தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, December 21, 2011

காவல்கோட்டம் நாவலுக்கு சாஹித்ய அகாடமி பரிசு


சு. வெங்கடேசன் ஒரு தமிழ் புதின எழுத்தாளர். மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாராகவும் உள்ளார். வெங்கடேசன் மதுரையில் வசிக்கிறார். திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிக்கு 2006ல் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இலக்கிய வாசகராக இருந்த வெங்கடேசன் எழுதிய ஒரே நாவல் "காவல்கோட்டம்". பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கர்களும். இன்னொன்று சிறிய எண்ணிக்கையில் திருட்டை தொழிலாகக் கொண்ட கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் காட்டுகிறது. இதற்கு 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

காவல் கோட்டம் பற்றி மேலாண்மை பொன்னுசாமியின் விமர்சனம் கீற்று இணையதளத்தில் வெளிவந்தது


பரந்த களத்தில் பாத்திரங்கள் பலவற்றை உலவ விட்டு ஒரு வாழ்க்கையை எழுத்திலக்கியமாக முன்வைத்தால், அதை நாவல் என்கிறோம். பரந்த காலங்களின் அடுக்கு வரிசைகளில் எண்ணிறந்த மனிதர்களை பலதலைமுறைகளில் இயங்கவிட்டு, அவர்களது வாழ்வுலகத்தையும் மன உலகத்தையும் பண்பாட்டு ஒளியுடன் வரலாற்றையே எழுத்திலக்கியமாக முன்வைத்தால்.. அதை என்னவென்பது? மகாநாவல் என்று சொல்லலாமா? சொல்லலாம். தனித்துவ உயரம்மிக்க, மகத்தான நாவ்வல் என்றும் சொல்லலாம். அத்தனை தனிச்சிறப்பு மிகுந்த அற்புதமான நாவலை படைத்திருப்பது, த.மு.எ.ச.க.வின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன். ‘காவல்கோட்டம்’ என்ற அந்த நாவல் வெளியான சில நாட்களிலேயே புகழ்மிக்க இரு விருதுகளைப் பெற்று, பல படைப்பாளிகளின் பிரமிப்பான பாராட்டுகளைப் பெற்றுவிட்டது.

“பொதுவாக பொதுவுடமை இயக்கம் சார்ந்து இயங்குகிற படைப்பாளிகளுக்கு கொள்கை வைராக்கியம் இருக்கும். இலக்கியத்தை பிரச்சாரம் செய்கிற சாதனமாக மட்டுமே கருதுகிற இயல்பு இருக்கும். கலை குறித்த மதிப்போ.. இலக்கிய மாண்பு குறித்த அழகுணர்வோ இருக்காது” என்கிற இலக்கிய அறிவுஜீவிகளின் இறுகிப்போன அவதூறான மதிப்பீடுகளையெல்லாம் தகர்த்தெறிந்திருக்கிற மிகச்சிறந்த கலைப்படைப்பாக நாவல் வந்திருக்கிறது. அழகியல் பரிபூர்ணமாக கைகூடி வந்திருக்கிற மகத்தான வரலாற்று நாவல். கலைவளத்திலும், இலக்கிய அழகிலும் முதல் தரமான, அபூர்வமான காவிய நாவல்.

பார்த்த முதல் பார்வையில் புத்தகத்தின் பருமன் மிரட்டுகிறது. உள்ளங்கையை அகல விரித்துப் பிடித்தாலும் அடங்க மறுக்கிற புத்தகமது. இதை வாசித்து விட முடியுமா, நடக்கிற வேலையா என்ற மலைப்பையும் தயக்கத்தையும் தவிர்க்க முடியவில்லை. அதே புத்தகப் பருமன் பிரம்மாண்டமே வாசிக்கும் ஆவலைத் தூண்டவும் செய்கிறது. வசீகரமான பிரம்மாண்டம். ஆரம்பத் தயக்கத்தை உடைத்துவிட்டு, ஆவல் முனைப்போடு நாவலுக்குள் பயணப்பட்டால், முதல் அத்தியாயம் மட்டும் தீப்பிடித்த மாதிரி நம்மை வாரிச்சுருட்டுகிறது.

மாலிக்கபூர் படையெடுப்பின் வெற்றி ஆரவாரிப்பு, சூறையாடப்படுகிற கிராமம், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் வதைபடும் பெண்கள், குதிரைகளில் பெண்களை தூக்கிச் செல்கிற படையினர், கிராமக்காவல் பொறுப்பேற்ற கருப்பனின் வேல்கம்புப் பாய்ச்சல், தாக்குண்டு வீழ்கிற கருப்பனை உசுப்புகிற கர்ப்பிணி மனைவி சடச்சியின் வார்த்தைச் சவுக்கடிகள். “காப்பாத்து.. இல்லேன்னா சாகு”.

ரத்தச் சகதியில் கிடக்கிற அவனின் ஆவேசத்தில் நாலுபேரை போட்டுத்தள்ளி விட்டு, மரணத்தில் சாகிற காவல்கார கருப்பன், அவனை ரத்த அணுக்களில் குலதெய்வமாக வைத்து வணங்கி உச்சரித்து சுவாசிக்கிற சடச்சி வயிற்றுப் பிற்காலத் தலைமுறைகள், களவும், காவலும் செயல் - இந்தக் காவல் காக்கும் அதிகாரத்தை இந்தக் கள்ளர்களுக்கு யார் தந்த்து என்ற கேள்விக்கான பதிலாக.. மதுரை மாநகரை மையமாகக் கொண்டு - போரும், வெற்றியும், ஆட்சியும் பெற்ற திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்கர் வம்ச மன்னர்கள் வரலாற்றுக்குள் பயணப்படுகிற நாவல்.

கிருஷ்ணதேவராயர், விஸ்வநாதநாயக்கர், விஜயரெங்க நாயக்கர், ‘ஸதி’யாக சிதையேற மறுத்து ராணியான மங்கம்மா, திருமலைநாயக்கர் உட்பட அனைத்து நாயக்கர் வம்ச மன்னர்கள்.. அவர்தம் போர்கள், படையெடுப்புகள், சாகசங்கள், வெற்றிகள், பாளையம் அமைத்தல், நிர்வாகம் செய்தல், அணைகட்டுதல், கோட்டை கட்டுதல், கோவில் எழுப்புதல், அந்தப்புர விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து வரலாறுகளும் 280 பக்கத்துக்குள் சொல்லப்படுகிறது. அவசரகதியில் சொல்லப்படுவதாலேயே கலைத்தரமும் புனைவுத்தன்மையும் மிகவும் குறைகிறது. வாசிக்க முடியாத அயற்சியும், அலுப்பும் வருகிறது. நகரமறுக்கிற நாவல்.

ஆயினும்.. விஸ்வநாத நாய்க்கர், ‘தீப்பாய’ மறுத்த மங்கம்மா, கங்காதேவி கதை.. மதுராவிஜயம் போன பகுதிகள் கலைவசீகரமற்ற மொழிநடையில் இலக்கியப் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கின்றன. வாசித்த மனசில் வேரடித்து விடுகிற ஆற்றல்மிக்க மொழிநடை. 1048 பக்கம் மொத்தம். 280 பக்கங்களைத் தாண்டி விட்டால், அப்புறம் உள்ளதெல்லாம் ஐப்பசி மாசத்து வைகைப் பெருவெள்ளப் பாய்ச்சல்தான். ஆரம்ப அத்தியாயத்தின் தீப்பிடித்த அதே பரபரப்பு.. முழு மொத்த நாவலும் பெருவெள்ளமாக நம்மை வாரிச்சுருட்டி அள்ளிச் செல்கிறது.

