இறுக்கத்தைச் சொல்லலாம் என்கிறார் பிரம்மராஜன். விழி பா.இதயவேந்தனும் அன்பாதவனும் தொகுத்துள்ள பெண் படைப்புலகம் இன்று என்றநுலில் கீதாஞ்சலி எழுதியுள்ள கட்டுரை சிறந்த திறனாய்வு நோக்குடன் பெண் படைப்புகளை மதிப்பீடு செய்வதாக அமைந்துள்ளது. இவரிடமிருந்து பல புதிய படைப்புகள் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இவரது எழுத்துகள் ஏற்படுத்துகின்றன.
கீதாஞ்சலியின் கவிதையில் ஒரு பகுதி
"ஒரு குவளை நிரம்பும்குளிர்ந்த தண்ணீருக்கெனமீன்களுடன் நிறைந்திருக்கும்இந்த ஆற்றைத் தரமுடியுமாவிறகுக்கெனஇருள் கவியும் வனங்களை."
அச்சமில்லை இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். http://tamilmanam.net

Wednesday, October 28, 2009

சுயசிந்தனையை வளர்க்கும் படைப்பாற்றல் கல்வி





தமிழக அரசு கல்வித்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகளில் புதிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது.விஜயகுமார் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது ஆந்திர மாநிலத்தில் ரிசிவேலி பகுதியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய பள்ளியில் ஏ.பி.எல். எனப்படும் செயல் வழிக் கற்றல் என்ற இக்கற்பித்தல் முறை பின்பற்றப் படுவதையறிந்து சென்னை மாநகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் சில பள்ளிகளில் நடைமுறைப் படுத்திப்பார்த்து எல்லா பள்ளிகளுக்கும் இக் கற்பித்தல் முறை பரவலாக்கப்பட்டது.ஒன்று முதல் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இம்முறையில் கற்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் படிப் படியாக இம் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.ஏ.பி.எல். வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்க மாட்டார் மாறாக மாணவர்கள் கற்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பார்.பாடங்கள் புத்தக வடிவில் இருக்காது குழந்தைகள் கையாள்வதற்கு வசதியாகத் தனித் தனி அட்டைகளில் அமைந்திருக்கும். அவரவர் திறமைக்கேற்ப படிப்படியாகக் கற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் நான்கு வகுப்புகள் வரை பயிலும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரும்போது மீண்டும் பழைய முறையில் கற்கவேண்டியுள்ளதே என யோசித்த அரசு மேல் வகுப்புகளிலும் புதிய முறையைப் புகுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அதன் விளைவாகத்தான் ஏ.எல்.எம். எனப்படும் படைப்பாற்றல் கல்வி முறையை ஆறு முதல் எட்டு வகுப்பு வரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்தியது. இந்த முறையிலும் மாணவர்கள் குழுவாகப் பிரிந்து பாடத்தைத் தாங்களே கற்க வேண்டும். கடினமான சொற்களை பென்சிலால் அடிக்கோடிட்டு அச்சொற்களுக்கான அர்த்தத்தைத் தங்கள் குழுவிலோ பிற குழுக்களிடமோ ஆசிரியரிடமோ தெரிந்து கொள்வார்கள்.அதன் பிறகு பாடக் கருத்துகளைச் சுருக்கி மன வரைபடமாகத் தங்களுக்கு புரியும்படி வரைந்துகொண்டு முக்கிய கருத்துகளைத் தொகுத்து வகுப்பில் வழங்குவார்கள். தொகுத்தலில் விடுபட்ட கருத்துகளைப் பிற குழுவினர் சுட்டிக் காட்ட வேண்டும். இப்படி பாடக்கருத்துகளை மாணவர்கள் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு இம்முறை நிச்சயம் துணை செய்கிறது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இக்கற்பித்தல் முறையை ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த மாணவர்களுக்கு சுய கற்றல் முறை ஏற்றதுதான். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை அதற்கு உகந்ததாக இல்லை என்பது அவர்கள் வாதம் அதில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அவற்றையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் இம்முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள எருமனூர் நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியை கலைச்செல்வி. எப்படி இவருக்கு இது சாத்தியமானது என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக அப்பள்ளிக்குச் சென்றோம் இவரது வகுப்பறை மட்டுமல்ல அப்பள்ளியின் அனைத்து வகுப்புகளுமே முன்மாதிரியாக உள்ளன.மாணவர்கள் குழுவாக வட்ட வடிவில் அமர்ந்து படிக்க வேண்டும் என்பதால் வகுப்பறைக்குள் ஐந்து வட்டங்கள் வரையப்பட்டுள்ளன அது குறித்து கலைச்செல்வி கூறும்போது," அந்த வட்டத்தில் மாணவர்கள் அமர்ந்துவிடுகின்றனர் இதனால் அவர்களை வட்டவடிவில் அமரச்செய்யும் நேரத்தை மிச்சப் படுத்தமுடிகிறது.ஆரம்பத்துல ரொம்ப கஸ்டமாத்தான் இருந்துது. இதுக்காக நம்மள தயார் படுத்தி இந்தமுறை எப்படித்தான் இருக்குண்ணு சோதிச்சுப் பாத்துடனும்குற உத்வேகத்துல இந்தமுறையில கற்பிக்கறதுல என்னென்ன இடர்பாடுகள் இருக்குன்னு கண்டுபிடுச்சு ஒவ்வொண்ணா களைய ஆரம்பிச்சு இன்னைக்கு எனக்கு ரொம்ப ஈசியா ஆயிட்டுது. இன்னைக்கு எங்கிட்ட எட்டாம் வகுப்பு படிக்கிற பசங்க ஆறாவதுல கடினச் சொற்களை அடிக்கோடிடச் சொன்னா ஒரு சொல் விடாமாட்டாங்க. இன்னைக்கு சொற்களோட எண்ணிக்கை கொறஞ்சிருக்கு அவங்க படிக் ஆரமிச்சிட்டாங்க அவங்க எப்படி படிச்சு புரிஞ்சுக்கிறதுன்னு தெளிவாயிட்டாங்க. அவங்களுக்குள்ள விவாதம் பண்ணிக்கிறாங்க புதுப் புது சிந்தனைகளுக்கு வழி வகுக்கறதா இருக்கு அவங்க விவாதம். நமக்கே ஆச்சரியமா இருக்கு" என்று கூறும்போது அவர் முகத்தில் பரவசத்தைக்காண முடிந்தது. நாம் வகுப்புக்குள் சென்றபோது உயிரியல் பாடம் நடந்துகொண்டிருந்து. மாணவர்கள் பாடக்கருத்துகளைத் தொகுத்து வழங்கியதைக் காண நேர்ந்தது. செல் ஸ்லைடுகளை மைக்ராஸ் கோப்பில் வைத்து ஆசிரியர் விளக்க மாணவர்கள் எதிர்பாராத கோணங்களில் கேள்விக் கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தனர் ஆசிரியையும் சலிக்காமல் விடையளித்துக்கொண்டிருந்தார்.வகுப்பு உயிரோட்டமாக இருந்தது." இதுதான் சார் பழைய மெத்தேடுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம். பழய மெத்தேடுல சில பகுதிகள நாம விட்டுட்டு கூட நடத்தலாம். இதுல அது மாதிரி செய்ய முடியாது. ஒவ்வொரு வார்த்தையையும் பசங்க படிக்கிறதுனால பாடத்துல இருக்குற ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம அர்த்தம் தெரிஞ்சு வச்சிருக்கணும். இல்லண்ணா இவங்கள சமாளிக்க முடியாது". என்று கூறியபடி பாடக் கருத்துகளைத் தொகுத்தளிக்க மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு குழுவினரும் தங்களால் தொகுக்கப் பட்ட கருத்துகளை அக்குழுவின் தலைவர் வழியாக வழங்கினர். அப்போது அவர்கள் விட்ட கருத்துகளை பிற குழுவினர் எடுத்துரைக்க சூடு பிடிக்கத் தொடங்கியது வகுப்பறை முதல் குழுவின் தலைவி அனுசுயா தாவர செல்களிலுள்ள பாகங்களைப்பற்றிக் கூற இன்னொரு குழுவின் தலைவி காயத்ரி எதிர் வினா எழுப்ப ஆசிரியர் உதவிக்கு வர ஒரு ஜனநாயகமான வகுப்பறைச்சூழல் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. கல்வியாளர்கள் விரும்பிய மாணவர் சுதந்திரத்தை ஏ.எல்.எம். வகுப்பறையில் கண்கூடாகக் காண நேர்ந்தது. மாணவி அனுசுயாவிடம் பேசிய போது," இந்த முறையில நாங்களே படிக்கிறதனால வரி வரியா படிச்சி பாடத்தப் புரிஞ்சிக்கிறோம். தெரியாத வார்த்தைக்கு எங்க டீச்சர் அர்த்தம் சொல்லுவாங்க. நாங்க குழுவுல கலந்து பேசும்போது ஒருத்தருக்கு தெரியாத கருத்த இன்னொருத்தர்கிட்டயிருந்து தெரிஞ்சிக்குவோம். நாங்க ஏ.எல்.எம். முறையில பாடம் படிக்கிறதுனால கேள்வி - பதில் படிக்கணுங்கிற அவசியம் இல்ல. தொகுத்து எழுதும்போது நாங்களே கேள்விய தயாரிக்கிறோம். அதுக்கான பதில் நாங்க தொகுத்ததுலயே இருக்கறதனால இன்னொரு வாட்டி படிக்கணுங்கிற அவசியமில்ல" என்றாள் அழகாக. எங்க வகுப்புல பொம்பள புள்ளைங்கதான் அதிகம். அவங்க கூட பேச கூச்சமா இருக்கும். இப்ப ஒரே குழுவுல இருக்குறதனால கூச்சமில்லாம பேசுறோம். யாரு அதிக மார்க் வாங்குறதுன்னு போட்டி போட்டு படிக்கிறோம்." என்று இந்தக் கல்வி முறையின் இன்னொரு அத்தியாயத்தை எடுத்து வைத்தான் மாணவன் பன்னீர்செல்வம். அனைவருக்கும் கல்வி இயக்க விருத்தாசலம் ஒன்றிய மேற்பார்வையாளர் அந்தோணிசாமி எருமனூர் பள்ளி பற்றி கூறும்போது, "நான் ஒவ்வொரு முறை விசிட் போகும்போதும் இந்த பள்ளியில நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடந்திருக்கும் .தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கிடையில ஒற்றுமையான செயல்பாடுகள் இருக்கும். குறிப்பா கலைச்செல்வியோட வகுப்பு திருப்திகரமா இருக்கும். எருமனூர் பள்ளிய மாதிரி பள்ளியா தேர்ந்தெடுத்துருக்கோம்னா அது ஆசிரியர்களின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி." என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். நன்றி: அவள்விகடன்

