தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, November 16, 2017

தற்கால மாணவர்கள் கற்றுக்கொண்டதுதான் என்ன?



பள்ளி கல்லூரி மாணவர்களைடையே அண்மைக்காலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியின் அவசியத்தை உணராமல் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கு பல மாணவர்களிடையே காணப்படுகிறது. மன ரீதியான பல மாற்றங்கள் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது. அண்மையில் பல ஊர்களில் நீலத்திமிங்கல விளையாட்டுக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், உயிரைவிட்டவர்கள் சென்னையில் தொடர்வண்டியில் பட்டாக்கத்தியுடன் விபரீத விளையாட்டு என கேள்விப்படும் செய்திகள் எல்லாம் நம் கவலையை மேலும் அதிகரிக்கச்செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக அனிதாவின் மரணம் அரசியல் காரணங்களைத்தாண்டி கல்வியாளர்களை மிகுந்த துயரத்துக்குள்ளாக்கியுள்ளது.
     நம் கல்வியும் சமூகமும் தற்கால மாணவ சமூகத்திற்கு கற்றுத்தந்ததுதான் என்ன? என்கிற மிகப்பெரிய கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது .
     டிஜிட்டல் உலகம் நம் இளைஞர்களுக்கு அளித்த பரிசு இதுதானா? சென்ற நூற்றாண்டின் இறுதியில் இளைஞர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துவது இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படலாம். இணையமோ கணினியோ கைபேசியோ கேபிள்தொலைக்காட்சிகளோ இல்லாத காலம் அது. இளைஞர்கள் பெற்றோர்களோடும், உறவுகளோடும் நண்பர்களோடும் நேருக்குநேர் அளவளாவிய காலம் அது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் மேற்கண்ட அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். பள்ளி கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவர்கள் பெற்றோர்களுக்கு அவர்களின் பணிகளில் உதவி செய்வார்கள். அந்தி சாயும் நேரத்தில் நண்பர்களோடு வீதிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிக் மகிழ்ந்து வீடு திரும்புவர். அந்த விளையாட்டுகள் அனைத்தும் அவர்கள் சமூகவயமாவதற்கு ஆயத்தப்படுத்தின.
     விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்கு செல்வதன் மூலம் அந்த ஊர் பண்பாடு பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். எப்போதாவது நண்பர்களோடோ பெற்றோர்களோடோ திரையறங்குகளுக்கு சென்று சினிமா பார்த்தனர். இவை ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தை மறைமுகமாகக் கற்றுத்தந்தன. கூடி வாழும் மனப்பக்குவத்தை சமூகக் கடமைகளை அவர்கள் அவற்றின் வாயிலாக அறிந்து செயல்பட்டனர். அப்படி என்றால் அக்கால மாணவர்களிடையே எந்த சிக்கல்களும் இல்லை என்று கூறிவிட இயலாது. ஒன்றிரண்டு என்று பிரச்சனைகள் இருந்திருக்கலாம். இப்படி நாம் கவலை கொள்ளுமளவுக்கு இல்லை என்பது உறுதி.
     ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கால மாணவ சமூகத்தை பயனுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க முடியும். அக்கால ஆசிரியர்களைப்போல் தற்கால ஆசிரியர்கள் செயல்பட இயாலதபடி சில கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டைகளாக உள்ளன.
ஆசிரியர்கள் பங்கு:
     மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு பெரும்பங்கு உள்ளது. பாடத்தைத் தாண்டி தன்னிடம் பயிலும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர் தானே முன்மாதிரியாக நடந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலை அவர்களோடு உரையாடி அறிந்துகொண்டு அவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற அளவு நிறைவுசெய்வதோடு நல்ல நண்பராக அவனோடு பழகினால் நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம் என்னும் மன நிலையை ஏற்படுத்தி விடவேண்டும். அதன்மூலம் அந்த மாணவன் நம்மை பின்பற்றத்தொடங்குவான்.
பெற்றோர் பங்கு
     தன் குழந்தையின் மீது தனது விருப்பத்தைத்திணிப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும். தன் குழந்தைகளைப்பற்றி முதலில் நன்கு புரிந்த்குகொண்டு அவர்களிடம் நட்ப்போடு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றோர்கள் பெறுவது அவசியம். பிறகு தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வழிவகை செய்திடல் அவசியம். அளவோடு செல்லம் கொடுப்பது அவசியம். தேவைப்படும் நேரத்தில் கண்டிக்கவேண்டும் ஒரே பிள்ளையாக இருக்கிறதே ஏதாவது செய்துகொள்ளுமோ என்ற அச்சத்தைக் கைவிடவேண்டும். நட்பும் கண்டிப்பும் இரு கண்களைப்போன்றது என்பதை அவர்களுக்கு நம் செயல்பாடுகள் மூலம் உணர்த்தவேண்டும். தன் மகன் படிக்கும் பள்ளி கல்லூரிக்கு ஆவாப்போது சென்று பார்த்து வருவதோடு ஆசிரியர்களை சந்தித்து தன் மகன்/மகளைப் பற்றி உரையாடவேண்டும். நல்ல நூலகள், திரைப்படங்களைப்பற்றி தங்களின் குழந்தைகளோடு உரையாடி அவர்களின் ரசனையை மேம்படடுத்தவேண்டும். மரபுவழி விளையாட்டுகளை விளையாடப்பழக்கவேண்டும் அந்த விளையாட்டுகள் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தல் கூடிவாழ்தல் தலைமைப்பண்பு ஆகியவற்றை மறைமுகமாகக் கற்றுத்தரும் வல்லமை உடையவை.
மாணவர்பங்கு
     பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மனம்விட்டு பழக வேண்டும். நம் முன்னோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது. எப்போது கணினி,கைபேசி,தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பிடியிலேயே சிக்கிக்கிடக்காமல் நண்பர்களோடு விளையாடப்பழகுதல் நலம். பெரியோர்களை மதித்து நடந்துகொள்வதை ஆசிரியர் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நற்பண்புகளை பின்பற்றிட முயலவேண்டும்

     மூவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே சிறந்த நற்பண்புகள் நிறைந்த இளைஞர் சமூகத்தை உறுவாக்கமுடியும்.
நன்றி: தமிழ்முரசு கல்விமலர்

Thursday, October 5, 2017

61016 வாழ்வில் மறக்கமுடியாத நாள்



அப்பா எங்களைவிட்டுப் பிரிந்து ஓராண்டு ஆகிவிட்டது. சென்ற ஆண்டில் மரணம் தன்னை நெருங்கி வருவதை அப்பா உணர்ந்திருக்கிறார். எங்களுக்குத் தெரியாமல் சாவு முதல் என்று ஐம்பதாயிரம் ரூபாயை வங்கியில் வைத்திருந்தார். தனக்கு ஏதேனும் ஆனால் தன் பிள்ளைகள் பணமின்றி தவிக்கக் கூடாது என்பதற்கான ஏற்பாடாம். அம்மா சொல்லித்தான் அறிந்தேன். ஆனால் அந்த தொகை அவரின் மருத்துவ செலவுக்கு ஆனது. மருங்கூரில் கட்டிய புது வீட்டில் நல்ல நிகழ்வு ஏதேனும் நடக்கவேண்டும் என்று எண்ணி என்னிடம் பல முறை பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் விழாவை புது வீட்டில் நிகழ்த்தலாம் என்றார். நாந்தான் அவரைக் கடிந்துகொண்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று எண்ணி அவரின் ஆசையை நிறைவேற்றாமல் போனேன்.
சென்ற ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ராமச்சந்திரா மருத்துவ மனையில் காலை 11 மணி இருக்கும் ஆகாரம் வாய் வழியே எடுக்க இயாலமையால் குழாய் வழியே மூக்கினுள் செலுத்தினார்கள். அது முடிந்த சற்று நேரத்தில் அப்பாவிடமிருந்து வினோதமான ஒரு ஒலி மூச்சுத்திணறல் போல் எழுந்தது. உடனே செவிலியரை அழைத்தேன் அவரும் அலட்சியமாக ஒன்றுமில்லை என்றார். எனக்கு பதற்றமாக இருந்தது. ஏதோ வழக்கத்திற்கு மாறாக நடக்கிறது என உள் மந்து கூற மீண்டும் செவிலியரை அழைத்து பல்ஸ் பார்க்கச்சொன்னபோது அந்த கருவி 0 எனக்காட்டியதும்தான் செவிலியர் உஷாரானார். உடன் மருத்துவரை அழைக்க அவர் மார்பை அழுத்திப் பார்த்தார் தூக்கி அமரவைக்க முயற்சித்த்போது தலை நிற்காமல் தொஙியது அதைப்பார்த்த நான் அழத்தொடங்கினேன். என்னை அப்புறப்படுத்திவிட்டு திரையை இழுத்துவிட்டனர். என் கண் முன்னே அப்பாவின் உயிர் அப்போதே பிரிந்துவிட்டது. ஆனாலும் மருத்துவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கொண்டுவந்து செய்ற்கை சுவாசம் கொடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச்சென்று விட்டனர். எல்லாம் கனவில் நடப்பதுபோல் உணர்ந்தேன். அப்பாவுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் வந்தார் பொறைஏறினால்தான் இப்படி ஆகும் என்றார் இருந்தாலும் 24 மணி நேரம் காத்திருந்து பார்ப்போம் என்றார். அப்போதிலிருந்தே அவசர சிகிச்சைப்பிரிவின் வாச்லிலேயே கதியாகக் கிடந்தேன். அவ்வப்போது அழைத்து ஒரு சீட்டைக் கொடுத்து அதிலுள்ள மருந்துகளை வாங்கி வரச்சொன்னார்கள். நானும் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தேன். நள்ளிரவிலும் இது தொடர்ந்தது. ஒரே ஒரு முறை மட்டும் அப்பாவைப்பார்க்க அனுமதித்தார்கள். அப்பா இனி பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என உணர்ந்தேன். மருத்துவருக்கு இதைச்சொல்ல ஒரு நாள் தேவைப்பட்டது.. பிழைப்பது கடினம் ஆனாலும் இந்த நிலையில் அனுப்ப இயலாது. அது மருத்துவ அறமாம். ஒரே வாய்ப்பு மட்டும் உள்ளது வேறு மருத்துவமனைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றனர். அப்போது சென்னை மாவட்ட ஆட்சியரான சகோதரி மகேஸ்வரி அவர்களின் உதவியை நாடியபோது பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் பேசினார் அழைத்து வாருங்கள் என்றார். சிறப்பு ஆம்புலன்சில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆக்சிஜன் சிலிண்டரும் இல்லை கையால் பலூனொன்றை அழுத்தி சுவாசம் அளித்தோம். அதன் பின்னர் மருத்துவர் சோதித்துப் பார்த்தார். அப்பாவின் பாதத்தில் கையிலிருந்த சாவியால் கீறினார் என்ன இந்த மனுஷன் இப்படி பண்றாரே என்று எனக்கு எரிச்சலானது. உடன் வந்த அக்காள் மகன் மருத்துவர் சிங்கத்தமிழன் உணர்வு இருக்கிறதா என்பதை சோதிப்பதாகச் சொன்னபோது ஆறுதலடைந்தேன். எவ்வித உணர்வும் இல்லை என்பதை கால் அசையாமையால் பார்த்தபோது கொஞம் நஞ்சம் இருந்த இருந்த நம்பிக்கையை இழந்தேன். வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றால் எப்படி செல்வது எனக்குழம்ப்பி ஒரு வழியாக ஆட்சியர் உதவியால் 108 சிறப்பு ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் சிலிண்டரோடு 5ஆம் தேதி இரவு 10 மணிக்கு புரப்பட்டது. ஊர் செல்லும் வரை ஒன்றும் ஆகிவிடக்கூடாது என மனம் கிடந்து அடித்துக்கொண்டது இரவு முழுவதும்பல்ஸ்மீட்டரையே பார்த்தபடி பயணம் செய்தேன். அவ்வப்போது 0 வுக்கு வரும்போதெல்லாம் திக் திக் என்றது. அதிகாலை 5 மணிக்கு வீடு வந்தோம் 6 மணிக்கு நான் உயிர்த்தண்ணீர் கொடுக்க அப்பாவின் உயிர் பிரிந்தது.
அப்போதுதான் நண்பர் ரமேஷ் பாபு தொலை பெசினார் அவருக்கு பதிலளிக்க இயலாமல் கதறினேன் அவர் உணர்ந்து கொண்டு ஆறுதல் கூறினார்..இன்றோடு ஓராண்டு கடந்துவிட்டது அப்பவின் நினைவுகள் வீட்டிலும் மனத்திலும் சுழன்றுகொண்டிருக்கிறது. நான் சோர்ந்துகிடக்கும்போதெல்லாம் எனக்கு ஆறுதல் மொழி சொல்ல அப்பா இன்றில்லை என நினைக்க கண்ணீர் முட்டுகிறது.

