தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, November 15, 2014

கிராமத்து விளையாட்டுகள்


விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

விளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு!
குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. மேற்படிப்பு கற்றுத் தரும் பல மேலாண்மைப் பண்புகளை விளையாட்டு எப்படி சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
சமூகமாக மனிதன் கூடி வாழ வேண்டும்; வலியோரிடமிருந்து எளியோரைக் காக்க வேண்டும்; சக மனிதர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை, சிறு வயதில் விளையாட்டு மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்பதை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் இரத்தின.புகழேந்தி.
சமூகத்தின் அரிய பொக்கிஷமாக இருக்கும் விளையாட்டுகள் நகர்மயமாதல், உலகமயமாக்கல் போன்ற காரணங்களால், காலப்போக்கில் குறைந்து வருவதை நூலாசிரியர் மிகுந்த ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலில், நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. விளையாட்டு எப்போது எவரால் விளையாடப்படுகிறது, அதன் விதிகள் என்னென்ன, பண்டைய இலக்கியங்களில் இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் என்ன இருக்கிறது, இந்த விளையாட்டை விளையாடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன ஆகியவற்றை இந்த நூல் சுவாரசியமாகச் சொல்கிறது.
இதன் மூலம், கிராமிய விளையாட்டுகளின் நுட்பங்களையும், அதன் மூலம் கற்றுக் கொள்ளப்படுபவற்றையும், சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்களின் கருத்துகள், கள ஆய்வுச் செய்திகள் ஆகியவற்றையும் நாம் அறிந்துகொள்கிறோம்.
படித்து, நாம் மனக்கண்ணில் பதிவு செய்துகொள்ளும் விளையாட்டுகள், தகுந்த படங்கள் மூலம் நம் புறக்கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது, இந்த நூலின் சிறப்பு.

http://books.dinamalar.com/details.asp?id=21273#