கவித்துவமான வசீகரமொழிநடை. ஒன்றைத்தொட்டு ஒன்றாக தொடர்கிற நிகழ்வுச் சங்கிலிகளின் கதைப் பின்னல். வார்த்தைகளின் சித்திரமாக காட்சிப்படுகிற வாழ்க்கையின் உயிர்த்துடிப்பு. அசுரத்தனமான வேகத்தில் நம்மை பற்றியிழுத்துக் கொண்டு போகிற மொழிநடை. கீழே வைக்க முடியவில்லை. நம்மை உழுது பிளந்து கொண்டு, முன்னேறுகிற நாவல்மொழி குடிமக்களைப் பற்றியது. அமணமலையடிவாரத்தில் தாதனூர் கிராமத்தை குறீயீடாக முன்வைக்க முடிகிறது. முழுக்க அந்த மக்கள்.
அந்திப்பொழுதில் தான் அவர்களுக்கு விடியல் திறக்கும். சூரியன் உதிக்கும் பொழுதில் தான் துயில்முடிந்து வாழ்க்கை ஆரம்பிக்கும். இருளே தொழிற்களமாக இருப்பதால், பெரும்பகுதி நாவல் இருட்டில் பயணப்பட்டு, அந்த மக்களின் துயரார்ந்த வீரவாழ்க்கையை வெளிச்சப்படுத்துகிறது. நாவல் வாசித்து முடித்த பின்பும் இருள்குறித்த கவித்துவச் செறிவான வர்ணிப்புத் தெறிப்புகள், இரவுப்பூச்சிகளாய் கரிய இருளைப் பேசும் ஒளிச் சொற்களாக மனசுக்குள் ரீங்கரிக்கின்றன.

ஊர்ப் பெரியாம்பளை ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, விசாரிப்புகளாலும், கண்காணிப்புகளாலும் நிர்வகிக்கிறார். கொத்து கொத்தாக களவுக்குப் போகிற குழுக்கள்; கைக்கம்போடு காவலுக்குப் போகிறவர்கள்; களவுக்காக உடம்பையும், உயிரையும் துச்சமென மதித்து, வயிற்றுக்காக உயிரைப் பயணம் வைத்து ஓடிப் போகிற அதே மூர்க்கம்.. களவு நடக்காமல் காவல்காக்கிற போதும் உயிரை, உடம்பை, ரணத்தை எதையும் பொருட்படுத்தாமல் விரட்டிப் பாய்கிற அதே உக்கிரம்; இந்த இரண்டின் சமநிலைப் பண்பே இந்த மக்களின் பொதுச்சுபாவமாக சுடர் வீசுவதை உணர முடிகிறது. இந்த மக்களின் வாழ்க்கைப் பண்புகளின் மீது பரிவுணர்வும் மரியாதையுணர்வும் சுரப்பதை தவிர்க்கவே முடியவில்லை.

கூட்டாக சென்று இருட்டுக்குள் குறிவைத்து நடத்துகிற களவுகள் - களவுத்தொழிலின் அத்தனை நுட்பங்களும், தந்திரங்களும், உத்திகளும், சூட்சுமங்களும் இந்த நாவல் நெடுகிலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உணர்த்தப்பட்டிருக்கின்றன. மாடு களவும், கதிர் கசக்குதல், கன்னம் வைத்து களவாடுதல், ஆடுகளைக் களவாடுதல் என்று அத்தனை வகையான களவுகளும் நாவலுக்குள் வருகின்றன. சும்மா வரவில்லை, களவிலேயே ஊறித்திளைத்த அனுபவசாலிகள் விவரிப்பதைப் போல் அத்தனை நுணுக்கமான சித்தரிப்புகள். அந்த முரட்டு மனிதர்களின் மூர்க்கமும் உக்கிரமுமான அத்தனை சாகசங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருகின்றன.

தாதனூரில் யாராவது ஒருத்தருக்கு சரடுபோடுகிற கல்யாணம் என்றால், அந்த விழாவுக்குத் தேவையான அத்தனை பொருட்களும், அரிசி மூடைகளும், ஆடுகளும் கூட்டுக்களவுகள் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. ‘களவு ஒரு குற்றம்’ என்ற உணர்வு ஒருதுளிக்கூட இல்லாத மனப்புரிதலே அவர்களது சமூக சுபாவமாக, பொதுப்பண்பாக இருக்கிறது. யாரிடமும் எந்த சேமிப்புமில்லை. தனியுடைமையாக யாரிடமும் எந்தக் களவுப் பொருளுமில்லை. வனத்தின் இருட்புதருக்குள் ஊடுருவி, உயிரை பணயம் வைத்து, வேட்டையாடுகிற மிருகங்கள், கனிகள், தேன் அடைகளை சகலருக்கும் பகர்ந்துண்கிற ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகத்தின் வேட்டைக்குண நீட்சியாக இந்தக் களவுகளும் கருதப்படுகின்றன. இயல்பான உணவுத்தேடலாக, நியாயமிக்கதாக நினைக்கப்படுகிறது.

தில்லைவனம்பிள்ளை வீட்டில் பழிவாங்குவதற்காக களவாடப்படுகிற ஏகப்பட்ட தங்கநகைகள் கூட யாரிடமும் ‘சொத்தாக’ ஒதுங்கவில்லை. ஒரு பஞ்சத்துக்கான சமூக உணவாக மட்டுமே அது உருமாறுகிறது. மதுரையை தெருக்காவல் காக்கிற உரிமையை பிரிட்டிஷ் அரசு தடைசெய்து விட்டபோதிலும் கூட, நகரைக் காவல் காக்கிற அந்த நேர்மையும், கண்ணியமும் அந்த மக்களின் உயர்பண்புக்கான சாட்சியங்கள். எத்தனை வகையான களவுகள் வாசிக்க வாசிக்க பிரமிப்பூட்டுகின்றன. கன்னம் வைத்து களவுக்குப் போன இடத்தில் தூக்கில் தொங்குகிற பிரேதம் கண்டு மனப்புலம்பலோடு திரும்பி வருகிற ஈரக்குணம்; கன்னம் வைத்து, உயிரைப் பணயம் வைத்து, பங்களாவுக்குள் இருட்டுக்குள் நுழைந்து விட்டபிறகு இரு இளம் உயிர்களின் உடல் கலப்பைப் பார்த்து, அதை இடைஞ்சல் செய்யாமல் அலுங்காமல் திரும்பி விடுகிற மானுடப்பண்பு; களவு சார்ந்த அத்தனை நுட்பங்கள், நெளிவு சுளிவுகள், பழக்கவழக்கங்கள்; ‘கருப்பா’ என்ற குலதெய்வப் பெயரையே அனைவரின் பெயராகவும் அமைத்தல்’ தடயம் விடாமல் தப்பித்து வருதல், துப்பு சரியில்லாமல் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால் உயிர்த்தப்பி மீண்டு வருகிற போராட்டம்.. அதில் அடிபட்டு சாய்கிறவனையும் தூக்கித் தோளில் போட்டு வருகிற சாகசம்; பாம்பு கவ்வி விட்டால் கால்கட்டை விரலையே வெட்டியெறிந்து விட்டு தப்பிக்கிற துணிச்சல்.. இப்படி வாசிக்க வாசிக்க ஆச்சர்யப்பரப்பில் நம்மை வீசியேறிகிற களவு வகைகள்; களவுப்பண்புகள்.

களவுகள் மாத்திரமல்ல.. காவலிலும் எத்தனையெத்தனை வகைகள். தெருக்காவல், நகரக்காவல், காட்டுக்காவல், கிராமக்காவல் என்று எத்தனை வகையான காவல்கள். காவல்பணம் தரமறுக்கிற செல்வந்தர் வீட்டில் களவு செய்கிற துணிகரச் சம்பவங்கள்.