Monday, September 11, 2017

உலக எழுத்தறிவு நாள்


ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளை உலக எழுத்தறிவுநாளாக கொண்டாடி வருகிறோம். இந்த நடைமுறை எப்போதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது? ஏன் செப்டம்பர் 8 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தார்கள்? என்கிற வினாக்கள் ஒவ்வொருவர் மனத்திலும் எழுவது இயல்பான ஒன்று.அதற்கான வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொண்டால் மேற்கண்ட வினாக்களுக்கு எளிதில் விடை கிடைக்கும்.
வரலாற்றுப்பின்னணி:
1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் டெஹ்ரான் நகரில் கூடிய உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மநாட்டில் கல்வி சார்ந்த பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமானது, எழுத்தறிவின் அவசியத்தை அதுகுறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் உள்ள தனிமனிதர்களிடமும் சமூகத்திடமும் ஏற்படுத்தும் விதமாக உலக எழுத்தறிவு நாள் என்றொரு நாளை யுனெஸ்கோ நிறுவனம் வழியாக அறிவிக்கச்செய்யலாம் என்கிற தீர்மானமாகும். அந்த தீர்மானத்தின் அடிப்படையில்  மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 ஆம் நாளையே உலக எழுத்தறிவு நாளாகக் கடைபிடிக்கலாம் என்று யுனெஸ்கோ  அதே ஆண்டில் அறிவித்தது. அதன் அடிப்படையில் 1966 ஆம் ஆண்டிலிருந்து உலக எழுத்தறிவுநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நாளின் தேவை இன்றும் நமக்கு அவசியமாகிறது. ஏனெனில் உலகெங்கிலும் பள்ளிக்கு செல்லாமல் 103 மில்லியன் குழந்தைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் எழுத்தறிவு நாளை உலகம் முழுவதும் கொண்டாட வழிகாட்டுகிறது யுனெஸ்கோ. இந்த ஆண்டின் மையக்கருத்து டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு என்பதாகும்.
டிஜிடல் உலகில் எழுத்தறிவு:
 டிஜிடல் மயமாகிப்போன இன்றைய வாழ்க்கைமுறைக்கேற்ப எழுத்தறிவு என்பதன் பொருளும் மாறியுள்ளது. டிஜிடல் உலகில் எழுத்தறிவு என்ற மையக்கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு எழுத்தறிவு நாள் உலகெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனை ஒட்டி பல்வேறு போட்டிகளும் அறிவிக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
இரண்டு விதமான பரிசுகளை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
1.The UNESCO King Sejong Literacy Prize (2 awards) என்னும் இந்த பரிசு1989 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது தாய்மொழியை வளர்ப்பது அதன் வழியே கல்வியை அளிப்பது என்னும் நோக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. கொரிய அரசின் உதவியோடு இப்பரிசு வழங்கப்படுகிறது.

