தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, June 29, 2015

விந்தன் 99



எழுத்தாளர் விந்தன் நினைவு நாள் இன்று. அடுத்த ஆண்டு விந்தன் நூற்றாண்டு. அவரது நினைவுகளைப்போற்றுவோம்.
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.
மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.
1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.

அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
விந்தன்  : http://www.vindhan.org/

Wednesday, June 10, 2015

கலைவிளையும் நிலம் நூல் அறிமுகம்


கலை விளையும் நிலம் என்ற தலைப்பில் எனது கட்டுரைகளைத்தொகுத்து நூலாக வெளியிட உள்ளேன். இன்று நூல் அச்சாகி வந்துள்ளது. அதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
                  22/105 , பாஸ்கர் காலனி
                  3 ஆவது தெரு விருகம்பாக்கம்
                  சென்னை -600092
                  893987276 
பக்கம்: 168
விலை:150
அட்டைப்படங்கள்: ந.செல்வன்
வடிவமைப்பு: கீர்த்தி&ஹபிப்


முன்னுரையிலிருந்து...

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறு இணைப்பாக வெளிவந்த களஞ்சியம் இதழில் பணியற்றிய தோழர் யாணன் அவர்கள் கலைகள் குறித்த இக்கட்டுரைகள் வெளிவர காரணமாக இருந்தார். தெருக்கூத்து பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதன் விளைவுதான் கிராமத்து விளையாட்டுகள், கலை விளைந்த நிலம் ஆகிய இருநூல்களும். நண்பர் யாணன்  அவர்களுக்கு நன்றி.
          கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வழங்கிய கட்டுரை ஏலாதி உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள். திருமுதுகுன்றம் கவிதைகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
          தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு என்ற கட்டுரை செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வழங்கியது.
          சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் புதுவை வானொலியில் ஏழு நாட்கள் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும்.
          இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளில் ஆசிரியரால் குறிப்பிடப் பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன சில விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
          விடுதலைப்போராட்ட வீரர் கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி எழுதிய விடுதலை வேர்கள் கட்டுரை வெளியானதன் விளைவாக இன்று பாடநூல்களில் அவரைப் பற்றிய விரிவான வரலாறு இடம்பெற்றுள்ளது.
          அதுபோலவே மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்று நான் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது. புதிய மதிப்பீட்டு முறை (CCE) வருவதற்கு முன்பே என் ஆய்வு அதனை வலியுறுத்தியது.
          பள்ளி நூலகங்களை மாணவர்கள் அணுக இயலாத சூழலிருந்தது அதனை வெளிப்படித்தியது பெட்டிக்குள் உறங்கும் நூல்கள் கட்டுரை. அதற்கான தீர்வாகத்தான் வகுப்பறை நூலகம் என்னும் புத்தகப் பூங்கொத்து திட்டம்.
          நிலம் கையகப் படுத்தும்போது வழங்கும் இழப்பீடு போதுமானது இல்லை என்னும் கருத்தை வலியுறுத்தியதுநிலம் கையகப்படுத்தும் அரசியல்கட்டுரை. இப்போது ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
                    விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசால் கைவிடப் பட்டாலும். ஒரு காலத்தில் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கான நம்பிக்கையை போராட்ட உணர்வை மக்களிடம்  இந்த நூலில் இடம்பெற்றுள்ள  ஊர்ப்பெயர் அரசியல் என்னும் கட்டுரை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

          நூலை சிறப்பாக வெளியிட்டுள்ள நிவேதிதா பதிப்பகத்தாருக்கும் அதற்குக் காரணமாக இருந்த நண்பர் கவிஞர் பல்லவி குமார் அவர்களுக்கும் நன்றி. என்னையும் என் எழுத்தையும் நேசிக்கும் நண்பர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்.