Sunday, September 27, 2009

சாமான்ய மக்களின் தலைவர் சாமிக்கண்ணு



தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.

நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,

Monday, September 7, 2009

வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா




வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா
ஆலத்தியூர் வித்யா மந்திர் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சிறப்புரையாற்ற அப்பள்ளித் தமிழாசிரியர் பூ.மணிவண்ணன் அழைத்திருந்தார்.தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கு என்ற தலைப்பில் பேசும்படி குறிப்பிட்டனர் மாணவர்களுக்கேற்ப சற்று பேச்சில் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருந்தது. மாணவர்கள் சிறப்பாக கவனித்த விதம் மகிழ்ச்சியளித்தது.தமிழாசிரியர் வீரமணியின் வரவேற்புரை இலக்கிய நயத்தோடிருந்தது. மணிவண்ணன் மன்றத்தின் குறிக்கோள்களைக் கூறி என்னை அறிமுகப் படுத்தினார்.தாளாளரும் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளருமான (நிர்வாகம்) திரு.மதன்மோகன் தலைமையுரையில் இனி வருங்காலங்களில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கென்று ஒரு நாள் ஒதுக்கி சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.பள்ளியின் முதல்வர் திருமதி இராதாரவீந்திரன் அவர்கள் பெண் எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பற்றி மாணவிகளிடம் வினவி தன் பள்ளிப் பருவ நாட்களை நினைவுகூர்ந்தார். ஓசூரில் பணியாற்றுகின்ற தோழர் மதியழகன் இன்று அறிமுகமானதோடு நிகழ்ச்சியிலும் பங்கேற்று இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடினார் அவரது வலைப்பக்கம் பற்றியும் கூறினார்.http://mathikavithaigal.blogspot.com/ பள்ளி நூலகத்தை முதல்வர், மணிவண்ணன், நூலகர் ஆகியோருடன் பார்த்தோம் ஒரு கல்லூரி நூலகத்தைப்போல் மாணவர்கள் அமர்ந்து படிக்கப் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.நல்ல பல நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்தபோது அரசு பள்ளிகளில் இது போன்று அமைக்க இயலவில்லையே என்னும் ஏக்கம் எழுந்தது.மரம், செடிகொடிகள், புல்வெளி என இற்கை எழில்கொஞ்சும் சூழலில் பள்ளி அமைந்திருப்பது சிறப்பம்சம்.

Friday, September 4, 2009

ஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.





(ஆறு ஆண்டுகளுக்குமுன் எனக்கு வந்த கடிதம் இது. ஆசிரியரும் கல்வியாளரும் என் தந்தையின் நண்பருமான திரு. மு.கதிர்வேல் அவர்கள் எழுதியது. குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக என் மாணவர்கள் மேற்கொண்ட நெல்வயலில் மீன் வளர்க்கும் ஆய்வுத்திட்டம் பற்றி ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் என்னை இன்றும் ஊக்கப்படுத்தி வருகிறது. நம் பணியை நம் துறைசாட்ந்த வல்லுநர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி அலாதியானது. இந்த ஆசிரியர் தினத்தில் உங்களோடு பகிர்ந்துகொளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.)
ஓட்டேரிவிரிவுப்பகுதி
1.12.2003
அன்புள்ள புகழேந்திக்கு,
எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
நீ மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சி பற்றி ஆனந்தவிகடனில் வெளியான செய்திகளைப் படித்து புளகாங்கிதம் அடைந்தேன். ஓர் ஆசிரியர் ஏட்டிலுள்ள பாடங்களை மட்டும் படித்துக்காட்டி பொருள் கூறி மாணவர்களைத் தேர்விற்கு தயார் செய்யும் ஒரு சராசரி மனிதனாக மட்டும் விளங்கினால் பயனே இல்லை. நேர்மை, கடின உழைப்பு, தியாகம், பாசம் ஆகியவற்றுடன் மாணவர்களைப் புத்தாக்கம் புனையக்கூடியவர்களாக பரிணமிக்கச் செய்யும் ஒரு மாமனிதனாக ஓர் ஆசிரியர் செயலாற்ற வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை உடையவன் நான். இக்குணங்களைப் பெற்று ஒரு முன்மாதிரி ஆசிரியராய் நீ விளங்குகிறாய் என அறிந்து பெருமையடைகிறேன். 'ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள' என்ற திருப்பாவையின் வரிக்கு நம்மூர் வளத்தினையே எடுத்துக்காட்டாக அன்றும் இன்றும் என்றும் கூறிப் பெருமிதம் அடைபவன் நான். நீயும் அதே பாணியில் எழுதியிருப்பது என்னைக் கவர்ந்தது. நான் 1962-63 இல் ஆதனூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றியபோது அப்பகுதி மாணவர்களிடம் பொதிந்திருந்த திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்ந்தேன் என்பதை உன் அப்பாவைக் கேட்டுப்பார் தெரியும். உனது மாணவர்கள் இயற்கையிலேயே திறமை உள்ளவர்கள். அவர்களது அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து மேம்பாடடையச்செய்யும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருப்பது உனது தொழிலில் நீ ஏற்படுத்திக்கொண்ட கமிட்மெண்ட்டை காட்டுகிறது. மாணவர்களின் மனதைப் பக்குவப்படுத்தி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடச் செய்வதில் நானும் ஈடுபடுவேன். இனி வெறும் போதனையாளர்களுக்கு மரியாதை கிடையாது. சாதனையாளர்களுக்கு தான் மரியாதை. எனவே நீ அனைத்து தரப்பினரின் அரவணைப்பையும் பெற்று மாணவர்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் திறன் மிக்கவர்களாக நல்ல அனுபவ சாலிகளாக உருவாக்கு. எனது நல் வாழ்த்துகள் உனக்கு துணை நிற்கட்டும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்றும் அன்புடன்,
மு.கதிர்வேல்.