2.The UNESCO Confucius Prize for Literacy (3 awards) என்னும் இப்பரிசு சீன அரசின் உதவியோடு 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்தோர், பள்ளிகளைவிட்டு வெளியேறியவர்கள் ( அதிலும் குறிப்பாகப் பெண்கள்) ஆகியோரின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.

முதல்வகையில் இருவருக்கும் இரண்டாம் வகையில் மூவருக்கும் என ஐவருக்கு இப்பரிசு உலக எழுத்தறிவு நாளில் யுனெஸ்கோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 20000 அமெரிக்க டாலர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பரிசு அமைந்துள்ளது. மே மாதத்தில் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும் அதற்கான பதிவுகள் வரவேற்கப்படும். ஜூன் மாதத்தில் பரிசீலினைகள் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 8 ஆம் நாள் பரிசு வழங்கப்படும்.


எழுத்தறிவின் இன்றியமையாமை:
எந்த மொழியிலும் மிக எளிய உரைநடைகளை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை யை 2006 ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி  தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த  விகிதத்தினர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும்  அந்த அறிக்கை  சுட்டிக்காட்டுகிறது. எழுத்தறிவைப் பெறுவதற்கு வருமை தடையாக உள்ளது என்பதை பல சிற்றூர்களில் இன்றும் காணமுடிகிறது.
எழுத்தறிவுக்கான உலகளாவிய இலக்குகள்:
2030 ஆம் ஆண்டுக்குள் எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக சில இலக்குகளை யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது. அவற்றை அறிந்துகொள்வது அவசியம்.

·         உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  தரமான, சமச்சீரான முற்றிலும் இலவசக் கல்வியை (தொடக்க நிலை முதல் இடைநிலை வரை) உரியவகையில் அளித்தல்.
·         அதற்கு முன்பாக தொடக்கப் பள்ளிக்கு தயார் படுத்தும் பொருட்டு பள்ளிவயதுக்கு முன்பாக முன் தொடக்க நிலைக் கல்வியை அதற்கு உரிய வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்குதல்
·         தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, உயர்கல்வி ஆகிய நிலைகளில் அனைவருக்கும் சம வய்ப்பு அளித்தல்
·         தொழில் நுட்பத்திறனுடைய இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
·         கல்வியில் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
·         அனைத்து இளைஞர்களும் எழுத்தறிவு பெறுவதை உறுதி செய்தல்
கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழவேண்டும். கற்றோர் தான் பெற்ற அறிவை உலக வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதோடு நிலையான வாழ்கை முறை, மனித உரிமைகள், பாலின சமத்துவம், பண்பாட்டு அமைதி, வன்முறையில்லா வாழ்க்கை ஆகிய  கருத்தை உலக மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் புதிய செயல் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது.
அதற்கான மூன்று வழிமுறைகளை யுனெஸ்கோ முன்னிறுத்துகிறது.
1.வலுவான கற்றல் சூழ்நிலை: உலகிலுள்ள  மாற்றுத்திறனாளிகள், பெண்குழந்தைகள் உட்பட  அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் கல்வி கற்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
2.நிதி உதவி: வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி பயில்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி உதவி செய்வது.
3.ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள்: வளரும் நாடுகளில் தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
எழுத்தறிவு நாள் உறுதி:
உலக எழுத்தறிவு நாளில் கல்விசார்ந்த களங்களில் இயங்குபவர்கள் மனப்பூர்வமாக சில உறுதிகளை நமக்கு நாமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் கற்றோர் நிறைந்த அமைதியான உலக்த்தை உருவாக்கி போரில்லாத வன்முறையற்ற வாழ்க்கைக்கு அடித்தளமிடுவோம்.






Saturday, August 19, 2017

கானல்வரி இலக்கிய விழா 2017

 இது குழந்தைகளின் வகுப்பறை என்ற நூலை முனைவர் பட்டி சு.செங்குட்டுவன் வெளியிட மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
 பந்தயக்குதிரைகளா மாணவர்கள் என்னும் நூலை கே.எஸ்.ஆர்.பள்ளி தாளாளர் கோ.சுந்தரவடிவேல் வெளியிட முதுகலை ஆசிரியர் நா.இரமேஷ்பாபு பெற்றுக்கொண்டார் 
 இரத்தின புகழேந்தி தொகுத்த சனங்களின் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூலை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் வெளியிட மருத்துவர் சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார்,
போட்டியில் தேர்வுபெற்ற சிறுகதைத்தொகுப்பு  வசீரும் லீலாவதியும் என்னும் நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட பொறியாளர் த.தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
 முனைவர் இரா.செந்தில்குமார் எழுதிய தமிழரின் கைவினைக்கலைகள் என்னும் நூலை ஓவியர் கே.கோவிந்தன் வெளியிட ஊடகவியலாளர் ரெங்கப்பிள்ளை பெற்றுக்கொண்டார்
 முதல்பரிசுபெற்ற எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழைம் 5000 ரூபாய் பரிசுத்தொகையையும் எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களின் மகன் ச.அகிலநாயகம் வழங்கினார்.
 மூன்றாம் பரிசு அரியலூர் சி.கருணாகரசு அவர்களின் சார்பில் அவர் மகன் இளங்கதிருக்கு நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார்.


