தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, July 29, 2009

காந்தி ஒரு மகாத்மாவா?-அம்பேத்கர் பதில்

1938 ஆம் ஆண்டு சித்ரா என்ற மராத்தி இதழின் தீபாவளி மலரில் வெளியான அம்பேத்கரின் கட்டரையிலிருந்து சில பகுதிகள். காந்தி ஒரு மகாத்மாவா? இந்த கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது. நான் எல்லா மகாத்மாக்களையும் வெறுக்கிறேன், அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபத்தீடு எனக் கருதுகிறேன். தனது உடையை மாற்றுவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். சத்தியத்தையும், அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். உண்மையும், அகிம்சையும் காந்தியினுடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழ்ந்து ஆராயும்போது, அவருடைய குணாம்சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்கிறேன். வட்ட மேஜை மாநாட்டின் போது," தாழ்த்தப் பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் எந்த ஆட்சேபணையும் எழுப்ப மாட்டேன் " என்று கூறினார். ஆனால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்த உடனேயே காந்தி, தான் அளித்த உறுதி மொழிகளையெல்லாம் ஓசை படாமல் மறந்து விட்டார். அவர் முஸ்லிம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் எதிர்த்தால், அவர்களுடைய முஸ்லிம்களின் 14 கோரிக்கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன் கூட இதைச் செய்திருக்கமாட்டார். இது காந்தியின் துரோகத்திற்கு ஓர் உதாரணம் மட்டுமேயாகும். காந்தியன் அரசியல் பொருளற்றதும் ஆரவாரமானதுமாகும். இந்திய ஆட்சி அரசியலின் வரலாற்றில் அது மிகவும் நேர்மையற்ற அரசியலாகும். அரசியலிலிருந்து நேர்மை அகற்றப்படுவதற்கான பொறுப்பு காந்தி என்ற மனிதரையே சாரும். அதற்கு பதிலாக இந்திய அரசியலில் வர்த்தகத் தன்மையைக் கொண்டு வந்தார். அரசியலிலிருந்து அதனுடைய நற்பண்பு அகற்றப் பட்டுவிட்டது. இந்தியப் பொது வாழ்விலிருந்து காந்திஜியின் தீங்கான மகான் தன்மையுடன் கூடிய கோமாளித் தனங்களை எவ்வாறு போக்குவது என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.
ஆதாரம்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-36. வெளியீடு: சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு அமைச்சகம், இந்திய அரசு.
விற்பனை உரிமை: நியூ செஞ்சுரி புக் அவுஸ்.
முக்கியமான இரண்டு ஆளுமைகளின் மனப்போக்கினை வெளிப்படுத்தும் இக்கட்டுரை நமக்கு பலவற்றை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

Tuesday, July 14, 2009

பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.


பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.

V.O.Chidambaram பிள்ளாய் KOILPATTI,S.I.R.

PLEADER 6-6-28


அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

சேமம். சேமத்துக்குக் கோருகிறேன்.

நாகப்பட்டணத்திலும்,கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லாருக்கும் அசந்தோசத்தை உண்டு பண்ணியது. ஒருவாறு இரண்டிடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம். இப்பொழுது உங்கள் உடம்பு பூரண சவுக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால் நீங்கள் எப்பொழுது சென்னைக்குச் செல்லுதல் கூடும். என் மகன் school final examinationல் தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்கவைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்டு மெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபார்சு இருந்தால், முதலிலேயே Inspector ஆகலாம் சாதாரண சிபார்சு இருந்தால் முதலில் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபார்சு நமக்குக் கிடைக்குமா என்பதைப்பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்


(தேச விடுதலைக்காக பாடு பட்ட ஒரு மாபெரும் தலைவரின் இக்கடிதம் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து கப்பல் வாங்கிய வ.உ.சி.யால் மகனை பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க இயலாமல் போனதும், வேலைக்கு சரியான பரிந்துரை கிடைக்குமா என தயங்கிய படி பெரியாரிடம் கேட்டிருப்பதும் இன்று நடக்குமா? கடவுள் இல்லை, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய பெரியாருக்கு எழுதிய கடிதத்திலேயே கடவுள் துணை என்று எழுதிய வ.உ.சி. எவ்வளவு வெளிப்படையான மனிதர் பாருங்கள்.)