Wednesday, July 29, 2009

காந்தி ஒரு மகாத்மாவா?-அம்பேத்கர் பதில்

1938 ஆம் ஆண்டு சித்ரா என்ற மராத்தி இதழின் தீபாவளி மலரில் வெளியான அம்பேத்கரின் கட்டரையிலிருந்து சில பகுதிகள். காந்தி ஒரு மகாத்மாவா? இந்த கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது. நான் எல்லா மகாத்மாக்களையும் வெறுக்கிறேன், அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபத்தீடு எனக் கருதுகிறேன். தனது உடையை மாற்றுவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். சத்தியத்தையும், அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். உண்மையும், அகிம்சையும் காந்தியினுடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழ்ந்து ஆராயும்போது, அவருடைய குணாம்சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்கிறேன். வட்ட மேஜை மாநாட்டின் போது," தாழ்த்தப் பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் எந்த ஆட்சேபணையும் எழுப்ப மாட்டேன் " என்று கூறினார். ஆனால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்த உடனேயே காந்தி, தான் அளித்த உறுதி மொழிகளையெல்லாம் ஓசை படாமல் மறந்து விட்டார். அவர் முஸ்லிம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் எதிர்த்தால், அவர்களுடைய முஸ்லிம்களின் 14 கோரிக்கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன் கூட இதைச் செய்திருக்கமாட்டார். இது காந்தியின் துரோகத்திற்கு ஓர் உதாரணம் மட்டுமேயாகும். காந்தியன் அரசியல் பொருளற்றதும் ஆரவாரமானதுமாகும். இந்திய ஆட்சி அரசியலின் வரலாற்றில் அது மிகவும் நேர்மையற்ற அரசியலாகும். அரசியலிலிருந்து நேர்மை அகற்றப்படுவதற்கான பொறுப்பு காந்தி என்ற மனிதரையே சாரும். அதற்கு பதிலாக இந்திய அரசியலில் வர்த்தகத் தன்மையைக் கொண்டு வந்தார். அரசியலிலிருந்து அதனுடைய நற்பண்பு அகற்றப் பட்டுவிட்டது. இந்தியப் பொது வாழ்விலிருந்து காந்திஜியின் தீங்கான மகான் தன்மையுடன் கூடிய கோமாளித் தனங்களை எவ்வாறு போக்குவது என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.
ஆதாரம்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-36. வெளியீடு: சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு அமைச்சகம், இந்திய அரசு.
விற்பனை உரிமை: நியூ செஞ்சுரி புக் அவுஸ்.
முக்கியமான இரண்டு ஆளுமைகளின் மனப்போக்கினை வெளிப்படுத்தும் இக்கட்டுரை நமக்கு பலவற்றை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

Tuesday, July 14, 2009

பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.


பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.

V.O.Chidambaram பிள்ளாய் KOILPATTI,S.I.R.

PLEADER 6-6-28


அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

சேமம். சேமத்துக்குக் கோருகிறேன்.

நாகப்பட்டணத்திலும்,கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லாருக்கும் அசந்தோசத்தை உண்டு பண்ணியது. ஒருவாறு இரண்டிடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம். இப்பொழுது உங்கள் உடம்பு பூரண சவுக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால் நீங்கள் எப்பொழுது சென்னைக்குச் செல்லுதல் கூடும். என் மகன் school final examinationல் தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்கவைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்டு மெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபார்சு இருந்தால், முதலிலேயே Inspector ஆகலாம் சாதாரண சிபார்சு இருந்தால் முதலில் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபார்சு நமக்குக் கிடைக்குமா என்பதைப்பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்


(தேச விடுதலைக்காக பாடு பட்ட ஒரு மாபெரும் தலைவரின் இக்கடிதம் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து கப்பல் வாங்கிய வ.உ.சி.யால் மகனை பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க இயலாமல் போனதும், வேலைக்கு சரியான பரிந்துரை கிடைக்குமா என தயங்கிய படி பெரியாரிடம் கேட்டிருப்பதும் இன்று நடக்குமா? கடவுள் இல்லை, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய பெரியாருக்கு எழுதிய கடிதத்திலேயே கடவுள் துணை என்று எழுதிய வ.உ.சி. எவ்வளவு வெளிப்படையான மனிதர் பாருங்கள்.)

Thursday, July 9, 2009

கிராமத்து விளையாட்டுகள்


கிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, விலை ரூ. 55. ISBN: 978-81-8476-126-9. நூலைப்பற்றி: விளையாட்டு ஒரு சமூகத்தின் தொன்மையை, பண்பாட்டு மூலங்களை தன்னுள் சேகரித்து வைத்திருக்கிறது. எல்லா துறைகளிலும் நம் பண்பாட்டு அடையாளங்களை இழந்து வரும் இன்றைய சூழலில் நம் தமிழ்க்குழந்தைகள் இழந்து வரும் மரபு வழி விளையாட்டுகளை கவனப் படுத்துகிறது இந்நூல். நம் மரபு வழி விளையாட்டுகள் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தலைமைப்பண்பு, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற அற மதிப்புகளை உருவாக்குபவை என்பதை இந்நூலைப் படித்து முடிக்கையில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

மரபுவழி அறிவுமுறை


மரபுவழி அறிவுமுறை: நாட்டுப்புற ஆய்வுக்கட்டுரைகள் , வெளியீடு : ஸ்நேகா பதிப்பகம், முதல் பதிப்பு 2006, விலை ரூ. 60 மிஷிஙிழி : 81-87371-56-0. நூலைப்பற்றி: தொன்மத்தின் கொடையும் மரபின் செழுமையும் நவீன வாழ்க்கைக்கு வளம் சேர்க்கக்கூடியவைதான் எனும் நம்பிக்கையை மறு உறுதி செய்கிறது இந்நூல். நீள் பழமையும் நாகரிகத் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் இனக்குழு சமூகங்களின் அறிதல் முறை அறிவியல் பண்பும் தருக்கத் தொடர்பும் உடையவை. உணவு, மருத்துவம், விளையாட்டு, பாலியல் குறித்த இம்மரபுவழி அறிவு நம்முடைய பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. நவீன மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற ஏகாதிபத்திய போக்குகள் நம் மரபு வழி அறிவைக் குலைத்து பண்பாட்டு அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கும் சூழலில் நிலவும் மந்தகதியைக் கலைத்து சுய விழிப்பைத் தூண்டுவதாய் அமைந்திருக்கிறது இந்நூல்.