களவும் காவலும் மட்டும்தானா? கல்யாணம், பஞ்சாயத்துகள், விவாகரத்துகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், காதுவளர்ப்பு வகைகள் என்று அகவாழ்க்கை, புறவாழ்க்கையின் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் மனசுக்குள் நிகழ்த்திக் காட்டுகிற வார்த்தைச் சித்திரங்கள். அந்தக்காலத்து மனிதர்களின் வெள்ளைக் குணத்தின் வீரத்துடிப்பு, அதன் முழு உன்னத்தன்மையுடன் நம்முன் விரிந்து படர்கின்றது.

தாசிக்குலத்தில் பிறந்து தமது சமூகச் செயல்பாட்டு மனப்பண்பால் குலதெய்வங்களாக மக்களால் பாட்டுகளாலும், கதைகளாலும் காலம் நெடுகிலும் கொண்டாடப்படுகிற குஞ்சிதம்மாள், ராஜம்மாளை நம்மால் மறக்கவே முடியாது. மாயாண்டிப் பெரியம்மாள், கழுவன்பெரியாம்பளையிலிருந்து தாதனூர் கிராமத்து அத்தனை மனிதர்களின் அகத்தையும் புறத்தையும் செயல்பாட்டு பண்புத்தீரத்தையும் மனசால் தொட்டுணர்கிற அனுபவத்தைத் தருகிறது நாவலின் மொழிநடை.

சின்னாள் பாத்திரம் ஓர் ஆச்சர்யப்புதிர். பொன்னாங்கனாக இருந்து டேவிட் ஃபாதரான பாத்திரமும் வினோதத்தின் முடிச்சு. வீரத்துக்காகவே துணிவுடன் உயிரை விட்ட வெள்ளை உயிர்கள். இப்படியான எண்ணிறந்த மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் காரணமாக, இறந்த பின்பும் நம் நெஞ்சுக்குள் மரணமற்று வாழ்கிற அமரத்துவம்.

‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா’ என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்தச் சொலவடைக்குள் இத்தனை பெரிய நீள்வரலாறுகளும், ரத்தபயங்கரச் சாகசங்களும், ஈரநெஞ்சத்துக் கருணைப் பண்புகளும் பொங்கிப் பெருகுவதை நாவல் சொல்கிறது.

கோட்டையை எழுப்புகிற விஸ்வநாத நாயக்கரைப் போலவே, இடிக்கிற கலெக்டர் துரையும் நம்முன் நிலைக்கிறார். காவல்துறை எனும் அதிகார நிறுவனம் முளைத்து, பயிராகி, செடியாகி, மரமாக வளர்ந்து சமூகத்தையே தம் கட்டுக்குள் வைக்கிற அதிகாரக் கோட்டையாக வளர்கிற வளர்ச்சி நாவலில் அணுஅணுவாக சித்தரிக்கப்படுகிறது.

உணர்ந்த்தை உணர்த்துவதில் அடைகிற வெற்றிதான், அழகியலின் இலக்கணம். இந்த நாவல் நீண்டநெடுங்காலப்பரப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் வரலாற்றை ஒட்டுமொத்தமாக கட்டமைத்து முன்வைத்து பகிர்ந்திருப்பதில் அழகியல் பரிபூர்ணமாக மிகப்பெரிய வெற்றியை நாவல் பெற்றிருப்பது ஓர் ஆச்சர்யப்புதிர். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது புதிர்மயமான கேள்வி. பார்த்தறியாத, பட்டறியாத ஒரு பாடுபொருளை எப்படி அழகியல்பூர்வமாக வெளிப்படுத்துவதில் வெற்றிபெற முடிந்தது என்பது யாவரையும் திணறடிக்கிற பிரமிப்பு.

‘ஸ்பார்ட்டகஸ்’ என்ற நாவல், மனித அடிமைகளைப் பற்றியது. அடிமைகளின் கண்ணீர் வெதுவெதுப்பையும், கனன்றெறிகிற அடிமை மனங்களின் தகிப்பையும், காதல்பூக்களின் மென் வருடலையும் வாசக அனுபவமாக இடம் மாற்றி வைத்தது. அதிசயமான முறையில் அழகியல் கைகூடி வந்திருந்தது. அந்த நாவலை எழுதியவர், அடிமை வாழ்க்கையை யூகிப்பில் கூட உணரமுடியாத ஆங்கிலேயர். அவர் கொண்டிருந்த சித்தாந்தம் அடிமைகளை உயிரின் ஆழத்திலிருந்து நேசித்து, கசிந்துருகிய இதயம் ஒன்றை அவரிடம் உருவாக்கியிருந்தது. அந்த நேச நெகிழ்வின் அசல்தன்மையின் உயிர்ப்பான வெளிப்பாடுதான், அந்த நாவலின் அழகியலை வெற்றி பெற வைத்திருந்தது.

இந்தக் ‘காவல்கோட்டம்’ நாவலாசிரியரும், இந்த மக்களை உள்ளன்போடு, உயிரின் ஆழத்திலிருந்து பீறிடுகிற நேசிப்போடு கவலைப்பட்டு யோசித்திருக்கிறார். அதுதான் நாவலை கலாபூர்வமான அழகியல் வெற்றிபெறச் செய்திருக்கிறது.

16, 17, 18, 19 ம் நூற்றாண்டுகளின் நிகழ்வுகள் குறித்த கடிதங்கள், ஆவணங்கள், நாவல்குறிப்புகள், ஆதாரக் காகிதங்கள் யாவும் அப்படியப்படியே அதனதன் மொழி வடிவத்திலேயே நாவலுக்குள் இணைத்திருப்பது, புத்திசாலித்தனமான உத்தி. படைப்பாளியின் பத்தாண்டு காலத்தேடல் தீவிரத்தையும் அவற்றுக்கான சிரமத்தையும் உணர்த்துவதைப் போலவே.. பாடுபொருளின் நம்பகத்தன்மைக்கும் சாட்சியமாக நிற்கிறது.

ஆசிரியரின் கவித்துவ விவரணை மொழிநடையும், பாத்திர மக்களின் பேச்சு மொழியின் மண்வாசமும் முரண்படாமல், ஓர் இயல்புத்தன்மை பெற்றிருப்பது ஓர் ஆச்சர்யம். தமிழில் வந்திருக்கிற எந்த நாவலுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு, இந்த நாவல் தனித்துவ உயரத்தில் சூரியனாக ஒளிர்கிறது.

நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ (தமிழில் ‘ஆற்றங்கரைதனிலே’, நிலம் என்னும் நல்லாள்’ என்ற தலைப்புகளில் இருநூல்களாக வெளிவந்துள்ளது.) எனும் ருஷ்ய நாவல் இலக்கியப் படைப்புக்குச் சமதையான உயரத்தில் நிற்கிறது ‘காவல்கோட்டம்’.

நாவலின் உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்தொடிந்து போனவர்களின் மனப்பிறழ்வான புலம்பல்களையும், வசைகளையும், அபத்த அவதூறுகளையும் இந்த மக்களின் ஈரநெஞ்சத்துடன் நாமும் மன்னித்து விடலாம்.