Thursday, July 9, 2009

கிராமத்து விளையாட்டுகள்


கிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, விலை ரூ. 55. ISBN: 978-81-8476-126-9. நூலைப்பற்றி: விளையாட்டு ஒரு சமூகத்தின் தொன்மையை, பண்பாட்டு மூலங்களை தன்னுள் சேகரித்து வைத்திருக்கிறது. எல்லா துறைகளிலும் நம் பண்பாட்டு அடையாளங்களை இழந்து வரும் இன்றைய சூழலில் நம் தமிழ்க்குழந்தைகள் இழந்து வரும் மரபு வழி விளையாட்டுகளை கவனப் படுத்துகிறது இந்நூல். நம் மரபு வழி விளையாட்டுகள் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தலைமைப்பண்பு, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற அற மதிப்புகளை உருவாக்குபவை என்பதை இந்நூலைப் படித்து முடிக்கையில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

மரபுவழி அறிவுமுறை


மரபுவழி அறிவுமுறை: நாட்டுப்புற ஆய்வுக்கட்டுரைகள் , வெளியீடு : ஸ்நேகா பதிப்பகம், முதல் பதிப்பு 2006, விலை ரூ. 60 மிஷிஙிழி : 81-87371-56-0. நூலைப்பற்றி: தொன்மத்தின் கொடையும் மரபின் செழுமையும் நவீன வாழ்க்கைக்கு வளம் சேர்க்கக்கூடியவைதான் எனும் நம்பிக்கையை மறு உறுதி செய்கிறது இந்நூல். நீள் பழமையும் நாகரிகத் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் இனக்குழு சமூகங்களின் அறிதல் முறை அறிவியல் பண்பும் தருக்கத் தொடர்பும் உடையவை. உணவு, மருத்துவம், விளையாட்டு, பாலியல் குறித்த இம்மரபுவழி அறிவு நம்முடைய பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. நவீன மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற ஏகாதிபத்திய போக்குகள் நம் மரபு வழி அறிவைக் குலைத்து பண்பாட்டு அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கும் சூழலில் நிலவும் மந்தகதியைக் கலைத்து சுய விழிப்பைத் தூண்டுவதாய் அமைந்திருக்கிறது இந்நூல்.

நகர்க் குருவி


நகர்க் குருவி : நவீன கவிதைகள், வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014. முதல் பதிப்பு: 2005 , விலை ரூ 60. நூலைப்பற்றி: இனக்குழு வாழ்வின் தொன்ம நினைவடுக்குகளை மீட்டு வரும் இக்கவிதைகள் நவீன வாழ்வில் நாம் இழந்தவற்றை ஞாபகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.

தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும்


தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த முனைவர் பட்ட ஆய்வெட்டின் ஒரு பகுதி. வெளியீடு: ஸ்நேகா பதிப்பகம்,348, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை -600 014, முதல் பதிப்பு :2004 ISBN :81-87371-45-5 விலை ரூ 60. நூலைப்பற்றி: விளிம்பு நிலை மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களுக்குப் பின்னணியில் இருக்கும் இனக்குழு மனோபாவங்கள், பண்பாட்டுக் கூறுகள், மருத்துவப் பயன்கள் ஆகியவற்றை கள ஆய்வுகளின் சின்றாதாரங்களுடன் விளக்கும் இந்நூல் நாட்டுப்புறவியல் துறைக்கு வளமும் வலிமையும் சேர்க்கக்கூடியது. நவீனமயமாக்கலின் இருண்ட விளைவுகளான உடனடி உணவகங்கள் மூன்றாம் உலக மனிதர்களின் ஆரோக்கியத்தை, கலாச்சாரத்தை, பொருளாதாரத்தைச் சுரண்டும் நிலையில் நம்முடைய மரபுவழியான உணவு, மருத்துவ முறைகள் மாற்று முறைகளாகக் கருதப்படும் அவலச்சூழல் நிலவுகிறது. இந்நிலையயில் ஒரு தொன்மை நாகரிகமே நாட்டுப்புறவியலாய் வடிவம் கொண்டிருப்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

