தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, September 27, 2009

சாமான்ய மக்களின் தலைவர் சாமிக்கண்ணு



தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.

நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,

Monday, September 7, 2009

வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா




வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா
ஆலத்தியூர் வித்யா மந்திர் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சிறப்புரையாற்ற அப்பள்ளித் தமிழாசிரியர் பூ.மணிவண்ணன் அழைத்திருந்தார்.தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கு என்ற தலைப்பில் பேசும்படி குறிப்பிட்டனர் மாணவர்களுக்கேற்ப சற்று பேச்சில் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருந்தது. மாணவர்கள் சிறப்பாக கவனித்த விதம் மகிழ்ச்சியளித்தது.தமிழாசிரியர் வீரமணியின் வரவேற்புரை இலக்கிய நயத்தோடிருந்தது. மணிவண்ணன் மன்றத்தின் குறிக்கோள்களைக் கூறி என்னை அறிமுகப் படுத்தினார்.தாளாளரும் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளருமான (நிர்வாகம்) திரு.மதன்மோகன் தலைமையுரையில் இனி வருங்காலங்களில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கென்று ஒரு நாள் ஒதுக்கி சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.பள்ளியின் முதல்வர் திருமதி இராதாரவீந்திரன் அவர்கள் பெண் எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பற்றி மாணவிகளிடம் வினவி தன் பள்ளிப் பருவ நாட்களை நினைவுகூர்ந்தார். ஓசூரில் பணியாற்றுகின்ற தோழர் மதியழகன் இன்று அறிமுகமானதோடு நிகழ்ச்சியிலும் பங்கேற்று இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடினார் அவரது வலைப்பக்கம் பற்றியும் கூறினார்.http://mathikavithaigal.blogspot.com/ பள்ளி நூலகத்தை முதல்வர், மணிவண்ணன், நூலகர் ஆகியோருடன் பார்த்தோம் ஒரு கல்லூரி நூலகத்தைப்போல் மாணவர்கள் அமர்ந்து படிக்கப் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.நல்ல பல நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்தபோது அரசு பள்ளிகளில் இது போன்று அமைக்க இயலவில்லையே என்னும் ஏக்கம் எழுந்தது.மரம், செடிகொடிகள், புல்வெளி என இற்கை எழில்கொஞ்சும் சூழலில் பள்ளி அமைந்திருப்பது சிறப்பம்சம்.

Friday, September 4, 2009

ஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.





(ஆறு ஆண்டுகளுக்குமுன் எனக்கு வந்த கடிதம் இது. ஆசிரியரும் கல்வியாளரும் என் தந்தையின் நண்பருமான திரு. மு.கதிர்வேல் அவர்கள் எழுதியது. குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக என் மாணவர்கள் மேற்கொண்ட நெல்வயலில் மீன் வளர்க்கும் ஆய்வுத்திட்டம் பற்றி ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் என்னை இன்றும் ஊக்கப்படுத்தி வருகிறது. நம் பணியை நம் துறைசாட்ந்த வல்லுநர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி அலாதியானது. இந்த ஆசிரியர் தினத்தில் உங்களோடு பகிர்ந்துகொளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.)
ஓட்டேரிவிரிவுப்பகுதி
1.12.2003
அன்புள்ள புகழேந்திக்கு,
எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
நீ மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சி பற்றி ஆனந்தவிகடனில் வெளியான செய்திகளைப் படித்து புளகாங்கிதம் அடைந்தேன். ஓர் ஆசிரியர் ஏட்டிலுள்ள பாடங்களை மட்டும் படித்துக்காட்டி பொருள் கூறி மாணவர்களைத் தேர்விற்கு தயார் செய்யும் ஒரு சராசரி மனிதனாக மட்டும் விளங்கினால் பயனே இல்லை. நேர்மை, கடின உழைப்பு, தியாகம், பாசம் ஆகியவற்றுடன் மாணவர்களைப் புத்தாக்கம் புனையக்கூடியவர்களாக பரிணமிக்கச் செய்யும் ஒரு மாமனிதனாக ஓர் ஆசிரியர் செயலாற்ற வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை உடையவன் நான். இக்குணங்களைப் பெற்று ஒரு முன்மாதிரி ஆசிரியராய் நீ விளங்குகிறாய் என அறிந்து பெருமையடைகிறேன். 'ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள' என்ற திருப்பாவையின் வரிக்கு நம்மூர் வளத்தினையே எடுத்துக்காட்டாக அன்றும் இன்றும் என்றும் கூறிப் பெருமிதம் அடைபவன் நான். நீயும் அதே பாணியில் எழுதியிருப்பது என்னைக் கவர்ந்தது. நான் 1962-63 இல் ஆதனூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றியபோது அப்பகுதி மாணவர்களிடம் பொதிந்திருந்த திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்ந்தேன் என்பதை உன் அப்பாவைக் கேட்டுப்பார் தெரியும். உனது மாணவர்கள் இயற்கையிலேயே திறமை உள்ளவர்கள். அவர்களது அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து மேம்பாடடையச்செய்யும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருப்பது உனது தொழிலில் நீ ஏற்படுத்திக்கொண்ட கமிட்மெண்ட்டை காட்டுகிறது. மாணவர்களின் மனதைப் பக்குவப்படுத்தி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடச் செய்வதில் நானும் ஈடுபடுவேன். இனி வெறும் போதனையாளர்களுக்கு மரியாதை கிடையாது. சாதனையாளர்களுக்கு தான் மரியாதை. எனவே நீ அனைத்து தரப்பினரின் அரவணைப்பையும் பெற்று மாணவர்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் திறன் மிக்கவர்களாக நல்ல அனுபவ சாலிகளாக உருவாக்கு. எனது நல் வாழ்த்துகள் உனக்கு துணை நிற்கட்டும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்றும் அன்புடன்,
மு.கதிர்வேல்.