கானல்வரி இலக்கியவிழாவை இளவேனில் பதிப்பகம் சார்பில் நிகழ்த்தினோம். ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவும் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும்  விருத்தாசலம் பெரியார் நகர் புறவழிச்சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் பள்ளியில் 15.8.2017 மாலை நடைபெற்றது.
நீதிபதி ப.உ.செம்மல் தலைமையில் நடைபெற்ற விழாவில் இரத்தின புகழேந்தியின் இது குழந்தைகளின் வகுப்பறை என்ற நூலை முனைவர் பட்டி சு.செங்குட்டுவன் வெளியிட மன்னம்பாடி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார். இரத்தின புகழேந்தி தொகுத்த சனங்களின் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூலை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் வெளியிட மருத்துவர் சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார், பந்தயக்குதிரைகளா மாணவர்கள் என்னும் நூலை கே.எஸ்.ஆர்.பள்ளி தாளாளர் கோ.சுந்தரவடிவேல் வெளியிட முதுகலை ஆசிரியர் நா.இரமேஷ்பாபு பெற்றுக்கொண்டார் போட்டியில் தேர்வுபெற்ற சிறுகதைத்தொகுப்பு  வசீரும் லீலாவதியும் என்னும் நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட பொறியாளர் த.தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
முனைவர் இரா.செந்தில்குமார் எழுதிய தமிழரின் கைவினைக்கலைகள் என்னும் நூலை ஓவியர் கே.கோவிந்தன் வெளியிட ஊடகவியலாளர் ரெங்கப்பிள்ளை பெற்றுக்கொண்டார்
சிறுகதைப் போட்டியில் முதல்பரிசுபெற்ற எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழைம் 5000 ரூபாய் பரிசுத்தொகையையும் எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களின் மகன் ச.அகிலநாயகம் வழங்கினார். இரண்டாம் பரிசு தஞாவூர் ஹரணி அவர்களுக்கு முனைவர் இரத்தின புகழேந்தி வழங்கினார். மூன்றாம் பரிசு அரியலூர் சி.கருணாகரசு அவர்களின் சார்பில் அவர் மகன் இளங்கதிருக்கு நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார். வெ.க.இராஜேந்திரன் , கவிஞர் ஆறு.இளங்கோவன், சி.சுந்தரபாண்டியன், ஆ.மலர்தாசன், வி.ரொசாரியோ, பூ.இராஜேந்திரன்,கோ.செங்குட்டுவன்,கு.கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரிசுபெற்ற எழுத்தாளர்களின் சார்பில் நெய்வேலி பாரதிக்குமாரும், நூல்வெளியீட்ட எழுத்தாளர்களின் சார்பில் முனைவர் இரா.செந்திகுமாரும் ஏற்புரையாற்றினர்.

முனைவர் இரத்தின புகழேந்தி நன்றி கூறினார்.

Wednesday, July 19, 2017

ஆசிரியராகும் மாணவர்கள்! வகுப்பறையில் புதுமை புகுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools



ஆசிரியராகும் மாணவர்கள்! வகுப்பறையில் புதுமை புகுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchools
வி.எஸ்.சரவணன்
ஆசிரியர் சர்வாதிகாரி. மாணவர் அடிமை. ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். மாணவர் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு வகுப்பறை இருக்குமானால் அது நிஜமான வகுப்பறை அல்ல. அப்படியான சூழலில் கற்பிக்கப்படுவது கல்வியுமல்ல" என்று எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். வகுப்பறையில் ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும் என்பதையே இந்த வரிகள் சுட்டுகிறது. அதைத் தன் வகுப்பில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரத்தின புகழேந்தி
விருத்தாச்சலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்தான் ரத்தின புகழேந்தி. கணக்கு என்றாலே அஞ்சுகிற மாணவர்களையும் விளையாட்டு முறையில் பாடம் நடத்தி, கணக்குப் பாடத்தையும் எளிமையாக்கி விடுபவர்
மதிய உணவுக்குப் பிறகான முதல் வகுப்பு என்றாலே ஆசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். அதுவும் இவர் கணித ஆசிரியர். ஆனால், இவரின் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். வகுப்பறையில் புதிய விஷத்தையும் புகுத்தியிருக்கிறார். அதுகுறித்து ஆசிரியர் புகழேந்தியிடம் கேட்டோம்


ஆசிரியர் சர்வாதிகாரி. மாணவர் அடிமை. ஆசிரியர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். மாணவர் கேள்வி கேட்கக்கூடாது என்று ஒரு வகுப்பறை இருக்குமானால் அது நிஜமான வகுப்பறை அல்ல. அப்படியான சூழலில் கற்பிக்கப்படுவது கல்வியுமல்ல" என்று எழுத்தாளர் இமையம் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். வகுப்பறையில் ஜனநாயகத்தன்மை நிலவ வேண்டும் என்பதையே இந்த வரிகள் சுட்டுகிறது. அதைத் தன் வகுப்பில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ரத்தின புகழேந்தி.