கட்டையன், கழுவன், மாயக்காள், கழுவாயி, சின்னான், மாயாண்டி, ஜேம்ஸ் ஃபாதர், பசுமலை ஃபாதர் இப்படி இன்னும் பலப்பல எண்ணிறந்த மனிதர்களின் வாழ்க்கை இன்றும் நமக்குள் உஷ்ண உயிர்ப்போடு உலவுகிறது. சடச்சியின் கூந்தலைப்போல ஆலமர விழுதுகளின் வெக்கையை மனசு தொட்டுணர்கிறது. தானியம் குத்துகிற பொதுக்களத்தில் பெண்களும், கிழவிகளும் நடத்துகிற உரையாடலில் பெண்மை சக்தி ரூபமாக விசுவரூபமெடுக்கிறது. பெண்ணிடம் தோற்ற ஆண்களின் அந்தரங்க அவலம் அலசப்படுகிறது. எந்தப் பெண்ணையும் எந்த ஆணும் எப்போதும் ஜெயித்ததில்லை என்ற பேருண்மையும் கசிகிறது.

இன்னும் இன்னும் பாராட்டுவதற்கும், பல்வேறு தளங்களில் பல்வேறு வகையான ஆய்வு விவாதங்கள் நிகழ்த்துவதற்கும் இடம் தந்து உள்விரிவு கொள்கிற ஆழமும் செறிவும் பல்லாயிரம் மடிப்புகளாக நாவலுக்குள் இருக்கின்றது.

மாலிக்கபூர் பிரவேசத்தில் துவங்குகிற நாவல், பிரிட்டிஷ் காலனியம் உள் நுழைந்து, வேரடித்து, சகலருக்கும் கல்வி என்ற நிலைமை தருவதுடன் குற்றப்பரம்பரை, ரேகைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் மூலம் தனது அதிகாரத்தையும் நிறுவுவதில் அடைகிற வெற்றியுடன் நாவல் முடிகிறது.

ஒட்டுமொத்த நாவலின் அடிநாதமாக ‘அதிகாரம்’ என்ற விஷயம் பூமிக்குள் நதியாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. மாலிக்காபூர் அதிகாரத்தை பறிக்கிற நாயக்கர்களாட்சி.. அதன் அதிகாரம்.. களவு தொழிலால் கிடைக்கிற காவல் அதிகாரம்.. காவல் அதிகாரத்தை பறிக்கிற காலனியப் போலீஸின் அதிகாரம்… இந்த அதிகார அடிநாதத்தின் மேல் அதிர்வது, தாதனூர் மக்களின் ரத்தமும் சதையுமான வீரப்போராட்டங்கள், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி தந்தால் என்னாகும்? பொன்னாங்கன், ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் பேரன்பு செலுத்துகிற டேவிட் ஃபாதராக மாறுகிற அதிசயம் நிகழும்.

ரயிலின் வருகையையும் தாதனூர்க்காரர்கள் களவுக்கே பயன்படுத்துகிறார்கள். முல்லைப் பெரியார் அணைக்கட்டு நிகழ்வு ஒரு சமூக விஞ்ஞானத்தை கற்றுத் தருகிறது. இப்படியே.. நிறைய பாராட்டுப் பட்டியல்கள் போட்டுக் கொண்டே போகலாம்.

இப்படியொரு நாவல் படைப்புச் சாதனையை, அழகியல் வெற்றிமிக்க வரலாற்று நாவல் படைப்புச் சாதனையை த.மு.எ.ச.க.காரர் செய்திருக்கிறார் என்பது, முற்போக்கு இலக்கிய அமைப்புக்கே பெருமையான விஷயம். பல இலக்கிய பீடங்கள் தானாக தகர்ந்து விழுவதில் த.மு.எ.ச.க. மாவீரன் பேனா காரணமாகிறது,

இது வெறும் நாவல் அல்ல. சரித்திர நாவல். மதுரையை மையப்படுத்தி தமிழகத்தையே விவரிக்கிற வரலாற்று நாவல். வெறும் புனைவு நாவலல்ல. உரிய ஆவண ஆதாரங்களுடன், ஆராய்ச்சிப்பூர்வமான தகவல்களுடன் புனைவுப் பேரழகுடன் எழுதப்பட்ட நம்பகத் தன்மைமிக்க சரித்திர நாவல். அந்த அடிப்படையில் எழுகிற சில கேள்விகள்.. சில விமர்சனங்கள்..

வரலாறுகளை வாசித்துப் பழக்கமில்லாத ஒரு வாசகன், இந்த நாவலின் ஊடாக மட்டுமே பயணப்பட்டு, கற்றறிந்தால், என்ன வலாறு கற்பான்?பாண்டியர், சோழர், சேரன் என்ற மூவேந்த மன்னர்கள் வாழ்ந்ததற்கான தடயமே இல்லாதது போன்ற மாயத்தோற்றம் எழாதா?

மாலிக்காபூர் படையெடுப்பிலிருந்து மதுரையை மீட்டெடுத்து நாயக்க மன்னர்களே நல்ல ஆட்சியையும், வளத்தையும், வெற்றிகளையும் பெருமைகளையும், ஆலயங்களையும் மக்களுக்கான நன்மைகளையும் வழங்கியது போன்ற சித்திரம் தானே நாவல் தருகிறது? இது சரியா? இதுதான் தமிழக வரலாறா?

முந்தைய மன்னர்கள் ஆக்கிரமிப்புகளை விட, நாயக்கர் மன்னர்களின் படையெடுப்புகளும், வெற்றிகளும், ஆட்சிகளும் தான் தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய பண்பாட்டு முறையை வாழ்க்கை அடையாளத்தையே துடைத்து, வைணவ மதத்தை அரச மதமாகவும், ஆதிக்க அதிகாரத்தின் மூலமாக அந்த மதத்துக்கு பண்பாட்டு செல்வாக்காகவும் மாற்றியது என்பதுதானே உண்மை?

தமிழ்நாட்டில் நிலவிய அத்தனை தொழில் உற்பத்தி, ஆட்சி அதிகார நிர்வாக முறைமைகள், அடித்தட்டு மக்களின் உற்பத்தி வாழ்க்கை முறைமைகள் அத்தனையிலும் தெலுங்கு மக்களை குடியேற்றி திணித்தது அக்காலம் தானே! தெலுங்கு வைணவப் பிராமணர்களிலிருந்து தெலுங்கு சக்கிலியர் வரை.. உழவில், தொழிலில், ஆசாரிமார், குயவர் அத்தனை சமூகப் பிரிவுகளும் தெலுங்கர்களை நிரப்பியது அக்காலம்தானே?

இந்த உண்மைகளையெல்லாம் நாவல் மறைத்து விட்டு, நாயக்கர் மன்னர்கள் அத்தனை பேரையும் கொண்டாட வைக்கிறது நாவல். மரியாதைக்குரியவர்களாக்குகிறது. ‘மூவேந்தர் காலத்தை பொற்காலம்’ என்கிற பார்வைப் பிறழ்வுக்கும், நாயக்க மன்னர்களை கொண்டாட வைக்கிற இந்த நாவல் குணத்துக்கும் என்ன வித்தியாசம்?

மார்க்சியப் பேரறிஞர் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலை வாசித்து முடித்தால் சகல மன்னர்களையும், மன்னர்களின் அதிகாரத்தை காப்பாற்ற தத்துவங்களும், தந்திரங்களும் கற்றுத்தந்த அறிவுசார் வேதியர்களையும் முழுசாக வெறுக்கத் தோன்றும்; ‘மக்கள் விரோதிகள்’ என்ற சிந்தனை எழும். அப்படியொரு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மன்னர்களை மதிக்கத் தூண்டுகிறதே, இந்த நாவல். இது சரியா? நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மனோபாவத்தை வாசகனிடம் உருவாக்க வேண்டிய கடமையிலிருந்து நாவல் நழுவவில்லையா? ஒரு முற்போக்கு சமூகப் பார்வை காணாமல் போய்விடவில்லையா?