நகர்க் குருவி


நகர்க் குருவி : நவீன கவிதைகள், வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014. முதல் பதிப்பு: 2005 , விலை ரூ 60. நூலைப்பற்றி: இனக்குழு வாழ்வின் தொன்ம நினைவடுக்குகளை மீட்டு வரும் இக்கவிதைகள் நவீன வாழ்வில் நாம் இழந்தவற்றை ஞாபகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.

தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும்


தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த முனைவர் பட்ட ஆய்வெட்டின் ஒரு பகுதி. வெளியீடு: ஸ்நேகா பதிப்பகம்,348, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை -600 014, முதல் பதிப்பு :2004 ISBN :81-87371-45-5 விலை ரூ 60. நூலைப்பற்றி: விளிம்பு நிலை மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களுக்குப் பின்னணியில் இருக்கும் இனக்குழு மனோபாவங்கள், பண்பாட்டுக் கூறுகள், மருத்துவப் பயன்கள் ஆகியவற்றை கள ஆய்வுகளின் சின்றாதாரங்களுடன் விளக்கும் இந்நூல் நாட்டுப்புறவியல் துறைக்கு வளமும் வலிமையும் சேர்க்கக்கூடியது. நவீனமயமாக்கலின் இருண்ட விளைவுகளான உடனடி உணவகங்கள் மூன்றாம் உலக மனிதர்களின் ஆரோக்கியத்தை, கலாச்சாரத்தை, பொருளாதாரத்தைச் சுரண்டும் நிலையில் நம்முடைய மரபுவழியான உணவு, மருத்துவ முறைகள் மாற்று முறைகளாகக் கருதப்படும் அவலச்சூழல் நிலவுகிறது. இந்நிலையயில் ஒரு தொன்மை நாகரிகமே நாட்டுப்புறவியலாய் வடிவம் கொண்டிருப்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

வன்னிய சாதிப்பிள்ளைகள்


வன்னிய சாதிப்பிள்ளைகள் :நாட்டுப்புறவியல் ஆய்வுக்கட்டுரைகள், அண்ணல்வெளியீடு, 4,கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 097, பேச: 044-232840, முதல்பதிப்பு 2001.ISBN : 81-87962-08-9 விலை ரூ 50. நூலைப்பற்றி: கலை, வழிபாடு, பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பங்கள், கோட்பாட்டாய்வுகள் என்னும் பெருந்தலைப்புகளில் பதினேழு ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மக்கள் வழக்காறுகளை மக்களிடமிருந்து சேகரித்து மிக நுணுக்கமாக இவர் ஆராய்ந்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். உணவு பற்றிய இவருடைய கட்டுரைகளும், தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகளும், நிலப்பெயராய்வு, சாதிப்பிள்ளைகளின் வாய் மொழி வரலாறு முதலான கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் துறைக்கு முற்றிலும் புதியவை. சமூக மேம்பிட்டிற்குத் துணை நிற்பவை - முனைவர் ஆறு.இராமநாதன்.

மண்கவுச்சி


மண்கவுச்சி : கதை,கவிதை,நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய நவீன தொகுப்பு. களம் வெளியீடு, மருங்கூர்,விருத்தாசலம் வட்டம்,கடலூர் மாவட்டம்-608 703. முதல் பதிப்பு 1994விலை ரூ 15. நூலைப்பற்றி: செவ்வியல் இலக்கியங்களுக்கெல்லாம் தாயாக விழங்குவது நாட்டுப்புற இலக்கியமே. நவீன படைப்பாளிகளின் புனைவுகளுக்கு சற்றும் குறையாத இலக்கிய வளம் வாய்மொழி இலக்கியப் படைப்புகளிலும் உண்டு என்பதை நமக்கு உணர்த்துகிறது இந் நூல். மண்ணிலிருந்து வருவது வாசமல்ல கவுச்சிதான் என்பதை நமக்கு அழுத்தம் திருத்தமாக இதிலுள்ள மக்கள் படைப்புகள் எடுத்துரைக்கின்றன.

Wednesday, July 8, 2009

கோத்தி குறும்பட விமர்சனம்(திருநங்கையின் உண்மைக் கதை)

பெண்களிடம் ஆண் தன்மை மிகுந்திருப்பதும் , ஆண்களிடம் பெண் தன்மை மிகுந்திருப்பதும் கரு உருவாகும் போது இணையும் குரோமோசோம்களைப் பொருத்தது.குழந்தைப் பிறப்பில் ஏற்படும் இத்தகைய குறைபாடு அக்குழந்தை வளரும்போது மனோரீதியான பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.அத்தகைய மன உளைச்சலை ஒரு திருநங்கையின் பார்வையில் பதிவு செய்திருக்கும் படம்தான் கோத்தி. அரை மணி நேரப்படம் பார்த்து முடிக்கையில் நாமே திருநங்கையாகி விட்டதைப் போன்ற மன உணர்வு நம்மையறியாமலே ஏற்படுகிறது. ஓர் உண்மையான திருநங்கையின் வாழ்க்கை என்பதால்தான் பார்வையாளர்களுக்கு இத்தகைய பாதிப்போ? அன்பு என்னும் சிறுவன் வளர வளர பெண்மை அவனுக்குள் பொங்கி வழியத்தொடங்குகிறது.அவனுடைய அன்றாட செயல்பாடுகளில் பெண் தன்மை வெளிப்படுகிறது. இதனைக் கவனித்து வரும் அவன் தந்தை அவனை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுகிறார். சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் அத்தனைக் கொடுமைகளையும் அன்பு எதிர்கொள்கிறான். இறுதியில் திருநங்கைகளிடம் அடைக்கலம் தேடிய அன்பு நிர்வாண கோத்தியாக்கப்பட்டு வளர்மதியாகிறாள். முழு திருநங்கையான பிறகு வளர்மதி சமூகத்தால் எப்படியெல்லாம் புறக்கணிக்கப் படுகிறாள் என்பது தான் மீதமுள்ள படம். திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் இப்படம் தோற்றுவிக்கிறது. நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் இப்படம் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. தயாரிப்பாளர் பிரித்திவ்குமார், இயக்குனர் முத்துக்குமார் ஆகியோருக்கு வாழ்த்துகள். குறுந்தகடு வேண்டுவோர் தொடர்புக்கு 9841166519. இயக்குனர் முத்துக்குமார்

Saturday, June 27, 2009

தாகம்(சிறுகதை)