விருத்தாச்சலம் அருகேயுள்ள மன்னம்பாடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்தான் ரத்தின புகழேந்தி. கணக்கு என்றாலே அஞ்சுகிற மாணவர்களையும் விளையாட்டு முறையில் பாடம் நடத்தி, கணக்குப் பாடத்தையும் எளிமையாக்கி விடுபவர்.

மதிய உணவுக்குப் பிறகான முதல் வகுப்பு என்றாலே ஆசிரியர் பாடம் நடத்துவது தாலாட்டு பாடுவதுபோல இருக்கும். அதுவும் இவர் கணித ஆசிரியர். ஆனால், இவரின் ஆறாம் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். வகுப்பறையில் புதிய விஷத்தையும் புகுத்தியிருக்கிறார். அதுகுறித்து ஆசிரியர் புகழேந்தியிடம் கேட்டோம்.


வகுப்பறை என்பது மாணவர் - ஆசிரியர் உரையாடுவதற்கான இடமாகத்தான் நான் பார்க்கிறேன். அப்படி உரையாடும்போது கற்றல் சீராக நடக்கும். மதிய உணவுக்குப் பிறகு வகுப்பு என்பதால் தொடங்கும்போதே, மாணவர்களுக்குப் பிடித்த வண்ணமாக அந்த வகுப்பு மாறியிருக்க வேண்டும். அப்படி என்ன செய்யலாம் என்பதற்கான யோசனைதான் ஆசிரியராகும் மாணவர்கள்.

எங்கள் வகுப்பைத் தொடங்கி வைப்பது மாணவர்கள்தாம். தினமும் ஒரு மாணவர், ஆசிரியராக மாறிவிடுவர். நான் மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்துகொள்வேன். அன்றைய தினத்திற்கான ஆசிரியராகும் மாணவர் வகுப்புக்குள் வந்ததும் எல்லோரும் எழுந்துநின்று வணக்கம் சொல்வோம். முதன்நாள் நான் நடத்திய பாடத்தின் ஒரு பகுதியை அந்த மாணவர் நடத்துவார். அப்போது மாணவர்கள் சந்தேகங்களை எழுப்புவார்கள். அதற்கு என் உதவியின்றிப் பதில் அளிக்க வேண்டும். சில நேரங்களில் நானும் சந்தேகங்களைக் கேட்பேன். பிறகு, நன்றி கூறி விட்டு தன் இருக்கையில் அமர்வார். தினமும் 10 நிமிடத்துக்கு இது நடக்கும். இதுவும் ஒருவகையில் கற்றலுக்கான பயிற்சிதான்.

இந்தப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி நிச்சயம் எழும். நாளைய ஆசிரியர் இவர்தான். பாடத்தின் இந்தப் பகுதியைத்தான் நடத்தப்போகிறார் என்று சொன்னதுமே அந்த மாணவன் அந்தப் பாடத்தைத் தெளிவாகப் படிப்பதோடு, யாரேனும் சந்தேகம் எழுப்பினால் எப்படி அதைத் தீர்ப்பது என்பதையும் யோசித்து அதற்கான பதில்களையும் தயார் செய்துவருகிறான்.

அடுத்த நாள் வகுப்பில் ஆசிரியர் உள்பட அனைவருமே தன்னைக் கவனிக்கப் போகிறார்கள் என்கிற எண்ணம் அவன் மனதில்  ரத்தின புகழேந்திஉருவாகிறது. அதனால் தன் உடை, பாவனைகளை நேர்த்தியாக்கிக்கொள்கிறான். வார்த்தைகளை நிதானமாக்கிப் பேசுகிறான். பாடத்தில் யாரேனும் சந்தேகம் எழுப்பினால், அதைத் தீர்த்து வைக்கிறபோது அந்தப் பாடம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. பாடம் அல்லாத கேள்விகளையும் மற்ற மாணவர்கள் அவனிடம் கேட்பதுண்டு. அதைச் சமாளிக்கும் திறனும் அவனுக்கு வளர்கிறது.