மன்னர்கள் வரலாறு, மக்கள் நோக்கிலிருந்து பார்க்கப்படாமல், தெலுங்கு மன்னர்களை மட்டும் கொண்டாட வைக்கிற, மதித்துப் போற்றுகிற, காவிய நாயகர்களாக சித்தரிப்பது சரியா?

நாவலின் பெரும்பகுதியும் களவும் காவலுமாக சித்தரித்து அவர்களது சாகசத்தை கொண்டாடுவது போதுமானதா? ஆடு வளர்க்கிற, மாடு வளர்க்கிற, கதிர் விளைய வைக்கிற, பொருளுற்பத்தி செய்து தேசத்துக்கு சோறு போடுகிற, வீடுகள் கட்டுகிற அந்த உழைப்பாளி உழவு மக்களும் தமிழ் மக்கள் தானே. களவுகள் தருகிற அந்த மக்களின் வலிகள் ???

சமூக உற்பத்தியின் ஈடுபடுகிற சமூக சக்திகளான தமிழர்களைத் தவிர்த்து விட்டு, களவும் காவலுமென இருந்த ஒரு சிறுபகுதியை மட்டுமே பிரதானப்படுத்தி அதுவே ‘தமிழக முழுமை’ என்ற மாயத்தோற்றம் தருவது சரிதானா?

களவும் காவலுமென இருந்தவர்கள் காலம் பூராவிலும் அப்படித்தான் இருந்தவர்களா? மூவேந்தர்களுக்கு ராணுவ அதிகாரமாக இருந்து, தோற்கடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட பூர்வீகத் தமிழ்ப் படைகளாக ஏன் இருந்திருக்கக் கூடாது?

நாயக்க மன்னர்களின் ஆட்சித் திறமையும், திருமலை நாயக்கர் தந்த காவலதிகாரம், அதைச் சிதைத்து சட்டம், ஜனநாயகம், நீதிபரிபாலன ஒழுங்கு முறை, ஆலைகள், ஆலைத்தொழில் உற்பத்தி, சகலருக்கும் கல்வி என்று முதலாளித்துவ வாழ்க்கை முறைமையை உருவாக்க முயன்று வெற்றி பெறுகிற காலனிய ஆட்சியை எதிர்த்த குரலுடன் இந்த நாவல் முடிகிறது.

இயங்கியல் வரலாற்றுப் பொருள்வாதத்தத்துவ நோக்கில், மார்க்சிய வெளிச்சத்தில் சமுதாய வளர்ச்சிப் படிநிலைகளை பார்த்தால்.. நிலப்பிரபுத்துவத்தை விட, முதலாளித்துவ வாழ்க்கை முறைமை முற்போக்கானதல்லவா? சகலருக்கும் கல்வி தந்து, வர்ணாசிரம வேரறுத்து, ஆலைத்தொழில் உற்பத்தியை தருகிற முதலாளித்துவ முறைமை, நிலப்புரபுத்துவத்தை விடவும் முற்போக்கானதல்லவா?

இந்த நாவலின் காலனிய எதிர்ப்புக்குணம் என்பது, அரும்பி மலர்ந்து வருகிற முதலாளித்துவ வருகையை மூர்க்கமாக எதிர்த்தொழிக்க முனைகிற நிலப்புரபுத்துவப் பண்பாட்டு குணமாகத்தானே இருக்கிறது?

இப்படியான கேள்விகளும், விமர்சனச் சிந்தனைகளும் நாவல் வாசிப்பிற்குப் பிந்தைய யோசிப்புகளில் எழுகின்றன. இதற்கான பதில்கள் தேவைப்படுகின்றன. ஆயினும்.. இந்தக் கேள்விகளும், விமர்சனங்களும் எத்தனை சத்தியமோ.. அதைவிட வலிமையான உயிர்ப்பாற்றலுடன் கலைத்தரத்துடன் நாவல் ஒளிவீசுவதும் சத்தியமாகும்.

மொழிநடையின் கவித்துவமிக்க மயக்கமூட்டுகிற வசீகரமும், பாத்திரங்கள் வார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்ட விதமும், வரிசை தப்பிய வரிசையாக.. ஒழுங்கு தவறிய ஒழுங்காக அடுக்கப்பட்ட தொடர்பற்ற சம்பவ அடுக்குப் பகுதிகள் எனும் நீள்கதைப்புனைவு விதமும்.. மிகச்சிறந்த புனைவுக்கான சாட்சியமாகும்.

வேல்கம்புகளும், களறிகளும், குதிரைகளும், போர்க்குணமிக்க மக்கள் வரலாற்று வாழ்க்கைக்காக உயிரைப் பணயம் வைக்கிற அன்றாட இருட்டு போராட்டங்களும் அவற்றுக்கேயுரிய வீச்சுடன் வேகத்துடன் பதிவாக. ரத்தமும் சதையுமான உயிர்த்துடிப்புமிக்க காவியமாகியிருக்கிறது நாவல்.

‘தமிழிலத்தியத்தில் புதுவரவு’ என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக.. தனித்துவ உயரம் மிக்க .. சூரிய நாவலாக… நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ போன்ற உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக காவியத் தகுதிமிக்க நாவலாக சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ திகழ்கிறது.

- மேலாண்மை பொன்னுச்சாமி
நன்றி : கீற்று


Thursday, November 17, 2011

தினமணி ஆசிரியருக்கு ஒரு மடல்


17.11.2011 இன்று வெளியான தினமணி தலையங்கத்தில் (கீழே உள்ளது)ஆசிரியர்களைப்பற்றி கூறியுள்ள கருத்திற்கு மறுப்பு தெரிவித்து தினமணி ஆசிரியருக்கு எழுதிய மடலை இங்கே பதிகிறேன். 


தலையங்கம்: இதுவல்லவா சட்டம்!