வழக்கத்திற்கு மாறாக இன்று பல்லவன் சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. இதை எதிர்பார்க்காத பலர் ஏமாந்தனர். சீட்டு வாங்குமிடத்திலும் கூட்டம் குறைவுதான். முன்பே சீட்டுவாங்கி காத்திருந்தவர்களை பெண்காவலர்கள் வரிசையில் நிற்கவைத்து பெட்டிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தனர். குறுக்கே வந்து ஏற முயற்சித்தவர்களைக் கண்டித்து வரிசைக்குப் பின்னால் அனுப்பத் தவறவில்லை. காந்தி வழக்கம் போல் அலட்சியமாக வந்து வரிசையில் சேர்ந்துகொண்டான். இடம் கிடைப்பது கடினம்தான் இருந்தாலும் நின்று பார்ப்போம் என்றுதான் நின்றான். ஒரு பெரியவர் பெண் காவலர் ஒருவரிடம் வயசானவன் என்னால நிக்க முடியல இது மாதிரி அனுப்புவீங்கன்ன தெரியாது கொஞ்சம் விடுங்கம்மா என்று கனிவாகக் கேட்டுப்பார்த்தார். ஒங்கள மாதிரி வயசானவங்கல்லாம் நிக்கிறாங்க பாருங்க தெரியலன்னா இப்ப தெரிஞ்சிக்கோங்க என்று கூறியபடி வரிசையை ஒழுங்கு படுத்தத் தொடங்கினார். ஒரு வழியாக காந்தி உள்ளே சென்றான் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. உள்ளே செல்லச் செல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது இரண்டு குழந்தைகளும் ஒரு முதியவரும் அமர்ந்திருந்த இருக்கையில் இன்னொருவர் அமரலாம் அங்கு பையை வைத்திருந்தனர். எதற்கும் கேட்டுப்பார்ப்போமே என்றுதான் கேட்டான் அவன் எதிர்பாராத விதமாக எதிரே அமர்ந்திருந்த பெண் அந்த பைய எடுங்கப்பா அவரு உக்காரட்டும் என்று கூற எதிர்பாராமல் இடம் கிடைத்த மகிழ்ச்சியை புன்னகைத்து நன்றி கூறி வெளிப்படுத்தினான். மெல்ல மெல்ல வண்டி நிறையத் தொடங்கியது. காந்திக்கு அருகில் வந்த நடுத்தர வயதுக்காரர் இன்னைக்கு வண்டி நேரத்தோட வந்துட்டுதோ எனக்கேட்க வண்டி சரியான நேரத்துக்குதான் வந்துது நீங்கதான் லேட் என்று தலையை ஆட்டி கேட்பவர் புன்னகைக்கும்படி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு பதிலளிக்க இடம் கிடைக்காத வருத்தத்தை மறந்து சிரிக்கத்தொடங்கினார். பக்கத்திலிருந்தவர்களும் காந்தியின் பதிலுக்கு சத்தமில்லாமல் சிரித்தனர். பெட்டிக்குள் மின் விசிரிகளிருந்தும் வேர்த்துக்கொட்டியது.இவனுக்கு தாகம் நாக்கை வரட்டியது. தண்ணீர் வாங்கி வந்திருக்கலாம். இனிமேல் போவது கிடைத்த இடத்திற்கு ஆபத்தாகி விடும். பையை வைத்துவிட்டு பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிவிட்டுப் போகலாம். ஏனோ அப்படிச் செய்ய மனமில்லை எல்லோர் கைகளிலும் தண்ணீர் பாட்டிலிருந்தது. கேட்டு வாங்கிக் குடிக்க சுயமரியாதை இடமளிக்கவில்லை. தண்ணீர் விற்பவர்கள் வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டான். ஒருவரும் வருவது போல் தெரியவில்லை. வேறு வழியின்றி வேர்வை சொட்டச் சொட்ட காப்பி வாங்கி குடித்தான். எதிரில் அமர்ந்திருந்த மற்றொரு அம்மாவை வழியனுப்ப வந்திருந்த அவர் தம்பி குடும்பத்தினர் மஞ்சள் நிற குளிர்பான பாட்டிலை வாங்கி நீட்ட எதுக்கு அதான் தண்ணி இருக்கில்ல நீங்க குடிங்க இந்தா கோபி நீகுடிச்சுட்டு குடு என்று வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் நீட்ட அவன் வேண்டாம் அத்த... என்று தலையை ஆட்டினான். கட்டாயப்படுத்தவே வாங்கி ஒருவாய் குடித்தான் வெளியில் நின்றவர்கள் ஆளுக்கு ஒருவாய் குடித்து அரை பாட்டிலுக்கு மேல் காலி செய்து திருப்பிக் கொடுத்தனர். வாங்கி குடிக்கும் போது காந்தி சாடையாகப் பார்த்தான் நாம் பார்ப்பதை வேறுயாராவது பார்க்கிறார்களா என்று கண்களைச் சுழற்றி நோட்டம் விட்டான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் இவனைப்போலவே குளிர்பானம் குடித்த அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.அவரும் நம்மைப்போல தாகத்தோடு இருக்கிறார் என்பதை அவரின் அந்தப் பார்வை உணர்த்தியது. வண்டி கிளம்பத் தயாரானது வழியனுப்ப வந்தவர்கள் விடை பெறத் தொடங்கினர். பக்கத்து இறுக்கையில் அமர்ந்திருந்த பெரியவருக்கும் தண்ணீர் தாகமாகத்தானிருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பவர்கள் வாயை அண்ணாந்து ஏக்கமாகப் பார்த்தார். ஒருவர்கூட அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் என எந்த நிலையத்திலும் தண்ணீர் விற்பவர்கள் வராமல் போனது வியப்பாக இருந்தது. தாகம் நாக்கை வரட்டியது தொண்டை வரண்டு உதடுகளுக்கும் பரவியது வரட்சி. யார் யாரெல்லாம் தண்ணீர் வைத்திருக்கிறார்கள் என நோட்டம் விட்டான் இவனைத்தவிர எல்லோரிடமும் இருந்தது.ஒருத்தரின் முகமும் தண்ணீர் கேட்டால் கொடுப்பது போலில்லை.காசு கொடுத்து வாங்குகிற பொருளாகி விட்ட தண்ணீரைக் குடிக்க ஓசியில் கேட்பது நியாமில்லை அப்படியே கேட்டாலும் வாங்கிக்க வேண்டிதான என்ற பதில்தான் வரும் அதற்குக் கேட்காமலிருப்பதே புத்திசாலித்தனம். இருந்தாலும் நா வரட்சி தாக்குப் பிடிக்க முடியல.அந்தப் பெரியவருக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும் அவர் தாகத்தில் தவிப்பது முகத்தில் தெரிகிறது. மெல்லிய தூரல் விழத்தொடங்கியது. சற்று குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பெரியவர் முகம் சற்று மலர்ந்தது. தாகம் தணிந்தது போல் உணர்ந்திருக்க வேண்டும். அவருக்கு பக்கத்தில் அவரைப் போலவே வேட்டி கட்டியிருந்தவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார் இவர் மீண்டும் அண்ணாந்து அவர் வாயைப்பார்த்தார் குடித்து முடித்ததும் கெஞ்சுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கையை நீட்டினார். கொடுத்ததும் கொஞ்சமாகத் தொண்டையை நனைத்துக்கொண்டு சுடுது இல்ல.. என்னா வெய்யிலு.. ஏ அப்பா என்று பெருமூச்சு விட்டார்.ஒரு வாய் மட்டும் குடித்துவிட்டு தந்து விட்டார் தாகம் அடங்கவில்லைதான் என்ன செய்வது.ஓசியில வாங்கி தாகம் தீரக் குடிக்க முடியுமா. பொறியியல் கலந்தாய்வுக்கு சென்று வந்த மகளும் தந்தையும் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியின் சிறப்புகளை பேசியபடி கையிலிருந்த குளிர்பானத்தை குடித்துக்கொண்டு வந்தனர். அவர் அதையும் ஏக்கமாகப் பார்த்தது காந்தி மனதுக்கு சங்கடமாக இருந்தது. இன்னும் அஞ்சு வருடம் கழிச்சு நான் ஒன்னோட அதிகமா சம்பளம் வாங்குவன் மகள் கூறியதைக் கேட்ட அப்பாவுக்கு பூரிப்பு. இவனுக்கு இடம் தந்த முதியவர் எதிரில் அமர்ந்திருந்த தன் மகளிடம் ஏதோ கிசுகிசுக்க பையைத் திறந்து முறுக்குப் பொட்டலத்தை எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தார் நமக்கும் கொடுத்துவிடுவார்களோ கொடுத்தால் எப்படி மறுப்பது என்று யோசித்தபடி முகத்தை வேறுபக்கம் வேடிக்கை பார்ப்பது போல் திருப்பிக்கொண்டான். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள் பக்கத்திலிருப்பவர்களிடம் ஒரு மரியாதைக்காகவாவது கேட்க வேண்டாமா என்று மனதுக்குள் கூறிக்கொண்டான். குழந்தைகள் முறுக்கைத்தின்று முடித்ததும் தண்ணீர் கேட்கத்தொடங்கிவிட்டனர். தண்ணீர் பாட்டிலைக் கொடுக்க ஒரு பாட்டிலைக் காலி செய்தனர். அதையும் பெரியவர் உமிழ்நீரை விழுங்கியபடி பார்த்துக்கொண்டிருந்தார். விழுப்புரம் வந்து விட்டது தோச... வட...சம்சா... டீ...காபி..... வாட்டர்.... கூல்டிரிங்ஸ்...என பல வித சத்தம் கேட்க காந்தி ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கி கட கட வென குடித்தான் பெரியவர் பழயபடி பார்க்கத்தொடங்கினார். பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கியதைப் பார்த்துக்கொண்டுதானிருந்தார் அதனால் நம்மிடம் கேட்க மாட்டார் என்றுதான் நினைத்தான் ஆனாலும் அவர் கைகள் அவனை நோக்கி நீண்டன் அவனும் கொடுத்தான் இரண்டு வாய் குடித்துவிட்டு கொடுத்ததும் காந்தி கேட்டேவிட்டான் நானும் பாத்துகிட்டுதான் வரன் இம்மான் தாகத்தோட வரீங்கள ஒரு தண்டி பாட்டிலுதான் வாங்குனா என்ன..? நம்ம வசதிக்கு பதினைஞ்சு ரூவா குடுத்து தண்ணி வாங்கி குடிக்க முடியுங்களா?