ஒரு புதிய விஷயத்தைக் கையாளும்போது, அவனின் ஆளுமைத் திறனும் கூடிக்கொண்டே செல்லும். வகுப்பில் தனித்துத் தெரிய வேண்டும் எனும் ஆவலை அதிகரிக்கச் செய்யும். இவனைப் போலவே தானும் நடந்துகொள்ள வேண்டும் எண்ணம் மற்ற மாணவர்களுக்கும் உருவாகும். அதனால்தான் வகுப்பை முடிக்கும்போது மறக்காமல் அடுத்த நாள் ஆசிரியராகும் மாணவர் யார் என்பதைக் கேட்டுக்கொள்வார்கள். மறுநாள் நானே மறந்தாலும் அந்த மாணவர் எழுந்துவந்து விடுவார்.
வெளிப்படையாகக் கூறுவது என்றால், இந்தப் பயிற்சியின் மூலம் எனக்குப் பல புதிய விஷயங்கள் தெரிந்துள்ளன. முதன்நாள் நான் நடத்திய பாடத்தை அவர்கள் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். சில பாடப் பகுதிகளை என்னை விட சிறப்பாக அவர்கள் நடத்தும்போது பிரமிப்பாக இருக்கும். அவர்களில் முத்தமிழ் அரசி, அமுல்ராஜ், மானூசா போன்றோர் என்னை ஈர்த்தவர்கள்.
இவை எல்லாவற்றையும் விட, ஒரு வகுப்பின் ஆசிரியர்தான் எனும் பெருமிதம் அவர்களின் முகத்தில் மின்னும். அது அவர்களின் கற்றலை இன்னும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன். மாவட்ட அளவில் நான் ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்போது அங்கு இந்தப் பயிற்சியைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறேன்." என்று கூறுகிறார் ரத்தின புகழேந்தி. இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிராமிய விளையாட்டுகள் பற்றிய இவரின் நூல் சிறப்பான வரவேற்பு பெற்றது. சுட்டி விகடனின் எஃப் பகுதியில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

நன்றி: ஆனந்தவிகடன்
http://www.vikatan.com/news/tamilnadu/96039-students-are-becoming-teachers-a-government-school-teacher-s-new-perspective.html#vuukle_div

Thursday, July 13, 2017

ஓவியப்போராளி வீரசந்தானம்



ஓவியர் வீர சந்தானம் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இரு மாதங்களுக்கு முன் அண்ணன் அறிவுமதி அவர்களின் இல்லத் திருமண விழாவில் பார்த்தேன். தமிழர் ஓவியம் கருத்தரங்கு நடந்ததைப்பற்றிக் கூறியதோடு அந்த ஆய்வுக்கோவையில் உங்களைப்பற்றிதான் கட்டுரை எழுதியுள்ளேன் நூல் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் அவசியம் அனுப்புங்கள் நான் இணையத்தில் பதிவிடுகிறேன் என்றார். இன்னும் அனுப்பவில்லை. அந்த குற்ற உணர்வில் தவிக்கிறது மனசு இதோ அவரைப்பற்றிய கட்டுரை.