First Published : 17 Nov 2011 04:09:32 AM IST

Last Updated : 17 Nov 2011 11:48:18 AM IST
ஓரே மாதிரியான பாடத்திட்டத்தின் மூலம் சமச்சீர் கல்வி என்று சொல்வதைவிடவும் உண்மையான சமச்சீர் கல்விக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக அரசு வெளியிட்டுள்ள குழந்தைகள் கல்வி கற்றல் உரிமைச் சட்டம் 2009 தொடர்பான அறிவிப்பாணை. ஏற்கெனவே பல மாநிலங்களில் கற்றல் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது என்றாலும், தற்போதுதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகின்றது. இதைச் செய்திருக்கும் தமிழக முதல்வருக்கு பெற்றோரும் மாணவர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீட்டை கட்டாயமாக்கியிருக்கும் உத்தரவுதான் உண்மையிலேயே சமச்சீர் கல்வியாக இருக்க முடியும். இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வெறும் வியாபார நிறுவனங்களாக மட்டும் செயல்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் நன்மைக்காக எனும்போது இந்த நடவடிக்கை மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சரிபாதி மாணவர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மேனிலைப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்றால், இவர்களில் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள் (12.5 லட்சம் பேர்) மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அதாவது தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இதில் 25 விழுக்காடு எனும்போது, சுமார் 3 லட்சம் ஏழை மாணவர்கள் அரசின் இந்த அறிவிக்கையால் பயன்பெறுவார்கள் என்பது உறுதி.
இந்த அறிவிப்பாணையில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருவாய் உள்ள பெற்றோரின் குழந்தைகள் இந்த 25 விழுக்காடு கட்டாய ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த ஒரு ஷரத்து தொடர்பாக மிகத் தெளிவான, விரிவான விளக்கங்கள் சேர்த்து ஒரு துணை அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டியது மிகமிக அவசியம். இதைத் தமிழக அரசு செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
ரூ.2 லட்சம் ஆண்டு வருவாய் என்று கணக்கிடும்போது, மாதம் ரூ.16,500 சம்பளம் வாங்குபவரின் குழந்தைகள் இதற்குத் தகுதியுடையவர்களாகிறார்கள். இந்த வருமான வரம்பு சற்று அதிகமானது. ஆகையால் இத்திட்டத்தின் கீழ் ஏழைகள் போட்டிபோடுவது ஒருபுறம் இருக்க, கொஞ்சம் வசதியுள்ளவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளைச் சேர்க்கும் செல்வாக்கு பெற்ற அரசு ஊழியர்களும்கூட இந்த வருமான வரம்புக்குள் வந்துவிடுவார்கள்.
இந்த வருமான வரம்பைக் குறைத்தால், அதற்காக லஞ்சம் கொடுத்து வருவாய்ச் சான்று பெறும் மோசடிகள்தான் நடக்கும் என்பதால், வரம்பைக் குறைக்காமல் யாருக்கு முன்னுரிமை என்பதைப் பட்டியலிடுவதன் மூலம் உண்மையான ஏழைகள் பயன்பெற வழிகாண முடியும். ஏனென்றால், இந்த மாணவர்களின் கட்டணங்களை அரசே ஏற்கப் போகிறது என்பதால், இந்த முறைப்படுத்துதல் அவசியமாகிறது.
ஒரு பள்ளிக்கு வந்துசேரும் விண்ணபங்களைப் பின்வரும் காரணிகள் அடிப்படையில் பிரித்து 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு முன்வர வேண்டும். குறைந்த சம்பளம் உள்ளவர் குழந்தைக்கு முன்னுரிமை, ஒரு பெற்றோரின் முதல் குழந்தைக்கு முன்னுரிமை, பள்ளிக்கு நடந்துவரும் தூரத்தில் வசித்தால் அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை என வகைப்படுத்தி, மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது மிக அவசியம்.
75 விழுக்காடு ஒதுக்கீட்டில் இடம்பெறும் வசதி, செல்வாக்கு இரண்டுமே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் அரசு ஊழியர் குழந்தைகளுக்கு கடைசிபட்சமாகத்தான் மாணவர் சேர்க்கையில் இடம் தரப்பட வேண்டும். அவர்கள் தவிர்க்கப்பட்டால்கூடத் தவறில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படித்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்தால்தான் அந்தப் பள்ளிகள் தரமாகச் செயல்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
25% ஒதுக்கீட்டின்கீழ் வரும் மாணவர்களைத் தனியாக ஒதுக்கி, இரண்டாம்தரமாக நடத்தக்கூடாது என்று மிகவும் கண்டிப்புடன் அரசு சொல்லியிருப்பது, இந்தப் பள்ளிகள் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை அனுபவத்தால் அரசு உணர்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்த அறிவிக்கையை அமல்படுத்தும் முன்பாக, தங்கள் லாபத்தில் துண்டு விழுவதைச் சுட்டிக்காட்டி, மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் பள்ளிகள் நிச்சயமாக முன்வைக்கும். போதுமான வகுப்பறைகள், ஆசிரியர் எண்ணிக்கை இருக்குமானால் அரசு அத்தகைய பள்ளிகளுக்கு கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பதில் தவறில்லை.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு அமைக்கும் திட்டத்தை அரசு இந்த அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. இதேபோன்ற பள்ளி நிர்வாகக் குழு ஏன் தனியார் பள்ளிகளிலும் இருக்கக்கூடாது? பள்ளித் தாளாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்புகளை நிர்வகித்தாலும், இந்த 25 விழுக்காடு இடங்களில் சேரும் ஏழைப் பெற்றோர் தங்கள் கருத்துகளை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லும் வாய்ப்பாக இந்த பள்ளி நிர்வாகக் குழு அமையுமே!
தனியார் கல்விக்கூடங்களில் 25 விழுக்காடு இடத்தை உறுதிப்படுத்தியுள்ள தமிழக அரசு, அடுத்ததாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 25 விழுக்காட்டினருக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டிய சட்டத்தையும் ஏன் அமல்படுத்தக் கூடாது?
தனியார் மருத்துவமனைகள் சேவை அளிக்கின்றன என்ற நம்பிக்கையில் நிறைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிப்பது கடினம் என்ற நிலையில் குறைந்தபட்சம், பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவத்தைத் தனியார் மருத்துவமனைகள் அளிக்க வழி செய்ய முடியாதா என்ன?
மறுப்பு மடல்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
இதுவல்லவா சட்டம் என்ற தலையங்கம் படித்தேன். பல சிறந்த யோசனைகளைத் தமிழக அரசுக்குத் தாங்கள் கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்துச் சில பயனுள்ள கருத்துக்களைக் கூறும்போது தேவையில்லாமல் ஆசிரியர்களை வம்புக்கு இழுத்துள்ளீர்கள்.உங்களுக்கு மட்டுமில்லை இந்த சமூகத்திற்கே வாத்தி என்றாலே இளக்காரம்தான். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூட வாத்தி" என்ற பழமொழி இன்றும் உண்மைதான் என்பதைத் தங்களைப்போன்ற பத்திரிகை ஆசிரியர்களும் நிரூபிப்பதுதான் வேதனை. அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தால் தான் அரசு பள்ளிகள் தரமாகச் செயல் படும் என்ற பாமரத் தனமான கருத்தைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்க வில்லை. அரசு மருத்துவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு உடல் நலமில்லையென்றால் அரசு மருத்துவ மனையில் சேர்த்தால்தான் அவை தரமாக செயல்படும். அமைச்சர்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்தால் தான் அவை தரமாக செயல்படும் என்பதைப்போல்தான் உங்கள் கருத்து இருக்கிறது. அரசு நடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களைத் தனியாரும், தனியார் நடத்திய மதுபானக் கடைகளை அரசும் நடத்திக் கொண்டிருப்பதை விமர்சனம் செய்ய முடியாத நீங்கள் பாவம் ஏன் அப்பாவி ஆசிரியர்களை வறுத்தெடுக்கிறீர்கள். தனியார் பள்ளிகளைப்போல் நுழைவுத்தேர்வு வைத்து தேர்வு பெறும் மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தால் அரசு பள்ளிகளும் 100 விழுக்காடு தேர்ச்சியைத் தரலாம் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. அரசு பள்ளிகளின் நிலைக்கு ஆசிரியர்களை மட்டும் குறை சொல்ல வேண்டாம் என்பதை மட்டும் கனிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
இரத்தின.புகழேந்தி.
18, தங்கம் நகர்,
பூதாமூர்,
விருத்தாசலம் - 606001.
பேசி : 9944852295


Wednesday, November 9, 2011

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் 19 ஆவது தேசிய கருத்தரங்கு.

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்
19 ஆவது தேசிய கருத்தரங்கு.

இடம் : காஞ்சி மாமுனிவர் மேற்படிப்பு நடுவம்
புதுச்சேரி

நாள் : சனவரி .  27 -29
இணைந்து நடத்தும் நிறுவனம் : புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்.

கட்டணம் :  ரூ.500/- Treasurer, FOSSILS. Payable at kuppam (A.P.)

கடைசி தேதி
கட்டுரைச் சுருக்கம் அனுப்ப : 10.12.2011
முழு கட்டுரை அனுப்ப : 10.01.2012
பதிவு செய்ய   : 10.12.2011

கருத்தரங்கப் பொருள் : மரபுவழி அறிவு முறை
                                                 பெண்களும் நாட்டுப்புறவியலும்

                                                  வரலாறும் நாட்டுப்புறவியலும்

மின்னஞ்சலில் பதிவுசெய்ய : fossils2012@gmail.com

மேலும் விவ்ரங்களுக்கு :
 முனைவர் பக்தவத்சலபாரதி -அமைப்புச் செயலாளர்/இயக்குனர் -பு.மொ.ப.ஆ.நி.-9894383912

Monday, October 24, 2011

தீபாவளி - மாறி வரும் கொண்டாட்ட முறைகள்.