Saturday, June 13, 2009

பேராசிரியர் ஆறு.இராமநாதனின் ஆய்வுப்பணிகள்



படைப்பு என்பது புனைவு மட்டும்தானா என்கிற வினாவுக்கு இல்லை என்றுதான் விடையளிக்க வேண்டியுள்ளது. இக்கருத்தில் இலக்கியப் புலமும் கல்விப்புலமும் எதிரெதிராய்த்தான் நிற்கின்றன.புனைவிலக்கியவாதிகள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளை படைப்பாக ஏற்றுக்கொள்ளாதது ஒரு வகை இலக்கிய அவலம் என்றுதான் கூறவேண்டும். ஒரு சில பேராசிரியர்கள் படைப்பிலக்கிய வாதிகளாகவும் திகழ்கின்றனர், அவர்கள் புனைவிலக்கியத்திலும் ஆய்வுகளிலும் தங்கள் திறமைகளை ஒருசேர வெளிப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய பேராசிரியர்களில் ஒருவராகத் திகழ்பவர் முனைவர் ஆறு.இராமநாதன். எழுபதுகளில் வெளி வந்த குமுறல் என்ற சிறுகதைத் தொகுதி அவரின் புனைவிலக்கிய படைப்பிற்கு சான்றாகும். சிற்றூர் மக்களின் வாழ்நிலைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்தியம்பும் பல கதைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில கதைகள் அப்போதே பரிசு பெற்றவையாகும். அண்மையில் இவர் எழுதிய நொண்டிப் பிள்ளையார் என்ற சிறுகதை அண்ணல் நினைவுப் பரிசினைப் பெற்றது.இது பேராசிரியர் நன்னன் அவர்கள் நிறுவிய அறக்கட்டளையால் வழங்கப்படும் பரிசாகும். பிற மொழி கலவாமல், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கருவாகக் கொண்ட படைப்புகளுக்குத்தான் மேற்படி பரிசு வழங்கப்படும் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். பேராசிரியர் புதுக்கவிதைகள் எழுதும் ஆற்றல் படைத்தவர் என்பது அவரது படைப்பிலக்கியத் திறமைக்குக் கூடுதல் வலுச்சேர்க்கும் செய்தியாகும். நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் இன்றும் கவிதை எழுதி வருகிறார். கவிதைகளிலும் பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற சிந்தனைகளை முன்னிறுத்துகிறார். புனைவிலக்கியத் தளத்தைவிட ஆய்வுலகில் அவரது படைப்பாக்கப் பங்களிப்பு மிகவும் பிரமிக்கத் தக்கதாகும். தமிழில் புதிர்கள் என்ற ஆய்வு நூல் இரண்டு பதிப்புகள் வெளி வந்துள்ளன. அதில் புதிர்களின் வகைகள், சமுதாயத்தில் புதிர்களின் பங்கு, புதிர்களில் வெளிப்படும் பண்பாட்டுக்கூறுகள் பற்றியெல்லாம் சான்றாதாரங்களுடன் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து எளிய வாசகர்களும் படிக்கும்படியான தெளிந்த நடையில் படைத்துள்ளார். நாட்டுப்புறவியல் என்ற நூலும் இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. அந்நூல் ஆய்வு உலகம் கண்டிராத பல புதிய கதவுகளைப் பேராசிரியர் நமக்கு திறந்து காட்டுகிறார். தெருக்கூத்துக் கலைபற்றிய முதன்முதலான ஆய்வு இவருடையது. நாட்டுப்புறப் பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை, மனிதர்களுக்கு வழங்கப்படும் காரணப்பெயர்கள் எனப் பல புதிய தளங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. அதனையும் நூலாக வெளியிட்டுள்ளார். அதற்காக எழுபதுகளில் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுக்கக் களப்பணி மேற்கொண்டார். அப்போது திரட்டிய பாடல்களைக்கொண்டு ஆய்வு நிகழ்த்தியதோடு நில்லாமல் அப்பாடல்கள் எதிர்காலத்தில் ஆய்வு நிகழ்த்துவோருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டுப்புறப் பாடல் களஞ்சியமாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பத்துத் தொகுதிகளில் முதல் ஐந்து தொகுதிகள் பேராசிரியர் தொகுத்தவை அடுத்த ஐந்து தொகுதிகளுக்கு இவர்தான் முதன்மைப் பதிப்பாசிரியர். இவர் வெளியிட்ட நூல்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை என்பதாகும். ஒரு கதை வாய்மொழியாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பரவும்போது நிலவியல் கூறுகள் அக்கதையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்துள்ளார். பல பேராசிரியர்களால் இன்றும் வியந்து போற்றத்தக்க ஆய்வு அது. நாட்டுப்புற கலைகள்-நிகழ்த்து கலைகள் என்ற நூலில் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்நூலுக்கு 2001 ஆம் ஆண்டுக்கான காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் என்பது எளிமையான ஒரு துறை, அதில் ஆய்வு செய்வது மிகவும் எளிது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.ஆனால் பேராசிரியரிடம் ஆய்வு செய்யும் ஒருவர் அந்தக் கருத்தோடு உடன்பட மாட்டார். ஏனெனில் நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது பல்துறை கலப்பாய்வாகத் திகழ வேண்டும் என்ற கருத்துடையவர் பேராசிரியர். நாட்டுப்புறவியலுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன, அக்கோட்பாடுகளை ஆய்வு மாணவர்கள் முறையாகப் பயில வேண்டும் என்பதற்காக நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் என்ற நூலைப் படைத்துள்ளார். களப்பணியின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் ஏறாளம் உண்டு. ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட களப்பணிகளில் ஏற்பட்ட பட்டறிவி னடிப்படையில் நாட்டுப்புறவியல் கள ஆய்வு நெறிமுறைகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். 1982 இல் இவர் வெளியிட்ட காதலர் விடுகதைகள் என்ற நூல் தமிழ் வாய்மொழி இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு படைப்பாகும். படிப்போருக்கு சுவையேற்படுத்தும் ஒரு மாறுபட்ட படைப்பு அது. பேராசிரியர் தன் நண்பர்களோடு இணைந்து பதிப்பித்த நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் பதினைந்து தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அது வெகு மக்கள் இலக்கிய வகைமையைப் பறைசாற்றும் ஓர் அரிய முயற்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத நம் முன்னோரிடம் புதைந்து கிடக்கும் படைப்பாற்றல்களை அத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் காணலாம். இன்றைய படைப்பிலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் தாயாக நம் முன்னோர்களின் படைப்பாற்றல் அமைந்திருப்பதை அக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. சிற்றூர் மக்களின் வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து, அது மேல்தட்டு மக்களின் நிறுவன வழிபாட்டு முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளார். சிறு தெய்வக்கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாகக் காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளன என்ற கருத்து ஆய்வுலகில் உண்டு ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் நம்மிடம் இல்லை. அக்குறையைப் போக்கியவர் என்ற பெருமை பேராசிரியருக்கு உண்டு. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிலுள் தீப்பாஞ்சாயி என்ற சிறு தெய்வம் எவ்வாறு தீப்பாய்ந்த நாச்சியம்மன் திருக்கோயிலானது என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும் கட்டுரை இவரது ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இவருடைய ஆய்வுகள் அனைத்தும் தனித் தன்மையுடையவை. இராமநாதன் பாணி ஆய்வுகள் என்று குறிப்பிடுமளவிற்கு முன் மாதிரியானவை. இவரது ஆய்வுகள் பலவற்றை மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். தன் மாணவர்களின் கட்டுரை என்றாலும் உரிய முறையில் மேற்கோள் காட்டுவதோடு அவர்களின் பெயரையும் குறிப்பிடும் ஆய்வு நேர்மையுடைய பண்பாளர். இதுவரை வெளிவந்த இவரது ஆய்வுகளில் குறிப்பிடத் தக்கனவற்றை மேம்படுத்தி மேலும் பல புதிய கட்டுரைகளை இணைத்து தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்ற நூல் 672 பக்கங்களில் மிகச்சிறப்பாக மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறந்த நாட்டுப்புறவியல் நூலூக்கான தமிழக அரசின் பரிசு பெற்றுள்ள இந்நூல் தமிழர்களின் அசலான பண்பாட்டு மரபுகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு ஆகச்சிறந்த ஆவணமாகத் திகழும். சிதம்பரம் வட்டம் வீராணம் ஏரிக்கருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் ஆறுமுகம் சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும் கல்லூரிப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை உலகத்தமிழாராய்ச்சி நிறூவனத்திலும் பெற்றவர்.தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகவும், தமிழ்ப்பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