வன்னிய சாதிப்பிள்ளைகள்


வன்னிய சாதிப்பிள்ளைகள் :நாட்டுப்புறவியல் ஆய்வுக்கட்டுரைகள், அண்ணல்வெளியீடு, 4,கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 097, பேச: 044-232840, முதல்பதிப்பு 2001.ISBN : 81-87962-08-9 விலை ரூ 50. நூலைப்பற்றி: கலை, வழிபாடு, பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பங்கள், கோட்பாட்டாய்வுகள் என்னும் பெருந்தலைப்புகளில் பதினேழு ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மக்கள் வழக்காறுகளை மக்களிடமிருந்து சேகரித்து மிக நுணுக்கமாக இவர் ஆராய்ந்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். உணவு பற்றிய இவருடைய கட்டுரைகளும், தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகளும், நிலப்பெயராய்வு, சாதிப்பிள்ளைகளின் வாய் மொழி வரலாறு முதலான கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் துறைக்கு முற்றிலும் புதியவை. சமூக மேம்பிட்டிற்குத் துணை நிற்பவை - முனைவர் ஆறு.இராமநாதன்.

மண்கவுச்சி


மண்கவுச்சி : கதை,கவிதை,நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய நவீன தொகுப்பு. களம் வெளியீடு, மருங்கூர்,விருத்தாசலம் வட்டம்,கடலூர் மாவட்டம்-608 703. முதல் பதிப்பு 1994விலை ரூ 15. நூலைப்பற்றி: செவ்வியல் இலக்கியங்களுக்கெல்லாம் தாயாக விழங்குவது நாட்டுப்புற இலக்கியமே. நவீன படைப்பாளிகளின் புனைவுகளுக்கு சற்றும் குறையாத இலக்கிய வளம் வாய்மொழி இலக்கியப் படைப்புகளிலும் உண்டு என்பதை நமக்கு உணர்த்துகிறது இந் நூல். மண்ணிலிருந்து வருவது வாசமல்ல கவுச்சிதான் என்பதை நமக்கு அழுத்தம் திருத்தமாக இதிலுள்ள மக்கள் படைப்புகள் எடுத்துரைக்கின்றன.

Wednesday, July 8, 2009

கோத்தி குறும்பட விமர்சனம்(திருநங்கையின் உண்மைக் கதை)

பெண்களிடம் ஆண் தன்மை மிகுந்திருப்பதும் , ஆண்களிடம் பெண் தன்மை மிகுந்திருப்பதும் கரு உருவாகும் போது இணையும் குரோமோசோம்களைப் பொருத்தது.குழந்தைப் பிறப்பில் ஏற்படும் இத்தகைய குறைபாடு அக்குழந்தை வளரும்போது மனோரீதியான பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.அத்தகைய மன உளைச்சலை ஒரு திருநங்கையின் பார்வையில் பதிவு செய்திருக்கும் படம்தான் கோத்தி. அரை மணி நேரப்படம் பார்த்து முடிக்கையில் நாமே திருநங்கையாகி விட்டதைப் போன்ற மன உணர்வு நம்மையறியாமலே ஏற்படுகிறது. ஓர் உண்மையான திருநங்கையின் வாழ்க்கை என்பதால்தான் பார்வையாளர்களுக்கு இத்தகைய பாதிப்போ? அன்பு என்னும் சிறுவன் வளர வளர பெண்மை அவனுக்குள் பொங்கி வழியத்தொடங்குகிறது.அவனுடைய அன்றாட செயல்பாடுகளில் பெண் தன்மை வெளிப்படுகிறது. இதனைக் கவனித்து வரும் அவன் தந்தை அவனை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுகிறார். சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் அத்தனைக் கொடுமைகளையும் அன்பு எதிர்கொள்கிறான். இறுதியில் திருநங்கைகளிடம் அடைக்கலம் தேடிய அன்பு நிர்வாண கோத்தியாக்கப்பட்டு வளர்மதியாகிறாள். முழு திருநங்கையான பிறகு வளர்மதி சமூகத்தால் எப்படியெல்லாம் புறக்கணிக்கப் படுகிறாள் என்பது தான் மீதமுள்ள படம். திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் இப்படம் தோற்றுவிக்கிறது. நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் இப்படம் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. தயாரிப்பாளர் பிரித்திவ்குமார், இயக்குனர் முத்துக்குமார் ஆகியோருக்கு வாழ்த்துகள். குறுந்தகடு வேண்டுவோர் தொடர்புக்கு 9841166519. இயக்குனர் முத்துக்குமார்