முன்னுரை:
ஓவியம் என்பது ஒரு கலைமட்டும் அல்ல அது ஒரு போராட்டவடிவமாகவும் திகழ்கிறது. ஓவியத்தின் மூலமும் போராடமுடியும் என்பதை நம் தமிழக ஓவியர்கள் பலர் நிரூபித்துள்ளனர். அப்படிப்பட்ட ஓவியர்களில் மிகவும் முக்கியமானவராக ஓவியர் வீரசந்தானம் அவர்களைக் குறிப்பிடலாம். தமிழ்ச் சமூகம் சந்தித்த பல இன்னல்களை தன் ஓவியத்தின் மூலம் மீட்டெடுக்க முயன்ற சமகால ஓவியர்தான் வீர சந்தானம். ஓவியத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது ஓவியச் செயல்பாடுகளையும் போராட்டங்களையும் இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.
வீரசந்தானம்:
நம் நாடு விடுதலைபெற்ற ஆண்டான 1947 இல் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் வீரமுத்து பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் வீரசந்தானம். 1966 – 72 இல் ஓவியக் கல்லூரி படிப்பை முடித்து நடுவணரசின் நெசவாளர் சேவை மையத்தில் பதினாறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவரின் பணியைப்பாராட்டி குடியரசுத்தலைவர் சித்ரகலா விருது வழங்கியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள். இருவரும் அயல்நாடுகளில் உள்ளனர்.
இளமையில் வருமை:
தன் இளமைக் காலத்தில் தனக்கு உதவிய நல் உள்ளங்களை நினைவு கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார் ஓவியர்,”நான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் செயல் அலுவலர் மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி முதல்வர் கிருஷ்ணராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த என் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.”
ஓவியப்போராளி:
இயல்பிலேயே போர்க்குணம் உடையவர் வீரசந்தானம். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். அவரே ஒரு நேர்காணலில்,” என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு உலை எதிர்ப்பு:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தன் ஓவியங்களைப் பயன்படுத்தியுள்ளார்.  கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் மலர்ச்சியும் சுடுகாடுகளும் கல்லறைகளும் மற்றும் அணு உலைகளும் குழைத்து குழைத்து நிறைந்திருந்தன. என்று அணு உலை எதிர்ப்பு ஓவியங்களைப் பற்றி பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓவியக்கொள்கை:
வீரசந்தானம் அவர்களின் ஓவியங்கள் சில கொள்கைகளை முன்வைத்தே தீட்டப்படுகின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு பல ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அது பற்றி குறிப்பிடும்போது,”தனி ஆளாகவும் குழுவாகவும் நிறைய ஓவிய கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறேன். ஓவியம் தொடர்பாக சில வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக நம் மரபுசார்ந்த ஓவியங்களை வரைகிறேன். அதற்காக நாடு முழுவதும் சுற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். இது நான் எடுத்துகொண்டிருக்கும் (மரபு சார்ந்த ஓவிய பாணி) ஒரு கலையை அழியாமல் பாதுகாக்க என்னாலான முயற்சி, பங்களிப்பு. இந்த ஆராய்ச்சி என் ஓவிய பாணியை பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் பயன்படும். நான் ஒரு சமூகப் போராளி. தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.
’தானே’ துயர் துடைத்த ஓவியங்கள்:
விகடன் நிகழ்த்திய ’தானே’(புயல்) துயர் நீக்கும் திட்டத்தில் ஓவியங்களை வரைந்து தானமாகக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த தொகையை தானே துயர்துடைப்புப் பணிக்குப் பயன்படுத்தினர். அப்பணியில் முதல் கலைஞராக நம் ஓவியர் கலந்துகொண்டு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார். தானே புயல் பதிப்புகளைப் பற்றிய விகடன் ஓவியக்கண்காட்சியில்,''எவ்வளவோ ஓவியக் கண்காட்சி களுக்குப் போய் இருக்கிறேன். ஆனால், இதுதான் சாதனை!'' என்று தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். இப்படி ஒரு கண் காட்சியை விகடன் நடத்தலாமே... ஓவியர்கள் நாங்கள் ஒரே குடையின் கீழ் நின்று உதவுகிறோமே என்று இந்த எண்ணத்தை விதைத்தவரே வீரசந்தானம்தான். ''தேசிய அளவிலான கண்காட்சிகளில்கூட இவ்வளவு ஓவியங்கள் வைக்கப்பட்டது  இல்லை. ஒரு சமூகத்தில் மக்கள் வளமாக இருக்கும்போது, கலைஞர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்; அதேபோல, மக்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது அவர்களை அரவணைக்க கலைஞர்கள் முன்நிற்க வேண்டும். அந்த வகையில் தமிழக ஓவியர்கள் எங்கள் கடமையைச் செய்திருக்கிறோம். கலைத் துறையைச் சேர்ந்த ஏனையோரும் இதை முன்மாதிரியாகக்கொண்டு 'தானே’ துயர் துடைக்க முன்வர வேண்டும்!'' என்றார் வீரசந்தானம் கூறியதாக விகடன் குறிப்பிடுகிறது.
இசைக்கருவி ஓவியங்கள்:
நம் பழந்தமிழ் இசைக்கருவிகளை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் போன்ற யாழிசைக் கருவிகளின் கம்பீரமான அழகை இவரது ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. “யாழிசைக்கும் பாணர்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் யாழ் கருவியை இசைத்துப் பரப்பிவந்தார்கள். யாழ்தேவிக்குக் கோயில் இருந்ததாகவும், பின்னாளில் அது காணக் கிடைக்காமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனவே அச்சில் இருந்த யாழ் ஓவியங்களை அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றில் தேடிப் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை ஓவியங்களாக்கினேன். திருவாரூர் கோயிலில் இருக்கும் தோற்கருவியான பஞ்சமுக வாத்தியத்தையும் என் ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிறேன். தற்போது, பறையாட்டத்தின் பல கூறுகளை ஓவியங்களாக்க முயன்றுவருகிறேன். எந்தக் கலையாக இருந்தாலும் மானுட மேம்பாட்டுக்காகப் படைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதை நோக்கித்தான் என்
பயணம்” என்கிறார் வீரசந்தானம்.
நடிகர் வீரசந்தானம்:
ஓவியராக மட்டுமின்றி நடிகராகவும் தன் கலைப் பணியைச் சிறப்பாகச் செய்தவர் வீரசந்தானம். பாலுமகேந்திராவின் சந்தியாராகம் படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்திலும், கௌதமனின் மகிழ்ச்சி படத்திலும் ஓவியர் வீரசந்தானம் நடித்துள்ளார்.
முடிவுரை:

பணியாளராக, குடும்பத்தலைவராக, ஓவியராக, சமூகப்போராளியாக, நடிகராக என தான் வகித்த அனைத்து பொருப்புகளிலும் தலை சிறந்து விளங்கிய சமகால பன்முகக் கலைஞராகத்திகழ்கிறார் ஓவியர் வீர சந்தானம். இவரது ஓவியங்கள் சமூக மேம்பாட்டுக்காகவும், இயற்கைச் சீற்றங்களினால் மக்களுக்கு ஏற்படும் துயரங்களைக் களையவும், இழந்த பண்பட்டுக் கூறுகளை மீட்டெடுக்கவும், பழமையான இசைக்கருவிகளை எதிர்கால சந்ததியினருக்குத் தெரிவிக்கவும் பயன்படுகின்றன. கலைஞர்களின் பணி கலையைக் காப்பதோடு முடிந்துவிடுவதில்லை சமூக மேம்பாட்டுக்கான களப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்னும் கொள்கையாளராக வாழும்  இவரைப் போன்ற கலைஞர்களால்தான் இம்மண்ணில் கலைகள் இன்னும் விளைந்துகொண்டிருக்கின்றன.