Saturday, May 16, 2009

ஆசிரியரைப் பேணிக்காக்கும் மாணவர்கள்ஆவணப்படமான உண்மை நிகழ்வு


ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில்தான் அதனை நன்றியோடு நினத்துப் போற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். நம் நாட்டின் எதிர்காலத்தை உறுவாக்குகின்ற வகுப்பரையில் சின்னஞ்சிறு சுட்டிகளாய்ப் பயின்ற அந்த பட்டாம்பூச்சி நாட்கள் ஒவ்வொரு மனித மனத்திலும் என்றும் நீங்காத நினைவுகளாய் பதிந்திருக்கும். மலறும் நினைவுகளாய் நாம் அவ்வப்போது நம்மோடு பயின்ற தோழர்களையும் நமக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் நினைத்துப் பார்த்துக்கொள்வதுண்டு. வயது ஆக ஆக நம் பள்ளிப் பருவத்திற்கு நாம் திரும்பிவிட மாட்டோமா என்கிற ஏக்கம் அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. நம்மோடு படித்த நம் தோழர்களை மீண்டும் அதே பள்ளியில் சந்தித்தால் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கும். பள்ளிக்கூடம் படம் வெளிவந்த பிறகு இத்தகைய சந்திப்புகள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அப்படிச் சந்திப்பவர்கள் அந்த பள்ளிக்கோ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கோ அங்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கோ ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற நற்பணியைச் செய்வதுண்டு. நெய்வேலி குளூனி பள்ளியில் பயின்ற இரண்டாவது அணி மாணவர்கள் குளூனி சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒன்று சேர்ந்தனர். எழுபதுகளில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எல்லோரும் குடும்பத்தோடு அந்த விழாவில் பங்கேற்க உற்சாகம் கரை புரண்டு ஓடியது என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டும் இசையும் கற்றுத்தந்த ஸ்டெல்லா மிஸ் விழாவுக்கு வராதது ஒரு குறையாக இருந்தது. பள்ளியில் விசாரித்தபோது அவர்கள் பெங்களூரிலிருப்பது தெரிய வந்தது. பெங்களூரிலிந்து விழாவுக்கு வந்திருந்த ஆனந்திடம் ஸ்டெல்லா மிஸ் முகவரியைக் கொடுத்து அவர்களை எப்படியாவது தேடிக் கண்டு பிடிக்கச் சொன்னார்கள். அவர் அங்கு சென்ற போது அந்த ஆசிரியை எழுபது வயதைக் கடந்து கவனித்துக்கொள்ள யாருமற்று ஒரு சின்னஞ்சிறு அறையில் தானே சமைத்துக்கொண்டு பேச்சுத்துணைக்குக் கூட மனிதர்களில்லாமல் இரண்டு கிளிகளோடு பேசிக்கொண்டு இன்னலுறுவதைக் காண நேர்ந்தது. உடனே ஸ்டெல்லா மிஸ்ஸின் நிலையை நண்பர்களுக்குக் கூறி நெய்வேலியில் அவருக்கு ஒரு வீடு பார்த்து அங்கு தங்கவைத்து நெய்வேலி நண்பர்கள் அவரை கவனித்துக்கொள்வது என்று ஏற்பாடு செய்து இன்று ஸ்டெல்லா மிஸ்க்கு உதவியாக ஒரு மாணவப் பட்டாளமே அணிதிரண்டு உதவி வருகின்றனர்.