'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள்  ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இவை எல்லாமே புராணப் புளுகுகள் என்று பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்திவிட்டார் என்றாலும் மக்களிடையே இக்கொண்டாட்ட மரபு இன்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் சமணர்களும் கூட ஈப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
, தங்கக் கோயில் கட்டுமான பணிகள் 1577-இல் இத்தினத்தில்தொடங்கியதால் சீக்கியர்கள் இந்நாளில் தீபாவளியகக் கொண்டாடுகின்றனர்.
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, தீபாவளியாக சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது இன்று முற்றிலும் வணிகமயமாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்பு வரை ஆடை வணிகம் மட்டுமே தீபாவளிக்குக் கொடி கட்டிப் பறந்தது. இன்றோ சகல துறைகளும் தீபாவளிக்கு தங்களின் வியாபாரத்தில் இயன்ற வரை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகள் குழந்தைத் தொழிலாளர்களை வதைத்து தங்களின் வணிகத்தை விரிவாக்கி பல கோடிகளை லாபமீட்டுவதும் , சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் கவலைப்படாத நூர்பாலைகள் ஜவுளியில் லாபம் பார்ப்பதும், மக்கள் தங்களின் பாரம்பரிய பலகாரங்களை வீட்டில் செய்த நிலை மாறி அனைத்து வகை இனிப்புகளையும்  இனிப்பகங்களில் வாங்கிக்கொள்ளும் சோம்பேறிகளாக, காட்சி ஊடகங்கள் தீபாவளி ஸ்பெஷல் என்று மக்களை வீடில் முடக்கிப்போட, பத்திரிகைகள் தீபாவளி சிறப்பிதழ்கள் மூலம் தங்களின் வணிகத்தில் கண்ணும் கருத்துமாக, தங்கவிற்பனையும் குறைவில்லை (விலையும் குறைவில்லைதான்) இப்படி தீபாவளிப் பண்டிகை என்றால் அது முற்றிலும் வணிகம் மட்டுமே என்ற நிலைக்கு வந்துவிட்டது. இவை ஒரு புறமிருக்க, நினைத்தால் புத்தாடை, அன்றாடம் பலகாரம், மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து பகிர்ந்து கொள்வது என வாழ்க்கையே சிலருக்கு தீபாவளியாகிவிட்டது.
ஆனால் ஏழ்மை நிலையில் கிராமங்களில் வழும் பாமர மக்களுக்கு இவை அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளியில் மட்டும்தான் சாத்தியம் என்பதால் ஒருமாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு தேவையானவற்றைத் திரட்ட வேண்டிய நிலை அவர்களுக்கு.

தீபாவளிக்கு திபாவளி எண்ணை தேய்த்துக் குளிப்பவர்களும் புத்தாடை உடுத்திக்கொள்பவர்களும் கிராமங்களில் இருக்கின்றனர். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இந்தசமூகத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் தீபாவளி மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களுக்கு தீபாவளியன்றாவது தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற கவலைதான் மிகுதி.
 

 
 பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் இவை தீபாவளியின் தனித்த அம்சங்களாக இருந்தன ஒருகாலத்தில். இன்று நினைத்தால் பத்தாடை வாங்குகிறோம் , தினந்தோறும் பலகாரம்என விழாவின் அனைத்து அம்சங்களும் சில நாட்களுக்கு முன்பே குழந்தைகளின் மன்த்தில் கூடுகட்டத் தொடங்கிவிடும்.



தீபாவளி என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மட்டும்தான்.
 பெண்கள் பலகாரங்கள் செய்வதற்கு தானியங்களைத் தயார் செய்யத்தொடங்கி விடுவார்கள். முருக்கு, முட்டாய் உண்ட(லட்டுதான்),அதிரசம்,பொர்லங்கா உண்ட(பொருள்விளங்கா உருண்டை) என பாரம்பரிய பலகாரங்களுக்கான ஆயத்தப் பணிகளில்  ஈடுபடுவர். அரிசி களைந்து உலரவைப்பது பெண்கள் பணி அவற்றை அரிசி ஆலையில் அரைத்துக் கொண்டு வருவது ஆண்கள் பணி. பார்ப்பதற்கு ஆண்களுக்கு எளிதான பணிபோல் தோன்றும் ஆனால் அதுதான்  மலையை மடுவாக்குவதுவதுபோல். சரியான பதத்தில் அரைத்துக் கொண்டுவரவேண்டும்   வேண்டும் அதற்கு முன்பு ஆலையில் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்கள் அரைத்திருந்தால் முருக்கரிசி அரைக்கக்கூடாது (முருக்கு சிவப்பதோடு தின்பதற்குக் கடினமாக இருக்கும் என்பதால்)
பக்கத்து வீட்டில் பட்டாசு சத்தம் கேட்டால் நம் வீட்டு குழந்தை மனத்தில் ஏக்கம் வரக்கூடாது என்றுத்

தீபாவளி அன்றுதான் சிறப்பான உணவுகள் கிடைக்கும் அதிகாலை எழுந்து சுழியான் என்னும் இனிப்பு உருண்டை செய்து இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளையும் செய்து ஆவலாய் உண்ணும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். லட்டு அதிரசம், பொருள்விளங்கா உருண்டை, முருக்கு ஆகிய பலகாரங்கள் தீபாவளிக்கு தீபாவளி நிச்சயம் உண்டு.
தீபாவளி லேகியம் என்பது வழக்கத்திற்கு மாறாக சில சிறப்பு உணவுகளும் பலகாரங்களும் சாப்பிடுவதால் சீரண சிக்கலிருக்கும் என்பதால் சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய வற்றை இடித்துப் பொடியாக்கி நீரிலிட்டு வேக வைத்து நெய்யும் பனைவெல்லமும் கலந்து லேகியமாக்கி உண்பதுண்டு. இந்த லேகியமும் இன்று கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
 அன்று கிடைக்கும் என்பதால் தி

புத்தாடைக்காக தையல் கடையில் தவம் கிடப்பதும் பட்டாசு வாங்கிவரும் அப்பா எந்த பேருந்தில் வருவார் என்று ஏங்கிக் கிடந்ததும் அதிரசம் செய்வதற்காக வைத்திருக்கும் மாவை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து ருசிப்பதும் பாட்டிலில் ராக்கெட் வைத்து மேலெ சென்றதும் நிலவுக்கே சென்றதைப் போல் குதூகலித்ததும் ,பொட்டு வெடியை கூழாங்கல் வைத்து நசுக்குவதும்  வெடிக்காமல் கிடக்கும் வெடிகளின் மருந்தை சேகரித்து புதிய வெடி தயாரிப்பதும் வாணக்காரர்கள் தயாரித்த நாட்டு வெடி சத்ததிற்கு காதுகளை பொத்திக்கொள்பவர்களைப் பார்த்து ரசிப்பதும் இன்றைக்கு கிராமங்களில் கூட காணக் கிடைக்காத கால் நூற்றாண்டு கதைகளாகிவிட்டன.
நன்றி : நிலாப்பெண்ணே அக்டோபர் 2011

Friday, October 7, 2011

என் ஊர் - விருத்தாசலம்.









யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும், சொந்த ஊரைப்பற்றி நினைக்கும் போது என் ஊர் என்ற பற்றுதல் அடி மனத்திலிருந்து வெளிப்படத்தான் செய்கிறது.
தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான  ஊர்களில் விருத்தாசலமும் ஒன்றுமுதுகுன்றம் என்பது விருத்தசலத்தின் பழமையான பெயர். சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும்   இவ்வூர் முதுகுன்றம் என்றே குறிப்பிடப்படுகின்றது. விருத்தம் என்றால் பழமை, அசலம் என்றால் மலை அதனால் பழமலை என்ற பெயரும் உண்டு இங்குள்ள இறைவனின் பெயர் பழமலை நாதர் அவர் முதுகுன்றீசுவரராகி இன்று விருத்தகிரீஸ்வரராகிவிட்டார். இக்கோயில் மிகவும் பழமையானது. பதிமூன்றரை கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த இரிடேசியஸ் வகை சுண்ணாம்புப் பாறைகள் மீது இக்கொயில் கட்டப்பட்டிருப்பதாக நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். நம் ஊரின் பெயர் தமிழில் இல்லையே என்பது இவூர் மக்களின் ஆதங்கம் அதனால் ஊர்ப் பெயரைத் தமிழில் மாற்றும் கோரிக்கை சட்டமன்றத்தில் குழந்தை தமிழரசன் உறுப்பினராக இருந்தபோது முன்மொழியப்பட்டு டெல்லி வரை சென்றது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. அதற்காக  திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி போராடிப்பார்த்து விட்டோம். அரசுகள் அசைந்துகொடுக்கவில்லை.  
            1760 ஆங்கில் ஆட்சியாளர்கள் இக்கோயிலைச் சுற்றி அகழி அமைத்து கோட்டையாக்கினர். அதன் அடையாளமாகத்தான் இன்றும் கோயிலைச்சுற்றியுள்ள வீதிகள் தென்கோட்டை வீதி, வடக்குக்கோட்டை வீதி
என்று குறிப்பிடப்படுகின்றன. 1803 ஆம் ஆண்டு கார்ரோ என்ற ஆங்கில ஆட்சியர் அகழியைத் தூர்த்து மீண்டும் கோயிலாக்கினார் என்ற வரலாறு உண்டு. இக்கோயில் கல்வெட்டுகளை தமிழகத்தொல்லியல் துறை பதிப்பித்துள்ளது.விடுமுறை நாட்களில் நண்பர்களோடு இக்கோயிலில் அமர்ந்து பாடங்களைப் படித்திருக்கிறேன்.
            இங்குள்ள இன்னொரு முக்கியமான கோயில் கொளஞ்சியப்பர் கோயிலாகும். இந்த கோயில் நிலத்தில்தான் அரசு கல்லூரி அமைந்துள்ளது அதனால் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
            ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். விருத்தாசலத்தின் அழகை மெருகூட்டுவது  மணிமுத்தாறு. புண்ணிய நதி என்று மக்களால் நம்பப்படுகிறது. இதனால்தான் காசிக்கு வீசம் ஜாஸ்தி விருத்தாசலம் என்பார்கள். கோயிலை ஒட்டிய ஆற்றின் பகுதியை புண்ணிய மடு என்பர். ஒன்பத்தாம் நூற்றாண்டில் சுந்தரர் பழமலை நாதர் மேல் திருப்பதிகம் பாடி பன்னிரண்டாயிரம் பொற்கசுகளைப் பெற்று அக்காசுகளை இப்புண்ணிய மடுவில் இட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்ததாகக் கதைகள் உண்டு. மாசி மகத்தன்று மணிமுத்தாற்றில் முன்னோர் வழிபாட்டிற்காக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மணிமுத்தாற்றில் கூடுவர். காணும் பொங்கலன்று உள்ளூர் மக்கள் திரளாகக் கூடி சிறுவர்கள் பட்டம் விடுவதையும், பெண்கள் கும்மி யடிப்பதையும் இளைஞர்கள் கபடி ஆடுவதையும் கண்டு களிப்பர். 70 களில் அரசியல் கூட்டங்கள்  மணிமுத்தாற்றில்தான் நடக்கும். எம்.ஜி.ஆர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கண்விழித்திருந்து நள்ளிரவில் நாங்கள் சொற்பொழிவைக் கேட்டதுவும் இந்த மணிமுத்தாற்றில் தான். இன்று மணல் குவாரிகளாலும் கழிவுநீராலும் சிதைந்து கிடக்கிறது மணிமுத்தாறு.
                 தமிழகத்தின் ஒரே பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரி விருத்தாசலத்தில் தான் அமைந்துள்ளது. அரசு பீங்கான் தொழிற்சாலை மூடப்பட்டாலும் பல தனியார் தொழிற்சாலைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பீங்கான் பொருட்கள் இங்கிருந்து அனுப்பிவைக்கப் படுகின்றன.
            பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கிறது. ஆசிய அளவில் அமைந்துள்ள பெரிய தனி நபர் நூலகங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள அரசு நூலகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுதமிழகத்தின் முக்கியமான் எழுத்தாளர்கள் பலர்  விருத்தாசலத்தில் வசிக்கின்றனர். பல முக்கிய இலக்கியக் கூட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. திரைத்துறையிலும் இவ்வூர் படைப்பாளிகளின் பங்களிப்பு கணிசமானது.
            திராவிட நாடு பெறும் வரை திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்று பெரியாரிடம் ரத்தத்தால் கையெழுத்திட்டு கொடுத்த வாக்குறுதியை சாகும் வரை காப்பாற்றிய கொள்கை மறவர் அண்ணன் ராஜு வாழ்ந்தது இவ்வூரில்தான்.
            கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை படாது என்ற தமிழர்களின் வணிக அறத்தைக் காப்பாற்றும் இவூர் வணிகர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் மிகுதியாக இந்த சிறு நகரத்தை நோக்கி வந்து குடியேறிய வண்ணம் உள்ளனர்.
             அண்மையில் இங்கு அமைக்கப்பட்ட புறவழிச்சாலையால் நகரத்தின் பரப்பளவு விரிவடைந்துள்ளது . அதனால் விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி வருகின்றன. மனைகளின் விலையும் சென்னையைதாண்டி விற்கிறது.குறிப்பாகக் கடலூர் சாலையில் அமைந்துள்ள பெரியார் நகர் கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது . பெரியார் நகரில் பல புதுமைகள் உண்டு இங்குள்ள தெருக்களின் பெயர்களில் சங்ககாலப் புலவர்கள் வாழ்கின்றனர். சங்கப்பலகையும் இங்கு உண்டு. சங்க இலக்கிய்ப்பாடல்களை உரையோடு தினமும் மக்கள் பார்வைக்கு இப்பலகை வழியாகக் கொண்டு செல்கிறார் பழமலை என்ற முதியவர். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஒன்று சேர்ந்து நடைப்பயிற்சி கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதிதாகத் தோன்றிய புற நகர்கள்தான் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டுகின்றன.
இங்கு நடைபெறும் கட்டுமானத் தொழில் சுற்றுவட்டார ஏழை எளிய மக்களுக்கு  வேலை வாய்ப்பினை வழங்குகிறது. காலை 8 மணியளவில் பாலக்கரையில் குவியும் கட்டடத் தொழிலாளர்களே இதற்கு சாட்சி.
            இங்குள்ள மண்டலஆராய்ச்சி நிலையம் முந்திரி, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களில் பல புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உழவர்களுக்கு பயிற்சியையும் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.
            அரசியலிலும் இலக்கியத்திலும் பல திருப்பு முனைகள் நிகழ்ந்தது விருத்தாசலத்தில்தான் எல்லாவற்றுக்கும் மேலாக, கன்னியாகுமரியையும் காஷ்மீரையும் இணைக்கும் தொடர்வண்டிகள் விருத்தாசலம் வழியாகத்தான் செல்கின்றன