இயக்குநர் செல்வன்

ஆசிரியை ஸ்டெல்லா

இந்த உணர்ச்சி பூர்வமான உண்மைச்சம்பவத்தை மிக அழகான ஆவணப் படமாக்கியிருக்கிறார் நெய்வேலி செல்வன். தங்கள் ஆசிரியரின் பண்பு நலன்களை மாணவர்கள் கூறும் போது நமக்கு மெய்சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தம்மிடம் பயின்ற மாணவர்களின் நிழற்படத்தைப் பார்த்து அவர்களின் பெயர்களை மிகச்சரியாக தலைப்பெழுத்தோடு கிடு கிடுவென ஸ்டெல்லா மிஸ் கூறுவதைக் கேட்கும்போது அந்த மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அனபையும் ஈடுபாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது. தன்னிடம் படித்த மாணவர் மருத்துவராகி தனக்கே மருத்துவம் செய்கின்ற வாய்ப்பு எத்தனை ஆசிரியர்களுக்குக் கிட்டும், அப்படிக் கிட்டினால் அது அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சியைத் தன்னுடைய மாணவர் மருத்துவர் செந்திலின் வாயிலாக ஸ்டெல்லா மிஸ் பெறுவதை நாம் படத்தில் காணலாம். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கதை கூறுவது போல சலிப்பை ஏற்படுத்தா வண்ணம் தன் இனிமையான குரலால் விளக்குகிறார் கமலா சுதன். செந்தில், அமலா,சத்தியதேவன், அனிதாதேவராசன், பாரதி, பாபு, செல்வன் ஆகிய மாணவர்கள் இன்று நெய்வேலியில் அந்த ஆசிரியையை கவனித்துக்கொள்கின்றனர். ஏறத்தாழ ஓராண்டுகாலம் இப்பணியோடு படத்திற்கான ஒளிப்பதிவுப் பணியையும் செய்துள்ளனர் செல்வன்,பிரசன்னா, அரவிந்த், பாரதிக்குமார் ஆகியோர். படம் முடியும்போது ஒலிக்கும் பாரதிக்குமாரின் கவிதை காட்சிகளுக்கேற்ப அமைந்து அழகூட்டுகிறது. தங்களுக்குக் கற்பித்த ஆசிரியைக்கு காலத்தால் அழியாத ஒரு கலைப்படைப்பை உருவாக்கி பெருமைப்படுத்திய இந்த மாணவர்கள் அவரை வாழ்வின் கடைசி காலத்தில் பேணிக்காப்பாற்றி வருவதன்மூலம் இப்படைப்பை மேலும் அழகுபடுத்துகிறார்கள். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக எண்ணி எள்ளி நகையாடும் இன்றைய மாணவ சமுதாயத்தினருக்கு இந்தப் படத்தை அவசியம் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். என்ன உங்களுக்கும் ஸ்டெல்லா மிஸ்ஸைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா? இயக்குநர் செல்வனை 9442470721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

Saturday, May 9, 2009

நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

உலகின் மிகப் பெரிய மக்கள் நாயக நாடு இந்தியா என்பதில் நாட்டு மக்களுக்கு என்ன பெருமைகிடைத்திருக்கிறது? இந்த நாடு நமக்கு என்ன செய்திருக்கிறது? இவையெல்லாம் பாமர மக்கள் மனதில் எழக்கூடிய வினாக்கள். நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று சிந்தித்துப் பார் என்று அவர்களிடம் எதிர்வினா எழுப்பி இனி தப்பிக்க முடியாது. நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டுகாலத்திற்கு மேலாகியும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நம் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அனைவருக்கும் கல்வி என்பது கூட கனவுத் திட்டமாகவே இருந்து வருகிறது.உண்மையிலேயே அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு உள்ளதா என்பது சந்தேகம்தான், எல்லோரும் கல்வியறிவு பெற்று விழிப்படைந்து விட்டால் அவர்களை இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாதல்லவா?
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளின் மூலம் மக்களிடம் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா என்பதை மக்கள் எப்போதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? நான்காவது தூண்களான பத்திரிகைகளாவது இந்தப் பணிகளைச் செய்திருக்கின்றனவா? இப்படிப்பட்ட சூழலில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? இத்தனை முறை வாக்களித்து என்ன பலனைக் கண்டோம்? என்ற எண்ணங்கள் நம் மனதில் எழுவது இயல்புதான். அதனால் நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நாம் விரும்புகிற மாற்றம் தானாகக் கிடைத்து விடுமா? மாற்றத்தை விரும்பகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் அதற்கான வாய்ப்பாக நாம் ஏன் இந்தத் தேர்தலையே பயன்படுத்தக் கூடாது?
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிப்பதற்கு அக்கட்சியின் தொண்டனுக்கு பல காரணங்கள் இருக்கலாம். எந்த கட்சியையும் சாராத பொது மக்கள் கட்சி அடிப்படையிலல்லாமல் பொது நல நோக்கோடு சிந்தித்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக பாடுபடக் கூடியவரை அடையாளம் கண்டு அவருக்கு வாக்களிக்கலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வென்றவர்களில் நூற்று இருபது உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இத்தகைய உறுப்பினர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் குற்றவாளிகள் என்றால் இவர்களுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமலே இருந்து விட்ட படித்த/ மேல்தட்டு மக்களும் குற்றவாளிகளே. ஏனென்றால் இத்தகைய மக்கள்தான் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால் அதையாவது வாக்கச்சாவடிக்குச் சென்று பதிவு செய்யுங்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வேண்டுகோள்களுக்கிணங்க இந்தத் தேர்தலில் முதன் முறையாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனப் பதிவு செய்கதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.இப்படி குறிப்பிட்ட அளவு வாக்காளர்கள் பதிவு செய்தால் அரசியில் கட்சிகள் வேட்பாளரைத் தேர்வு செய்யும்போது கொஞ்சமாவது யோசிப்பார்கள். வாக்களிப்பதற்கு முன்பு நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள் நீங்கள் ஒரு முறை அளிக்கும் வாக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நம் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மனிங்கும் ஆற்றல்வாய்ந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். வழக்கமான தேர்தல்களிலிருந்து ஒரு மாறுபட்ட சூழல் இத்தேர்தலில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கங்களாகி வருகின்றன. இனம், சாதி, கட்சி, வட்டார நலன் போன்ற கூறுகள் தேர்தல் பிரச்சனைகளாவது தவிர்க்க இயலாதனவாகி வருகின்றன. அவற்றையும் மீறி நாம் நாம் வாக்களிப்பது சாத்தியமில்லை என்றாலும் சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் விரலிலுள்ள 'மை'க்கு ஒரு மறியாதையை ஏற்படுத்த முடியும். மாறாக தவறான ஒரு நபருக்கு வாக்களித்து கரும்புள்ளியைக் குத்திக்கொள்ளாதீர்கள். கொளுத்தும் வெயிலில் வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் என்றெண்ணி வீட்டுக்குள் இருந்து விடாதீர்கள்.காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்றுவிடுவது புத்திசாலித்தனமானது என்று நினைத்துக்கொண்டு சென்றால் நம்மைவிட புத்திசாலிகள் அங்கு நமக்கு முன்பு காத்திருப்பார்கள். ஆனாலும் வெயிலுக்கு முன்பு வரிசையில் நின்றுவிட்டால் உச்சி வெயிலிலிருந்து தப்பிக்கலாம். காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

Friday, May 8, 2009

பழய வாய்ப்பாடு

தஞ்சாவூர் நில அளவை
நிறுத்தல் அளவை


வாய்ப்பாடு முதல் பக்கம்





எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எண் சுவடி என்ற பழய வாய்ப்பாடு ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் தமிழர்களின் எண் முறைகள் பற்றியும், எண்ணியல் சார்ந்த பல்வேறு தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இன்றய இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத தொன்மையான நிறுத்தலளவைகள், தஞ்சாவூர் நில அளவை போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன. பழய அளவை முறைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் என்பதால் அந்த வாய்ப்பாட்டின் ஒருசில பக்கங்கள் உஙள் பார்வைக்கு.








இந்த வாய்ப்பாட்டை இது வரைப் பாதுகாத்து வைத்திருந்த சபாநாயகம் அய்யா அவர்களுக்கு நன்றி கூறுவோம்.